அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் பதற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில தினங்களுக்கு முன்பு தான் சீன ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி, மூன்று சீன நிறுவனங்களை நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
விரைவில் இந்த நிறுவனங்கள் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியானது.
மேற்கூறிய 3 நிறுவனங்களுக்கும் சீன ராணுவத்துடன் தொடர்பிருப்பதாக, அமெரிக்காவின் பென்டகன் கூறியது. அதுமட்டும் அல்ல, இந்த சீன நிறுவனப் பங்குகளில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தடையும் விதிக்கப்பட்டது.
தேச பாதுகாப்பு கருதி தடை
ஏற்கனவே அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பைக் காரணம் காட்டி டிக் டாக், ஹுவாவே, டென்சென்ட் என பல நிறுவனங்களை அமெரிக்கா அரசு தடை செய்தது. இது இந்த இரு பெரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும் விதமாக இருந்தது. மேற்கூறிய இந்த சீன நிறுவனங்கள் ஜனவரி 11-க்குள், சீனா மொபைல், சீனா டெலிகாம், சீன யுனிகாம் ஹாங்காங் ஆகிய நிறுவனங்களின் பங்குகள், நியூயார்க் பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படும் என உறுதி செய்துள்ளது.
சீனாவின் எதிர்பார்ப்பு
ஆனால் இப்படி ஒரு கடினமான நிலையில், சீனா இந்த ஆண்டிலாவது அமெரிக்காவிடம் இருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பாப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி பேச்சு வார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க வாஷிங்டனை வலியுறுத்தியுள்ளார். மேலும் இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையேயான புதிய உறவினை உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விருப்பம்
மேலும் இந்த புதிய கொள்கையின் மூலம் அமெரிக்கா - சீனா இடையேயான ஒரு தொடர்ச்சியான, வலுவான நிலையை கொண்டு வர முடியும். நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விருப்பமாக உள்ளோம் என சீன அமைச்சகத்தின் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு சீனா மீதான அமெரிக்காவின் கொள்கைகள் தவறானது. இதுவே சமீபத்திய பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் சீன கூறியுள்ளது.
எது எடுத்தாலும் பிரச்சனை
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் கீழ், அமெரிக்கா - சீனா இடையேயான உறவுகள் மிக மோசமடைந்துள்ளன. குறிப்பாக ஆரம்பத்தில் வர்த்தகம் தொடங்கி, தொழில்நுட்பம், ஹாங்காங் பிரச்சனை மற்றும் கொரோனா பெருந்தொற்று என எது எடுத்தாலும் பிரச்சனைகளாகவே உருவெடுத்து வருகின்றன.
மக்கள் எதிர்பார்ப்பு
உண்மையில் சீனா மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாகவே உள்ளது. ஏனெனில் உலகின் முதல் இரு பெரும் பொருளாதார நாடுகளின் வர்த்தக போர், சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இது உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆக இந்த ஆண்டிலாவது சூமுக நிலையினை எட்டினால் நல்லது தானே.