சீனா அரசு இளம் தலைமுறையினரின் கல்வி மற்றும் நலனில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்கும் எளிதான முறையில் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஆன்லைன் கல்வி சேவை
சீனாவில் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்கள் பள்ளிக் கல்வி துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியது மட்டும் அல்லாமல் பெற்றோர்களுக்கு அதிகளவிலான கல்வி செலவுகளைத் தலையில் கட்டி வந்தது.
ஆன்லைன் கேம்
இதேவேளையில் இளம் தலைமுறையினர் ஆன்லைன் கேம் விளையாடுவதில் மூழ்கிப்போய் உள்ளனர். இந்த இரு பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாகச் சீன அரசு கடந்த சில மாதங்களாக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
NGO நிறுவனமாக மாற்றம்
சீனா அரசு சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டில் இருக்கும் அனைத்து ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்களையும் இனி லாபம், வருமானம் கொண்டு இயங்கக் கூடாது என்றும், அனைத்து நிறுவனங்களும் இனி வரும் காலத்தில் NGO நிறுவனமாக மட்டுமே இயங்க வேண்டும் என அறிவித்துள்ளது.
பெற்றோர்களுக்குச் சுமை குறைந்தது
இதன் மூலம் பெற்றோர்களுக்கு இருந்த மிகப்பெரிய நெருக்கடி குறைந்து அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் கல்வி சேவைகள் கிடைத்து வருகிறது. NGO என்பதால் முதலீட்டை பெற்று சேவையை அளிக்க முடியும் ஆனால் சேவைகளை விற்பனை செய்ய முடியாது.
குழந்தைகளின் நலன்
இதனால் பல நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் அரசுக்கு நிறுவனங்கள் குறித்துக் கவலை இல்லை, மக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் முக்கியம் என இந்த முடிவை எடுத்துள்ளது.
3 மணிநேரம் மட்டுமே
இதைத் தொடர்ந்து சீன அரசு நேற்று 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் படிப்பில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும் எனக் கண்ணோட்டத்துடன், 18 வயதுக்குக் கீழ் உள்ள அனைவரும் வாரத்திற்கு 3 மணிநேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட வேண்டும் என்ற புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
வீடியோ கேம்முக்கு அடிமை
சீனாவில் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் அதிகளவில் ஆன்லைன் கேம் மற்றும் வீடியோ கேம்-களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதைத் தடுக்கவே சீன அரசு இப்புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு பெற்றோர்களுக்கும், கல்வி அமைப்புகள் பெரிய அளவில் வரவேற்று இருந்தாலும், இளம் தலைமுறையினர் சோகத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
டென்சென்ட் பங்குகள் வீழ்ச்சி
இந்த அறிவிப்பின் மூலம் ஆன்லைன் கேம் மற்றும் மொபைல் கேமிங் சேவைகளின் கீழ் தனது சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ள டென்சென்ட் நிறுவனத்தின் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என ஜெப்ரீஸ் கணித்துள்ளது. இதேபோல் டென்சென்ட் பங்குகள் 3 சதவீதம் வரையிலான சரிவையும், டென்சென்ட் முதலீடு செய்துள்ள Krafton பங்குகள் 3.5 சதவீதமும் இன்றைய வர்த்தகத்தில் சரிவைப் பதிவு செய்தது.
சந்தை ஆய்வுகள்
இதன் பின்பு டென்சென்ட் நிறுவனத்தில் 18 வயதிற்கும் கீழ் ஆன்லைன் கேம் விளையாடுவோர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு, இதனால் நிறுவனத்தின் வருவாய் கணிசமான அளவில் மட்டுமே பாதிக்கப்படும் எனச் சந்தை ஆய்வுகள் வெளியான காரணத்தால் சரிவில் இருந்த பங்குகள் மீண்டும் வளர்ச்சி அடைந்தது.
மக்கள் கருத்து
இந்தியாவிலும் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்பது குறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.