கொரோனா வைரஸ் என்கிற பெயர், 2019-ம் ஆண்டில் ஏதோ புதிய பெயர். ஆனால் இன்று நம் வீட்டில் அரிசி, பருப்பு, புளி, மிளகாய் எனச் சொல்வது போல ஒரு சகஜமான விஷயம்.
அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் நம் வாழ்கையில் இரண்டரக் கலந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்கு மத்தியில், சீனா பல நாடுகளோடு வாலாட்டுவது, இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவ வீரர்களை தாக்கியது போன்ற பிரச்சனைகளையும் செய்து இருக்கிறது.
இந்தியா பதிலடி
இந்தியா, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், இந்தியாவின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீனாவை அனுமதிக்கமாட்டேன் எனச் சொன்னது மத்திய அரசு. அதே போல 59 சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து சீனர்களை கதி கலங்கச் செய்தது. சீனாவில் இருந்து மின்சார உபகரணங்களை இறக்குமதி செய்ய அனுமதி மறுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது. சீனாவில் இருந்து சோலார் உபகரணங்களை இறக்குமதி செய்ய கூடுதலாக 20 - 25 % வரி விதிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னது இந்தியா.
அமெரிக்காவும் ஆதரவு
இந்தியா, சீனாவின் 59 அப்ளிகேஷன்களைத் தடை செய்ததை மனமாற பாராட்டி வரவேற்றது அமெரிக்கா. அமெரிக்கா கூட, சீனாவின் சில சமூக வலைதள அப்ளிகேஷன்களுக்கு தடை விதிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறன. சரி, சீன பொருட்களை புறக்கணிக்க இதை எல்லாம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
மருத்துவ உபகரணங்கள்
ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தில், எல்லா நாடுகளும், சீனாவிடம் கோட்டை விட்டு இருக்கிறார்களே? அப்படி என்ன கோட்டை விட்டார்கள்..? என்றால் மருத்துவ உபகரணங்கள். இது என்னங்க புது கதையா இருக்கு என ஆச்சர்யப்பட வேண்டாம். கொரோனா வருவதற்கு முன்பில் இருந்தே, சீனா தான் மருத்துவ உபகரண உற்பத்தி & வியாபாரத்தில் உலக அளவில் தாதாவாக இருந்தது.
சீனா VS மற்ற நாடுகள்
செயற்கை சுவாசக் கருவிகள் (Respirators), அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் மாஸ்குகள் (Surgical Mask), மருத்துவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் மற்ற ஆடைகள் போன்றவைகளில் சீனா தான் டான். கொரோனாவுக்கு முன்பே, மேலே சொன்ன பொருட்கள் வியாபாரத்தில், ஒட்டு மொத்த உலகமே சேர்ந்து விற்கும் அளவை விட, சீனா விற்பனை செய்யும் அளவு மிக அதிகம் என்கிறது Peterson Institute for International Economics மதிப்பீடுகள்.
கொரோனாவுக்குப் பின் மிகப் பெரிய தாதா
ஏற்கனவே மருத்துவ உபகரணங்கள் வியாபாரத்தில் முரட்டு தாதாவாக இருந்த சீனா, கொரோனா வந்த பின், ஈடு இணையற்ற, மருத்துவ உபகரணங்களை தயாரித்து வியாபாரம் செய்யும் மிகப் பெரிய தாதாவாக மாறிவிட்டது. வெறுமனே வாயால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆதாரம் இருக்கா..? என்று கேட்கிறீர்களா.
