உலகமே இன்று கொரோனாவினால் அல்லோல் பட்டுக் கொண்டு இருக்கின்றது எனில் அதன் புகழ் அனைத்தும் சீனாவுக்கே. ஏனெனில் முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய இந்த வைரஸானது, இன்று உலகம் முழுவதும் தங்கு தடையின்றி பரவி வருகின்றது.
இப்படி உலகத்தினையே பயமுறுத்தி வரும் கொரோனாவினால், சீனாவுக்கு இன்று வரையிலும் பிரச்சனையே.
சரி என்ன தான் பிரச்சனை. சீனாவில் தான் கொரோனாவின் தாக்கம் தான் குறைந்து விட்டதே. அதோடு சீனாவில் தற்போது வழக்கம் போல தொழில் சாலைகளும் நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்து விட்டனவே, அப்புறம் என்ன பிரச்சனை வாருங்கள் பார்க்கலாம்.
சீனாவில் தொடக்கம்
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் தான் இன்று உலகம் முழுக்க பரவி, பல ஆயிரம் மக்களை பலி கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இன்று நம் நாடு எப்படி முடங்கி போயுள்ளதோ அதே போல் தான் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மார்ச் வரை முடங்கியிருந்தன. அதனால் சீனாவின் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கியிருந்தது.
கொரோனாவால் முடக்கம்
இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் வேலையிழந்து தவித்து வந்தனர். மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தனர். தொழில்சாலைகளும், நிறுவனங்களும் காத்தோடிக் கொண்டு கிடந்தன. ஆனால் தற்போது சீனா சீரடைந்து கொண்டு வந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுககள் உள்ளிட்ட பல நாடுகள் முடங்கி போயுள்ளன.
சீனாவில் பாதிப்பு
சீனாவில் கிட்டதட்ட நான்கு மாத காலம் கொரோனாவின் தாக்கம் இருந்தாலும், அங்கு 82,341 பேர் தாக்கம் அடைந்தும், 3,340 பேர் பலியாகியும் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது பல மடங்கு வேகத்தில் மற்ற நாடுகளில் பரவி வருவதோடு, உயிர்பலியும் வாங்கிக் கொண்டு வருகிறது.
வளர்ச்சி குறையலாம்
சீனாவில் கொரோனாவின் தாக்கத்தினால் அதன் வளர்ச்சி கிட்டதட்ட பாதி குறைந்து விட்டது எனலாம். ஆனால் சீனாவில் தற்போது வழக்கம் போல் எல்லாம் செயல்பட தொடங்கி விட்ட நிலையில், மக்களும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதற்கிடையில் கடந்த ஜனவரி - மார்ச் வரையிலான வளர்ச்சி குறித்தான அறிக்கை வெள்ளிக் கிழமையன்று வெளியாக இருக்கின்றது. இது இந்த இடைப்பட்ட மாதங்களில் 9% வரை சுருங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உலக நாடுகள் முடக்கம்
1930க்கு பிறகு உலகம் மிகப்பெரிய மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது. இப்படி ஒரு உலகளாவிய வளர்ச்சிக்கு வழிவகுத்த சீனா, தற்போது அந்த சரிவிலிருந்து மீளக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக வாகனத் துறை மற்றும் சில துறைகள் மீண்டு வந்தாலும், சீனாவினை நம்பியுள்ள மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களும், தொழில்சாலைகளும் முடங்கி போக ஆரம்பித்துள்ளன. பிரச்சனைகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
பிரச்சனைகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்
இதற்கு சிறந்த உதாரணம் தான் வாகனத்துறை. ஏனெனில் முக்கிய உதிரி பாகங்கள் சீனாவில் இருந்தே பல நாடுகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது. ஆக சீனா தற்போது உற்பத்தியை பெருக்கினாலும் அதனை விற்க முடியாமல் மேலும் பிரச்சனையை சந்திக்க வாய்ப்புகள் அதிகம். இப்படி ஒவ்வொரு துறையும் பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆக சீனாவும் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கும்.
தேவை வீழ்ச்சி
ஆக உலகம் முழுக்க தேவை இல்லாமல் போன நேரத்தில், உற்பத்தியை அதிகரித்து என்ன பயன். ஆக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இன்னும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படமாலேயே தான் உள்ளது. கொரோனாவினால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என லாக்டவுன் இன்னும் நீண்டு கொண்டு தான் உள்ளது.
இறக்குமதி குறையும்
இது குறித்து Bernstein Research அறிக்கையில் வாகன விற்பனை 15% வரைக் குறையக் கூடும். ஆக இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவினை பெரிதும் தாக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்ல, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகள், உதிரி பாகங்கள், மின்சார வாகங்களுக்கான உரிதிபாகங்கள், மருந்து மூலப்பொருட்கள், மின்னணு சாதனங்கள் என பல இறக்குமதிகளும் குறையும்.
சீனாவுக்கு பெருத்த அடி தான்
இதனால் சீனாவில் ஏற்றுமதி குறையும். 2020ல் சீனாவின் ஏற்றுமதி 10% வரை குறையலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படியாக சீனா கொரோனாவிலிருந்து மீண்டாலும், பல மடங்கு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் பொருளாதாரம் நிச்சயம் மீண்டும் அடி வாங்கும்.