இந்தியா என்கிற அகண்ட நிலப்பரப்பில், பல பண்பாட்டு கலாச்சாரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த நாட்டின் எல்லைகளாக, சில நாடுகள் சூழ்ந்து இருக்கின்றன.
தென் திசை இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டு இருந்தாலும், இலங்கை, மாலத் தீவுகள் போன்ற குட்டி குட்டி நாடுகள் இருக்கின்றன.
மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பெரும்பாலும் பாகிஸ்தான், கொஞ்சமே கொஞ்சம் ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், மியான்மர், வங்க தேசம் போன்ற நாடுகள் சூழ்ந்து இருக்கின்றன.
போர்
இந்தியாவின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் நம் பாகிஸ்தானும், சீனாவும் தான் பகிர்ந்து கொள்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு நாடுகளும் நம் இந்தியாவோடு, அத்தனை இணக்கமான உறவைப் பேணும் நாடுகளாக இல்லை. இரண்டு நாடுகளோடும் சில போர்களே நடந்து இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நட்பு
பாகிஸ்தான் மீது கைவைத்தால், சீனா ஆதரவுக்கு வந்துவிடும். சீனாவைத் தொடப் போனால், பாகிஸ்தான் நேரடியாக வந்து என்னப்பா என ஆஜராகும். அந்த அளவுக்கு சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கு நெருக்கமான நட்பு உண்டு. இந்த நட்பை பல நேரங்களில், சீனாவும் பாகிஸ்தானும் சர்வதேச அரங்குகளிலேயே காட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது பாகிஸ்தானின் ஆருயிர் நண்பன் சீனாவே பாகிஸ்தானை கைவிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இப்ப என்ன சிக்கல்
சமீப காலமாக பாகிஸ்தான் தன் நாட்டின் முகத்தை மாற்றிக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமான விஷயம் பொருளாதாரம். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தினால் தான், பாகிஸ்தானை மாற்ற முடியும் என்பதை ஓரளவுக்காவது புரிந்து வைத்திருக்கிறார் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான். ஆனால் அதற்கு FATF அமைப்பின் சில உதவிகள் தேவையாக இருக்கிறது.
அது என்ன FATF
FATF என்கிற அமைப்பு கடந்த 1989 முதல் இயங்கி வரும் ஒரு பன்னாட்டு அரசு அமைப்பு (Inter Govt Body). உலக அளவில் பணச் சலவையைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கான நிதி போக்குவரத்துகளை தடுப்பது என சர்வதேச நிதி இயக்கத்துக்கு பிரச்னையாக இருக்கும் அனைத்தையும் சமாளிக்கும் ஒரு அமைப்பு. FATF அமைப்பின் வேலையே, மேலே சொன்ன தவறுகள் நடக்காத வண்ணம் சட்டம் & செயல் திட்டங்களை வகுப்பது, தர நிர்ணயம் செய்வது போன்றவைகள் தான்.
செயல்பாடு
சொல்லப் போனால் இது ஒரு கொள்கை வரைவுக் குழு (Policy Making Body) என்று சொல்லலாம். இந்த அமைப்பு வகுக்கும் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுகிறார்களா என கண்காணிப்பார்கள். அப்படி ஒழுங்காக பின்பற்றாதவர்களை ப்ளாக் லிஸ்ட் அல்லது க்ரே லிஸ்ட் செய்வார்கள்.
ப்ளாக் லிஸ்ட் & க்ரே லிஸ்ட்
சரி, ப்ளாக் லிஸ்ட் செய்தால் அல்லது க்ரே லிஸ்டில் வைக்கப்பட்டால்... என்ன மாதிரியான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்? ஒரு நாட்டை FATF அமைப்பு பிளாக் லிஸ்ட் செய்தால், அந்த நாட்டுக்கு, சர்வதேச அமைப்புகள் கடன் கொடுப்பது தொடங்கி மற்ற நாடுகள் முதலீடு செய்வது வரை எல்லாமே பெரிய அளவில் பாதிக்கப்படும்.
