இந்திய ராணுவ வீரர்களை சீனர்கள் தாக்கியது, நமக்காக, ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது எல்லாம் நமக்கு கோபத்தை வரவழைக்கும் விஷயம் தான்.
Recommended Video
இதற்கு சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமும் நியாயமானது தான். ஆனால் அதற்காக சீன பொருட்களைப் புறக்கணிப்பது, சீனர்களுடனான உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என பல யோசனைகளை சமூக வலைதளங்கள் நம்மால் பார்க்க முடிகிறது.
"இது எல்லாம் எதார்த்தத்தில் சாத்தியமே இல்லிங்க" சீனா இந்தியா கூட மோதாது என்கிற ரீதியில் ப்ளூம்பெர்க், ஒரு சில டேட்டாக்களை வெளியிட்டு இருக்கிறது. அது என்ன? வாருங்கள் பார்ப்போம்.
சீனா உடனான நேரடி வர்த்தகம்
அதென்ன நேரடி வர்த்தகம் என்கிறீர்களா? அட ஏற்றுமதி இறக்குமதி தான். இந்தியா கடந்த 3 நிதி ஆண்டுகளில் மட்டும் சுமராக 5.60 லட்சம் கோடி ரூபாய்க்கு சீனா + ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. அதே போல, கடந்த 3 நிதி ஆண்டில் மட்டும் சீனா & ஹாங்காங்கில் இருந்து 17.29 லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்து இருக்கிறதாம்.
இந்திய சந்தை
2019 - 20 நிதி ஆண்டில் (ஏப் - பிப்) காலத்தில் இந்தியா மொத்தம் 442.81 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்து இருக்கிறது. அதில் 62.3 பில்லியன் டாலர் சீனாவில் இருந்தும், 15.6 பில்லியன் டாலர் ஹாங்காங்கில் இருந்தும் இறக்குமதி செய்து இருக்கிறது. இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு முதலிடம். இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சுமார் 17% சீனா + ஹாங்காங்கில் இருந்து மட்டும் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சீன பொருளாதாரம்
இந்த பார்டர் சண்டையால் பல லட்சம் கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி வியாபாரத்தை சீனா ஒதுக்கி விடுமா? ஏற்கனவே சீன பொருளாதாரம், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கிறதே? அதை எல்லாம் சமாளிக்க உள்நாட்டில் உற்பத்தி பெருகி வேலை வாய்ப்புகள் பெருகினால் தானே நாட்டின் பொருளாதாரம் வளரும்? எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்காமல் நம்மோடு சண்டைக்கு வந்துவிடுவார்களா என்ன?
இந்தியாவில் சீன கம்பெனிகள்
இன்வெஸ்ட் இந்தியா என்கிற நிறுவனத்தின் கணிப்புப் படி, இந்திய சந்தையில் சுமாராக 800 சீன கம்பெனிகள் இருக்கின்றனவாம். Oppo, Vivo, Fosun International, Haier, SAIC, Midea போன்ற பல சீன கம்பெனிகள் இந்தியாவில் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். திடீரென கிளம்பச் சொன்னால் கம்பெனிகளின் எதிர்காலம் என்ன ஆவது?
வியாபாரம்
இந்தியாவில் சுமாராக 75 உற்பத்தி ஆலைகள் வழியாக ஸ்மார்ட்ஃபோன், கன்ஸ்யூமர் அப்ளையன்ஸ், கட்டுமான சாதனங்கள், ஆட்டோமொபைல் சாதனங்கள், ஆப்டிகல் ஃபைபர், ரசாயனம் என பல பொருட்களை, சீன கம்பெனிகள் தயாரித்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்களாம். இந்தியா சீனா எல்லை பிரச்சனையைக் காரணம் காட்டி, எல்லோரும் சீனாவுக்கு கிளம்புங்க என்றால் கிளம்பிவிடுவார்களா? முதலீடு செய்த பணத்தை நினைத்துப் பார்க்கமாட்டாஅர்களா? சீனர்கள் கணக்கில் அவ்வளவு வீக்கா?
இந்தியாவில் முதலீடு
சீனர்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளை, இந்திய அரசே கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உதாரணமாக அலிபாபா பேடிஎம்-ல் முதலீடு செய்த செய்தியை படித்து இருப்போம். ஆனால் அலிபாபா தன் சீன கம்பெனியில் இருந்து முதலீடு செய்யவில்லை. அலிபாபா சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் என்கிற, தன் சிங்கப்பூர் கம்பெனியில் இருந்து தான் முதலீடு செய்து இருக்கிறார்கள். எனவே எந்த முதலீடுகள் சீனாவில் இருந்து வந்தவைகள் என கண்டு பிடிப்பதில் சிரமங்கள் இருக்கின்றன்வாம்.
