27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China?

பெய்ஜிங், சீனா: உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக சீனா கடந்த 27 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இன்று கூட உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு தான் முதலிடம்.

சீனா கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் 6.2 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார்கள். உலகமே சீனாவைப் பார்த்து "நம்மளால இவிய்ங்கள மாதிரி வளர முடியலயே" என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் சீனாவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க, சீனாவோ தன் முந்தைய 27 ஆண்டுகால வளர்ச்சியைப் பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முந்தைய வளர்ச்சி

முந்தைய வளர்ச்சி

சீனாவில் 1992-ம் ஆண்டில் இருந்து பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி என்றால் என்ன..? எஎன்பதற்கான முழு அர்த்தத்தை உலகுக்குக் காட்டினார்கள். 1992-ல் இருந்து 2019 வரை எப்போதுமே சீனாவின் ஜிடிபி 6.2 சதவிகிதம் என்கிற கொசுறு வளர்ச்சி விகிதங்களைத் தொட்டதில்லை. பல சமயங்களில் ஒவ்வொரு காலாண்டும் 8 சதவிகித வளர்ச்சி என்பதை அசால்டாகத் தொட்டார்கள். ஒரே ஆண்டில் 14 சதவிகித பொருளாதார வளர்ச்சி கண்ட காலங்களும் உண்டு. உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்த 2008-ல் கூட சீனாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.4 சதவிகிதமாக இருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஆனால் இப்போது தன் 27 வருட சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 6.2 என்கிற அளவில் சீனப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டிருப்பதைக் கண்டு வருந்திக் கொண்டிருக்கிறார்களாம்.

சந்தேகம்

சந்தேகம்

சீனா தன் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து வருத்தப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், சீனா கொடுக்கும் பொருளாதாரத் தரவுகள் சரி தானா எனவும் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் உலக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அனலிஸ்டுகள். காரணம் அமெரிக்கா போன்ற வளர்ந்த வலுவான பொருளாதாரங்கள் கூட ஓரளவுக்கு நல்ல வளர்ச்சியைக் காணாத போது, சீனா மட்டும் 6.2% என பிரம்மாண்ட வளர்ச்சி கண்டால் சந்தேகம் வரத் தானே செய்யும்.

வர்த்தகப் போர்

வர்த்தகப் போர்

இந்த 6.2 சதவிகிதமும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் கண்ட வளர்ச்சி தான். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் சீன அரசு ரத்து செய்திருந்த வரி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் செய்திருந்த செலவீனங்களும் தான், பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. இதனால் சீன மக்களுமே, சீன அரசின் மீது பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மே 10, 2019 அன்று வர்த்தகப் போர் தொடர்பான பேச்சு வார்த்தைகள் அமெரிக்கா உடன் சுமூகமாக முடியாததால் ட்ரம்ப் தடாலடியாக சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்திவிட்டார். இதனால் சீன மக்களின் நம்பிக்கையும் பெரிய அளவில் சரிந்துவிட்டது.

கட்டுமான துறை

கட்டுமான துறை

தற்போது சீன பொருளாதாரத்தை உள்கட்டமைப்புகளைச் செய்யும், கட்டுமானத் துறை தான் பெரிய அளவில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுமான துறைக்கான பணத்தை உள்ளூர் அரசு அமைப்புகள், பிராந்திய அரசு அமைப்புகள் மற்றும் தேசிய அரசு அமைப்புகள் தான் கடனாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் ரீடெயில் வியாபாரமும் கட்டுமானத்தில் சொல்லிக் கொள்ளும் படி நடந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.