பொருளாதாரம்
சொல்லப் போனால் அந்த நாடு மற்ற நாடுகளுடன் அன்றாடம் மேற்கொள்ளும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மற்றும் வர்த்தகங்கள் கூட பெரிய அளவில் பாதிக்கப்படலாம் எனச் சொல்கிறார்கள். அன்றாட ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்களே பாதிக்கப்படும் போது, மற்ற நாட்டுக்காரர்கள் நம்பி FATF ப்ளாக் லிஸ்ட் செய்து இருக்கும் நாட்டில் முதலீடு செய்வார்களா என்ன..? எனவே ப்ளாக் லிஸ்ட் அல்லது க்ரே லிஸ்ட் செய்யப்பட்டால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் அழுத்தத்துக்கு உள்ளாகும்.
எச்சரிக்கை
கடந்த அக்டோபர் 2019-ல், பாகிஸ்தானும் இந்த FATF அமைப்பின் விதிகளை முறையாக பின்பற்றாததால் ப்ளாக் லிஸ்டிலேயே வைக்கப்பட்டார்கள். FATF அமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாகச் சொல்லி, பாகிஸ்தானை மிகக் கடுமையாக எச்சரித்தது.
பாகிஸ்தானுக்கு என்ன
கடந்த அக்டோபர் 2019 காலத்தில், FATF அமைப்பு, 27 விதிமுறைகளை பின்பற்றச் சொன்னது. ஆனால் 27 விதிகளில், பாகிஸ்தான் 05 விதிமுறைகளைத் தான் சரியாக கடை பிடித்து இருப்பதாகச் சொன்னார்கள் FATF அமைப்பினர்கள். இப்படி FATF அமைப்பின் அனைத்து விதிமுறைகளையும், வரும் பிப்ரவரி 2020-க்குள் முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்கள்.
சமீபத்தில்
கடந்த பிப்ரவரி 18, 2020 அன்று, FATF அமைப்பின் துணை அமைப்பான FATF's International Co-operation Review Group (ICRG)என்கிற அமைப்பின் கூட்டம், பாரிஸில் நடந்தது. இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கான நிதி போக்குவரத்துக்களை சரியாக கண்காணிக்கவில்லை எனச் சொல்லி, பாகிஸ்தானை க்ரே லிஸ்டிலேயே வைக்க பரிந்துரைத்து இருக்கிறார்கள்.
சீனாவும் உண்டு
FATF அமைப்பில் தற்போது துருக்கி மட்டும் தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறதாம். இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், உடன் தற்போது சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பாகிஸ்தானுக்கு கெடு விதிக்க இருக்கிறார்களாம். ஏற்கனவே சொன்ன 27 விதிகளில், இன்னும் 13 விதிகள் பின்பற்றப்படவில்லையாம். இந்த 13 விதிகளையும் முழுமையாக பின்பற்றி, வரும் ஜூன் கூட்டத்துக்குள், தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, துருக்கி தவிர, FATF அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு, கெடு வைக்கப் போகிறார்களாம். அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும் என்கிறார்கள்.
பாகிஸ்தான் நடவடிக்கை
சமீபத்தில் தான், பாகிஸ்தானின் சிறப்பு தீவிரவாத நீதிமன்றத்தில், 2008 மும்பை தாக்குதலுக்கு மூல காரணமாக இருந்த ஹஃபீஸ் சய்யத்-க்கு, இரண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு பண உதவி செய்ததாகச் சொல்லி, 11 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இது முற்றிலும் FATF அமைப்பை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகவும் சொல்லப்படுகின்றன.
பாகிஸ்தான் பொருளாதாரம்
சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF - Internation Monetary Fund) கணிப்பின் படி பாகிஸ்தானின் பொருளாதாரம் 2019-ம் ஆண்டில் 3.3 சதவிகிதமாகவும், 2020-ம் ஆண்டில் 2.6 சதவிகிதமாகவும் வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 3.9 சதவிகிதமாக இருந்தது, 2019-ல் 7.3 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. 2020-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவிகிதத்தைத் தொடலாம் எனக் கணித்திருக்கிறது ஐ எம் எஃப்.
அவசியம்
இத்தனை இக்கட்டான சூழலில் பாகிஸ்தான், தன்னை FATF அமைப்பின் க்ரே லிஸ்டில் இருந்து விடுவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. அப்போது தான் அவர்களால் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு போக முடியும்..? இன்னும் சில நாட்கள் தான், FATF அமைப்பு என்ன முடிவை அதிகாரபூர்வமாக எடுக்க இருக்கிறது என்பதைப் பார்த்துவிடலாம்.