உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக வெளிவர நிலையில் 2வது கொரோனா தொற்று அலை மக்களையும் அரசையும் பயமுறுத்தி வருகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவின் மூலம் பல நாடுகளில் ஊழியர்கள் பணிநீக்கம் மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் உலகில் ஒரு நாடு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தித் தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.
வளர்ச்சி பாதையில் சீனா
சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020ல் சீனாவின் பொருளாதாரம் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் ஆண்டின் முடிவில் 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.
அமெரிக்கா முதல் ஜப்பான் வரை
இதேவேளையில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் இன்னமும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் 2வது அலைக்கு மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பொருளாதாரம்
2019ஆம் கடைசிக் காலாண்டில் சீனாவில் கொரோனா தொற்று துவங்கிய நிலையில் மார்ச் காலாண்டில் இந்நாட்டின் பொருளாதாரம் -6.8 சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் 2020ல் கடைசிக் காலாண்டில் 6.5 சதவீதம் வரையில் உயர்ந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சீனாவின் பொருளாதாரம் தொடர் வளர்ச்சியில் இல்லையென்றாலும் வருடத்தின் முடிவில் 2.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதி
இதேபோல் பல மாதங்களாக முடங்கியிருந்த சர்வதேச உற்பத்தி மற்றும் வர்த்தகச் சந்தைகள் தற்போது மீண்டும் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ள நிலையில், சீனாவின் உற்பத்தி நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இதுமட்டும் அல்லாமல் 2020ல் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் சீனாவில் தற்போது மீண்டும் 2வது அலையாகக் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் பல பகுதிகளில் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
சீனா தான் மாஸ்
ஒருபக்கம் வர்த்தக வளர்ச்சி, மறுபக்கம் கொரோனா தொற்று அதிகரிப்பு எனச் சீனா தள்ளாடி வரும் நிலையில் இதன் எதிரொலி மார்ச் காலாண்டில் தெரியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் 2020ஆம் ஆண்டு பொருத்த வரையில் உலகிலேயே சீனா தான் மாஸ்.