பெய்ஜிங்: சீனாவின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி தரத்தில் ஏற்பட்ட தொடர் சரிவால் 25 வருடப் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி சீனாவை மட்டும் அல்லாமல் உலகச் சந்தையையும் கதிகளங்க வைத்தது.
இத்தகைய சூழ்நிலையிலும் இந்நாட்டின் அன்னிய முதலீடு அளவு 2015ஆம் ஆண்டை விடவும் 5.6 சதவீதம் அதிகமாக அளவில் 126 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு
பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும் சீன பங்குச்சந்தை கடந்த சில மாதங்களில் 3 முறை ஆட்டோமேடிக் ஷட்டவுன் ஆனது.
ஆனாலும் இந்நாட்டின் சேவை மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையின் மீது முதலீட்டாளர்களின் அதிகப்படியான நம்பிக்கையின் காரணமாகச் சீனாவில் அன்னிய முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது எனச் சீனா வர்த்தகத் துறை அமைச்சர் Gao Hucheng தெரிவித்தார்.
126 பில்லியன் டாலர்
2015ஆம் ஆண்டில் மட்டும் சீனா மிகப்பெரிய சரிவில் திளைத்த போதும் 5.6 சதவீத உயர்வுடன் 126 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது.
இத்தொகையில் 70 சதவீத முதலீடு சேவை மற்றும் உயர் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தது குறிப்பிடத்தக்கது.
துறை சார்ந்த அன்னிய முதலீடு..
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் நிதியியல், கல்வி, கலாச்சாரம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகம் பெற இத்துறையில் முதலீட்டுக்கான சட்டத் திட்டங்களில் அதிகளவிலான தளர்வை அறிவிக்க உள்ளதாகவும் Gao Hucheng தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி
2014ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் 6.9 சதவீதமாகச் சரிந்து வளர்ச்சியில் 25 வருட பின்னுக்குத் தள்ளப்பட்டது.
நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி இலக்காக 6.5 முதல் 7 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது சீனா.