உலகிலேயே அதிக மதிப்புடைய மதுபான தயாரிப்பு நிறுவனமான Kweichow Moutai-ன் முன்னாள் தலைவர் யுவான் ரென் காவ் லஞ்சம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள காரணத்தால், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை அளித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து யுவான் ரென் காவ்-வுக்குச் சொந்தமான வங்கி கணக்கில் இருக்கும், சொத்துக்கள் என அனைத்தையும் அரசு கைப்பற்றியுள்ளது.
சீன ஜி ஜின்பிங் அரசு
சீனாவில் லஞ்சம் அதிகமாக இருந்த நிலையில், ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடுமையான தண்டனை உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் பெருமளவிலான லஞ்சம் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட காலத்திற்குப் பின்பு மிகவும் பிரபலமான ஒரு தலைவர் லஞ்சம் வழக்கில் சிக்கியுள்ளது சீனா-வை தாண்டி உலகம் முழுக்கப் பிரபலமானது.
மவுடாய் மதுபான நிறுவனம்
Kweichow Moutai நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் இருந்த யுவான் ரென் காவ் 1994ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மற்றும் ஆடம்பர மதுபானமான Moutai baijiu விற்பனை செய்ய டீலர் ஷிப் அளிப்பதற்காக அதிகளவிலான லஞ்சம் பெற்று உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
யுவான் ரென் காவ் லஞ்சம்
யுவான் ரென் காவ்-விடம் சீன அரசு நடத்திய விசாரணையில் பணமாகவும், சொத்துக்களாகவும் சுமார் 113 மில்லியன் யுவான் அதாவது 17.5 மில்லியன் டாலர் அளவிலான தொகை லஞ்சமாகப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆடம்பர மதுபானம் மாவுடாய் baijiu
மாவுடாய் baijiu என்பது 53 சதவீதம் ஆல்கஹால் கொண்ட மதுபானம், இது வெள்ளை மற்றும் சிவப்புப் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும். இந்த மதுபானம் தான் சீனாவின் அரசு மற்றும் வர்த்தகக் கூட்டங்களில் அளிக்கப்படும் மிகவும் முக்கியமான மற்றும் ஆடம்பரமான மதுபானம். இந்த மதுபானம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மாவோ-விற்கு மிகவும் பிடித்த மதுபானமாகவும் விளங்கியது.
2013ல் அரசு கட்டுப்பாடு
2013ல் சீன அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகள் அதிகளவிலான செலவுகளைச் செய்வது அறிந்து உணவு முதல் மதுபானம் வரையில் அதிகளவிலான கட்டுப்பாடுகளை ஜி ஜின்பிங் அரசு விதித்தது. இதனால் 2013 காலகட்டத்தில் Kweichow Moutai நிறுவன பங்குகளும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.
அதிக மதிப்புடைய மதுபான நிறுவனம்
ஆனாலும் இன்று வரையில் உலகிலேயே அதிக மதிப்புடைய மதுபான நிறுவனங்கள் பட்டியலில் மவுடாய் முதல் இடத்தில் தான் உள்ளது. மவுடாய் நிறுவனத்தைத் தொடர்ந்து ABInBev, டியாஜியோ,
ஹைனேகன் ஆகிய நிறுவனங்கள் உள்ளது. சொல்லப்போனால் 3 நிறுவனங்களைச் சேர்த்தாலும் மவுடாய் நிறுவனத்தை நெருங்க முடியாது.
லாய் ஜியாவ்மின் மரண தண்டனை
சீனாவில் ஜனவரி மாதம் தான் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவரான லாய் ஜியாவ்மின் என்பவருக்கு லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப்பட்டது. சீன அரசு ஒருப்பக்கம் டெக் நிறுவனங்களைச் சூறையாடினாலும் மறுப்புறம் லஞ்ச ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகிறது.