சீன அதிபரான ஜி ஜின்பிங் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா தொற்று லாக்டவுன் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் சீனாவின் முக்கிய நகரங்களில் வீட்டில் முடங்கியிருந்த மக்கள் அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் வேலைக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.
சீனாவுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்..?
ஷாங்காய்
சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் கடைகள், அலுவலகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவதால் சீனாவின் மந்தமான பொருளாதாரம் விரைவில் சரிவில் இருந்து மீண்டு வரும் எனச் சீன அமைச்சரவை தலைவர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் முதல் லாக்டவுன்
மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஷாங்காய் நகரம் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், பல பில்லியன் டாலர் வர்த்தகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. குறிப்பாகத் துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்ட காரணத்தால் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
50% பெரிய நிறுவனங்கள்
இந்நிலையில் இன்றைய தளர்வுகளுக்குப் பின்பு ஷாங்காயில் உள்ள 9,000 பெரிய தொழில்துறை நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மீண்டும் இயங்க துவங்கியுள்ளது எனச் சீன நாட்டின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் புள்ளியியல் இயக்குனர் ஃபூ லிங்ஹுய் கூறினார்.
ஜி ஜின்பிங் பதவி
கடந்த ஒரு வாரமாகச் சீன சமுகவலைத்தளத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தேவையில்லாமல் விதித்த காரணத்தால் சீன பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜி ஜின்பிங் தான் என்றும், விரைவில் அவர் பதவி விலகுவார் என்றும் கருத்துக்களை உலா வந்தது.
ஜீரோ கோவிட் பாலிசி
இந்நிலையில் சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான ஜீரோ கோவிட் பாலிசியை உடனடியாகத் தளர்த்த அறிவிப்பு விடுத்துள்ளது. தற்போது ஷாங்காய், பெய்ஜிங் உட்படப் பல முக்கிய நகரங்கள் லாக்டவுன் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
சீன பொருளாதாரம்
இந்த லாக்டவுன் மூலம் சீன பொருளாதாரம் இந்த ஆண்டு 2 சதவீதத்திற்கும் குறைவான அளவில் மட்டுமே வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது. ஆனால் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு 8.1 சதவீத வளர்ச்சியை அடைந்த நிலையில் இந்த ஆண்டு 5.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது.
சீன அரசு
ஆனால் தற்போது வெளியாகியுள்ள 2 சதவீத பொருளாதார வளர்ச்சி, 2 வருட சரிவில் ரீடைல் விற்பனை, 2.9 சதவீத உற்பத்தி சரிவு, பல வருட சரிவில் வாகன விற்பனை ஆகியவை அந்நாட்டின் அரசை பயமுறுத்தியுள்ளது.
இந்தியா
இந்த நிலையில் தான் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் சரக்குகள் தாமதம் இல்லாமல் வேகமாக வரக்கூடும். இதனால் இந்தியாவில் மூலப்பொருள் தட்டுப்பாடு, உதிரிபாகங்கள் தட்டுப்பாடு, சப்ளை செயின் பிரச்சனை விரைவில் குறையும்.