ஸ்டார்ட் அப் ஃபண்டிங்
இதை எல்லாம் தாண்டி, பிக் பாஸ்கெட், பைஜூ, ட்ரீம் 11, ஃப்ளிப்கார்ட், ஹைக், ஓலா ஓயோ, பேடிஎம், க்விக்கர், பாலிசி பஜார், ஸ்னாப் டீல், ஸ்விக்கி, உதான், சொமேட்டோ என இந்தியாவின் பிரபலமான பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளிலேயே சீனா சிறப்பாக முதலீடு செய்து வைத்திருக்கிறது. முதலீடு செய்து நமக்கு என்ன சேவையா செய்யப் போகிறார்கள். சீன கம்பெனிகளுக்கு லாபம் தானே. அந்த லாபத்தை விட்டுக் கொடுப்பார்களா என்ன?
சீன ஸ்மார்ட்போன்கள் தான் தாதா
இந்தியாவின் ஒட்டு மொத்த ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் சுமாராக 70 சதவிகித ஸ்மார்ட்ஃபோன்கள் சீனாவுக்கு சொந்தமானவைகளாம். சியாமி, ஓப்போ, விவோ, ரியல் மீ போன்ற பிராண்டுகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்தால், 70 சதவிகித சந்தையை இவர்கள் தான் வைத்திருக்கிறார்கள். சாம்சங், மைக்ரோமேக்ஸை எல்லாம் கிட்டத்தட்ட வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் சீனர்கள். இப்போது இந்தியா சீனா எல்லைப் பிரச்சனையால், சீன ஸ்மார்ட்ஃபோன் கம்பெனிகளை, இந்தியாவை விட்டு வெளியேறச் சொன்னால் சம்மதிப்பார்களா?
மருந்து வியாபாரம்
உலகின் மிகப் பெரிய பார்மா சந்தைகளைப் பட்டியலிட்டால் யில் இந்தியாவுக்கு 3-வது இடம். இவ்வளவு பெரிய இந்திய பார்மா சந்தையில் நிறைய மருந்து கம்பெனிகள் இருக்கின்றன. ஆனால் மனிதர்களின் உயிரைக் காக்கும் மருந்துகளுக்குத் தேவையான active pharamaceutical ingredients-களை சீனா தான் இந்தியாவுக்கு கணிசமாக ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறது.
3-ல் 2 பங்கு சந்தை சீனாவுக்கு
சீனா, இந்தியாவுக்கு active pharamaceutical ingredients-ஐ எவ்வளவு ஏற்றுமதி செய்கிறது என்றால், இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 3-ல் 2 பங்கு ஏற்றுமதி செய்கிறது. எந்த புத்திசாலியாவது இவ்வளவு பெரிய பார்மாவை சந்தையை விட்டுவிட்டு போவார்களா? கட்டாயம் சீனா போகாது. இதை எல்லாம் விட இன்னொரு பெரிய விஷயம் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை.
இந்திய சுற்றுலா பயணிகள்
இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை, 2017-ம் ஆண்டில் 8 லட்சம் பேராக இருந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகள் அதிகரித்து இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒரு சுற்றுலா பயணி ஒரு நாட்டுக்குப் போனால், தங்குவது, உணவு, பொருட்களை வாங்குவது என பல வழிகளில் செலவழிப்பார். இது மறைமுகமாக அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதை எல்லாம் கணக்கு போடாமல் சீனா, இந்தியா உடன் விரோதத்தை வளர்த்துக் கொள்ளுமா..?
அமெரிக்க இந்தியா நட்பு
சரியோ தவறோ, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கணக்கில் அமெரிக்கா, இந்தியா உடன் அதிகம் நட்பு கொண்டாடுகிறது. சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் இடம் பிடித்துவிட்டது இந்தியா. ரஷ்யாவோடும், இந்தியாவுக்கு ஓரளவுக்கு நல்ல நட்பு இருக்கிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தை. எனவே சீனா, இந்தியா உடன் மோத வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது. இதை எல்லாம் சீனா கருத்தில் கொண்டாவது இந்தியா உடனான பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் என நம்புவோம். ரொம்ப பசிக்குதுங்க. ஒரு முட்டை நூடுல்ஸ் + ட்ராகன் சிக்கன் சொல்லுங்கப்பா.