வர்த்தகத் துறை

வர்த்தகத் துறை

ஆனால் சீன பொருளாதாரத்தையே தாங்கிப் பிடிக்க வேண்டிய வர்த்தகத் துறை தலைகீழாக இருக்கிறது. சீன வர்த்தகத் துறை தான், இப்போது சீன பொருளாதாரத்துக்கே மிகப் பெரிய முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 27 ஆண்டு கால அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததும் இதே சீன வர்த்தகம் தான். ஜூன் 2018-ஐ விட ஜூன் 2019-ல், சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி சுமார் 1.3 சதவிகிதம் சரிந்திருக்கிறதாம். இறக்குமதி சுமார் 7.3% சரிந்திருக்கிறதாம்.

ஏன்

ஏன்

சீன - அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவால் இழந்த வியாபாரத்தை போல, உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடங்கிய ஆசிய நாடுகள் வரை பல நாடுகளின் தேவை (சீனாவிடம் கொடுக்கும் ஏற்றுமதி ஆர்டர்) குறைந்திருக்கிறதாம். வர்த்தகத்தை நம்பி இருக்கும் பொருளாதாரத்தின் அளவு கடந்த ஒரு ஆண்டில் 3.4% சரிந்திருப்பதாக, சில நாட்களுக்கு முன் சிங்கப்பூர் சொன்னதே சீனாவின் சரிவுக்கும் சாட்சியமாக இருக்கிறது. இப்படி உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலை. அதோடு சீனாவில் வங்கிப் பிரச்னைகள் வேறு கை கோர்த்திருப்பதால், சீன பொருளாதார சிக்கல்கள் வேறு லெவல்களைத் தொட்டிருக்கின்றன.

வங்கிச் சிக்கல்கள்

வங்கிச் சிக்கல்கள்

Baoshang Bank என்கிற வங்கியின் கடன் சுமைப் பிரச்னையைத் தீர்க்க, சீன அரசே அந்த வங்கியை ஏற்று நடத்த முன் வந்திருப்பது சீனாவின் நிழல் வங்கிகளுக்கு ஒரு கறுப்பு சாட்சியம். ஒரு வங்கி எப்படி இயங்கும்..? டெபாசிட் தாரர்களிடம் 8% வட்டி தருவதாகச் சொல்லி வாங்கும் பணத்தை 12% கடனாகக் கொடுத்து வங்கிக்கு லாபம் ஈட்டுவார்கள். ஆனால் இன்று பல சீன வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளுக்கு சொன்ன வட்டியைக் கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் சீன வங்கியில் பணியாற்றும் நிதி அதிகாரிகள். இன்னும் சொல்லப் போனால் டெபாசிட் செய்த அசல் தொகையைக் கூட கொடுக்க முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் கொடுத்த கடன் திரும்ப வரவில்லை, கடனுக்கான வட்டி வரவில்லை என்று தானே பொருள்..?

பாதுகாப்பு

பாதுகாப்பு

மேலே சொன்னது போல சாதாரண மக்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு Baoshang Bank போன்ற ரிஸ்க் அதிகம் உள்ள வங்கிகளில் தங்கள் பணத்தைப் போடாமல், அரசு வங்கிகளில் நிலையான வருமானத்தில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் எழுந்து கொண்டிருக்கிறது. மக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போடும் டெபாசிட் பணத்தை, சீன அரசு நிறுவனங்களுக்கே கடனாகக் கொடுக்கிறது அரசு வங்கிகள். இப்படி அரசு நிறுவனங்களுக்கு, அரசு வங்கிகள் பெரிய அளவில் நிதி உதவி செய்து வருவதால், சீன தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சீன ரியல் எஸ்டேட் துறையில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு வேண்டுகோள்