மாஸ்க் கணக்கு
சீனாவின் வெளி விவகாரத் துறை துணை அமைச்சர் (Vice Minister) மா சாக்சூ (Ma Zhaoxu) "கடந்த மார்ச் - மே வரை சீனா 70.6 பில்லியன் மாஸ்குகளை ஏற்றுமதி செய்து இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார். கடந்த முழு ஆண்டில், ஒட்டு மொத்த உலகத்தில் 20 பில்லியன் மாஸ்குகள் தான் உற்பத்தி செய்து இருக்கிறார்களாம். இதில் பாதி சீனா உற்பத்தி செய்தவைகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குட்டி உதாரணம் மாஸ்க்
கொரோனா காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மாஸ்க் உற்பத்தியை, கடந்த பிப்ரவரி 2020 கால கட்டத்திலேயே 12 மடங்கு அதிகரித்து இருக்கிறதாம். இது போக ஸ்பெஷல் துணி வகையில் தயாரிக்கப்படும் மாஸ்கை, சீனா, முன்பை விட 5 மடங்கு அதிகம் தயாரிக்கும் அளவுக்கும் தன் உற்பத்தி வசதிகளை அதிகரித்து இருக்கிறார்களாம்.
கணக்கு இதோ
தற்போது நாள் ஒன்றுக்கு, சீனாவால் 150 டன் (ஸ்பெஷல் துணி வகைகளில் தயாரிக்கப்படும்) மாஸ்குகளை, தயாரிக்க முடியும் என அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் (Illinois) மாகாணத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தை நடத்தும் பாப் மெக்கல்வைன் (Bob McIlvaine) சொல்லி இருக்கிறார். இந்த 150 டன் என்பது, தற்போது படாத பாடு பட்டு, உயிரை விட்டு அமெரிக்கா தயாரிக்கும் அளவை விட 15 மடங்கு அதிகமாம்.
அமெரிக்காவின் தவறான கணிப்பு
மாஸ்கு வியாபாரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? மக்கள் தொடர்ந்து மாஸ்குகளை எல்லாம் பயன்படுத்தமாட்டார்கள். எனவே ஒரு கட்டத்தில் திடீரென மாஸ்குகளுக்கான தேவை சரிந்துவிடும் என்கிற நோக்கில் அமெரிக்க கம்பெனிகள் மாஸ்கு உற்பத்திகளில் கவனம் செலுத்தவில்லை. முதலீடும் செய்யவில்லை. இந்த தவறான கணிப்பை நினைத்து இப்போது வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் அமெரிக்க கம்பெனிகள்.
சீனாவின் தொலை நோக்குப் பார்வை
சீனா ஏதோ ஒரு சில மாதங்களில், மருத்துவ உபகரணங்களின் டான் ஆகிவிட வில்லை. பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே, மருத்துவ உபகரணங்களில் தன்னை வளர்த்து எடுத்துக் கொள்ள அடிக்கல் நாட்டிவிட்டது. சீன அரசு, மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு மலிவு விலையில் நிலத்தைக் கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது அரசின் உதவிகள் பட்டியல்.
ஊக்குவிப்பு
நிலத்தை மட்டும் கொடுத்தால் போதுமா..? அடுத்தடுத்து பல்வேறு கடன் மற்று மானியங்களை மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அள்ளித் தெளித்தது. உற்பத்தி செய்த மருத்துவ சாதனங்களை விற்க, சீனாவில் இருக்கும் மருத்துவமனைகளையே வாடிக்கையாளர்களாக மாற்றி கொடுத்தது. மெல்ல வெளி உலகத்துக்கு வந்து இன்று, மருத்துவ உபகரணங்களின் தாதாவாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதை நிச்சயம் சீனாவின் அதிபுத்திசாலித் தனம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
மற்ற நாடுகள்
அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை, இன்று சீனாவை கடுமையாக எதிர்க்கும் எல்லா நாடுகளும், இப்போது தான் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். எப்போது உள்நாட்டு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து, சீனாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதை குறைப்பது? இந்த கடினமான கேள்விக்கு விடை காணாமல் சீன புறக்கணிப்பு சாத்தியம் தானா? என்பதை அரசாங்கங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். சாத்தியப்படுத்தினால் தான் சீனாவுக்கு வர்த்தக ரீதியாக பதிலடி கொடுக்க முடியும் என்பதை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பொருத்திருந்து பார்ப்போம்.