அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியாக பிரச்சனைகள் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் வர்த்தகம் தொடங்கி, பின்பு எது எடுத்தாலும் பிரச்சனையாக மாறத் தொடங்கியது.
இதற்கிடையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் வருக்கைக்கு பின்பாவது இந்த பிரச்சனைகள் குறையலாம். மோதல் மாறலாம் என்றெல்லாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதனால் சீனாவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் சீனாவின் மீது அமெரிக்கா மீண்டும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து விட்டது.
அமெரிக்காவின் புதிய மசோதா
தற்போது அமெரிக்க பங்கு சந்தைகளில் உள்ள சீன நிறுவனங்களின் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக, சீன நிறுவனங்களுக்கு எதிரான மசோதா ஒன்றை அமெரிக்கா புதன்கிழமையன்று நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே இது குறித்தான மசோதாவை அமெரிக்கா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
பங்கு சந்தையில் இருந்து நீக்கலாம்
அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து சில சீன நிறுவனங்களை நீக்கும் மசோதாவை கடந்த ஆண்டிலேயே, குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் ஜான் கென்னடி, ஜனநாயக கட்சியை சேர்ந்த கிறிஸ்வான் ஹோலன் ஆகிய இருவரும் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டத்தின் படி, அமெரிக்க சட்டங்களை பின்பற்றாத சீன நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தைகளிலிருந்து நீக்க முடியும்.
புதிய மசோதா என்ன சொல்கிறது?
இந்த மசோதாவின் படி, அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், அந்நிய அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும் அமெரிக்காவின் பங்கு சந்தை வாரியத்தின் கணக்கு தேவைகளுக்கு ஏற்ப இணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இணங்கின. ஆனால் சீனா நிறுவனங்கள் அதனை செய்யவில்லை.
எத்தனை சீன நிறுவனங்கள்?
காங்கிரஸ் கமிஷனின் புள்ளி விவரங்கள் படி, அக்டோபர் தொடக்கத்தில் 217 சீன நிறுவனங்கள், அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியிடப்பட்டுள்ளன. பங்கு விலைகளின் அடிப்படையில் அவற்றின் மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர் மதிப்புடையவை. அமெரிக்க பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள சில நிறுவனங்கள் ஆசிய பங்கு சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.
பங்குகள் விலை குறையலாம்
சீனா நிறுவனங்கள் அமெரிக்க பங்கு சந்தையில் டீலிஸ்ட் செய்யப்பட்டால், ஆசிய பங்கு சந்தைகளில் உள்ள அதன் பங்குகள் மதிப்பு குறையலாம். இந்த பட்டியலில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவாகும். இந்த நிறுவனம் கடந்த 2014ல் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. இது அப்போதே 25 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது. இப்படி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் கூட, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையினால் பெரும் பின்னடைவை சந்திக்கலாம்.