அரசு வேண்டுகோள்

சீன அரசு, சீனாவின் பெரிய அரசு வங்கிகளைத் தொடர்ந்து சிறு வணிகர்களுக்கு கடன் கொடுக்கச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சீன அரசு வங்கிகளும் ஒரு அளவுக்கு மேல் அதைச் செய்வதற்கு தயாராக இல்லை. காரணம் ஊழல் வழக்குகள். இன்று கடன் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் அரசு நாளை தனியாருக்கு அதிக கடன் கொடுப்பதால் நாட்டில் பிரச்னை ஏற்படுகிறது, வாராக் கடன் அதிகரித்துவிட்டது என்றால், பெரிய கடன் கொடுத்தவர்களை வளைத்து வளைத்து விசாரிப்பார்கள். ஆகையால் பயந்து கொண்டு கடன் அதிகாரிகள் எல்லாம் பெயருக்கு கொஞ்சம் தனியாருக்கு கடன் கொடுத்துவிட்டு, பாதுகாப்பாக கடனை திருப்பிச் செலுத்தும் அரசு நிறுவனங்களுக்கே கடன் கொடுக்கிறார்களாம்.

மத்திய வங்கி

மத்திய வங்கி

இந்திய வங்கிகளை ஆர்பிஐ நிர்வகிப்பது போல, சீன வங்கிகளை சீன மக்கள் வங்கி (People Bank of china) தான் நிர்வகிக்கிறார்கள். சீனாவின் நிதி நிலை, பணக் கொள்கை முடிவுகள் என எல்லாவற்றையும் இவர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்கள். Baoshang Bank பிரச்னைக்குப் பிறகும் கூட எல்லாவற்றையும் கவனமாக கண்காணித்துக் கொண்டிருக்கும் சீன மத்திய வங்கி, இதுவரை வாய் திறக்காமல் மெளனம் சாதித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார வல்லுநர்களோ பணவீக்கம் போன்ற மற்ற பொருளாதாரக் குறியீடுகளை கவனமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்களாம். சீன மக்களோ, வீட்டு வாடகை, உணவு போன்ற அன்றாட தேவைகளுக்கான செலவுகளின் விலை கொடூரமாக அதிகரித்துக் கொண்டிருப்பதாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சீனர்கள்.

ஒட்டு மொத்தத்தில்

ஒட்டு மொத்தத்தில்

சீனாவில் தொழிற் துறை உற்பத்தி சரிந்திருக்கிறது, வீடுகள் விற்பனை பாதாளத்தில் இருக்கிறது. புதிதாக வீடு வாங்க விரும்புகிறவர்கள் அடிமாட்டு விலைக்கு வீட்டைக் கேட்கிறார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க சீன கட்டுமானத் துறையினர் தயாராக இல்லை. கார் நிறுவனங்கள் உற்பத்தியை பெரிய அளவில் குறைத்திருக்கிறார்கள். கார் விற்பனையும் சரிந்து கொண்டிருக்கிறது. சீன வர்த்தகத்தைச் சரி செய்ய தன்னால் முடிந்த வரை முயற்சிக்கிறது இருப்பினும் சீனாவின் ஏற்றுமதி ஏற்றம் காண்பதாகத் தெரியவில்லை. இத்தனை சிக்கல்களையும் தீர்க்க நுகர்வு என்கிற ஒற்றை ஆயுதத்தைத் தான் நம்பி இருக்கிறார்கள் சீனர்கள்.

சிக்கல்கள்

சிக்கல்கள்

சீன தேசிய புள்ளியியல் அமைப்பின் பேச்சாளர், மா செங்யொங் (Mao Shengyong) சீன வர்த்தகத்தின் நிலை மோசமாக இருப்பதால், சீனா தற்போது பெரும்பாலும் நுகர்வை நம்பித் தான் இருப்பதாகச் சொல்கிறார். இப்படி உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த வேண்டும் என்றால் மக்கள் கையில் பணம் வேண்டும். அதற்கு மக்களுக்கு நல்ல வேலை வேண்டும். ஆனால் சீனாவில் இருக்கும் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

சீன அமைச்சகம்

சீன அமைச்சகம்

சில தினங்களுக்கு முன், சீன அரசின் வணிகத் துறை அமைச்சகப் பேச்சாளர் Gao Feng "சீன அரசு ஒரு நிலையான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட, முதலீட்டை கணிக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்க கடுமையாக பணியாற்றி வருகிறது. இதுவரை சீனாவில் இருந்து பெரிய அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் வெளியேறவில்லை" எனப் பேசி சீனா மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்று இருக்கிறார்.

சீன சிக்கல் அரசு முக்கல்

சீன சிக்கல் அரசு முக்கல்

சீன பொருளாதாரத்தை ஓட வைக்க, சீன அரசு, தன்னால் முடிந்த வரை பணத்தை வாரி உள்கட்டமைப்புத் திட்டங்களில் இறைக்கிறது. அதிவேக ரயில்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் என சீனாவின் குட்டி குட்டி நகரங்களைக் கூட இணைக்க பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. இது பாராட்டுக்குரியது தான். ஆனால் இந்த உள்கட்டமைப்பு திட்டங்களில், பல திட்டங்களுக்கு செலவிடம் தொகையை மீட்கவே முடியாது என பயப்படுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கடன் கொடுக்கும் வங்கி அதிகாரிகள்.

ட்ரம்ப் ட்விட்

"அமெரிக்கா, சீனா மீது விதித்திருக்கும் இறக்குமதி வரியால் பல நிறுவனங்கள் சீனாவை விட்டு, இறக்குமதி வரி இல்லாத நாட்டுக்கு மாற விரும்புகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சீனாவை விட்டு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் சீனா எங்களோடு சமாதானம் பேச வருகிறது" என கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

எப்போதும் பாயும் சீனப் புலி, இப்போது பதுங்குகிறது. அதீத உயரத்தில் பறக்கும் அமெரிக்க பருந்தும் இப்போது சீனப் புலியை நிலையாகப் பார்க்கிறது. மேற்கொண்டு நடப்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

உண்மை தான்

உண்மை தான்

ட்ரம்ப் சொல்வது போல அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் அல்லது குறைந்த விலையில் பொருளை தயாரிக்கும் நோக்குடன் சீனாவுக்குள் காலடி எடுத்து வைத்த பல நிறுவனங்கள், தங்கள் பொருட்களை அமெரிக்காவுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்கிறார்கள். இதில் ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். ஆக இந்த யோசனையோடு கடை போட்டவர்களில் பலரும் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்று விடுவது அல்லது சீனாவை விட்டு, இந்தியா வங்க தேசம் போன்ற குறைந்த தொழிலாளர் செலவு கொண்ட நாடுகளுக்கு மாற்றுவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சில நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யாமல் சீனா, இந்தியா, வங்க தேசம் போன்ற பெரிய சந்தை கொண்ட நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய, தொடர்ந்து சீனாவிலேயே உற்பத்திய செய்யத் திட்டமிடுகிறார்கள்.

நோ பதில்

நோ பதில்

"நீ அடிச்சா நானும் திருப்பி அடிப்பேன்" என விதித்த வரிக்கு எதிர் வரி விதித்து தில் காட்டிய அதே சீனா தான் இப்போது பதில் சொல்லாமல் ராஜ தந்திரமாக செயல்படுகிறது. தற்போது சீனாவுக்கு, தன் பொருளாதாரத்தை சரி செய்ய கண் முன் இருக்கும் வழிகளில் அமெரிக்கா உடன் சமாதானமாகப் போவது தான் எளிய வழியாக இருக்கிறது. அமெரிக்காவோடு மட்டும் சமாதானம் கையெழுத்தாகி, மீண்டும் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டால் ஓரளவுக்கு சீன வர்த்தகம் (ஏற்றுமதி) சரியாகும். எனவே தான் ட்ரம்பின் ட்விட்டுக்கு பதில் சொல்லாமல் சிரித்த முகத்தோடு சமாதான உடன்படிக்கைக்கு காத்திருக்கிறது சீனா.

எப்போதும் பாயும் சீனப் புலி, இப்போது பதுங்குகிறது. அதீத உயரத்தில் பறக்கும் அமெரிக்க பருந்தும் இப்போது சீனப் புலியை நிலையாகப் பார்க்கிறது. மேற்கொண்டு நடப்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+