பெய்ஜிங்: சீனா இன்று இருக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்திருந்தால், இன்று இவ்வளவு உறுதியுடன் இருந்திருப்பார்களா? என்பது சந்தேகம் தான்.
அதிலும் சுமார் 1,357 பேரை பலி கொண்டுள்ள கொரோனாவின் கொடூர தாக்குதலுக்கு மத்தியில், 60,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ஒரு புறம் சீனா அரசு இதனை கட்டுப்படுத்த பலத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இன்று வரை பாகுபாடின்றி படு வேகமாக பரவி வருகிறது.
பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம்
மேலும் தற்போது இது உலக நாடுகள் பலவற்றிக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த கொடிய வைரஸால் சீனாவின் பொருளாதாரம் மட்டும் அல்ல, உலகப் பொருளாதாரமும் வீழ்ச்சியடையலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் மக்கள் ஒன்று கூடும் அனைத்து இடங்களையும் அந்த நாட்டு அரசு தடை செய்துள்ளது. சொல்லபோனால், விமான போக்குவரத்தும் கிடையாது.
பள்ளிகள் மூடல்
தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. உணவகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. ஒரு சிலர் இது பிப்ரவரி 17லிருந்து தொடங்கப்படலாம் என்றும் கூறப்பட்டாலும்., இன்று வரை கொரோனாவைக் கட்டுபடுத்த முடியாமல் சீனா அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் சீனா மாணவர்களுக்கு பள்ளி ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஆன்லைன் - தொலைக்காட்சி வழியாக வகுப்பு
பள்ளிகள் செமஸ்டர் தொடக்கத்தை ஒத்தி வைப்பதால் மாணவர்கள், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அல்லது தொலைகாட்சி வழியாக படிக்க போதுமான வசதிகள் செய்து தருவதாகவும் சீனா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சீனா அமைச்சகம் பல்கலைகழகங்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வதற்கான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளனவாம்.
22 ஆன்லைன் போர்டல்
இதற்காக 22 ஆன்லைன் போர்ட்டல்களையும், இதன் மூலம் 24,000 படிப்புகளையும் வழங்க போவதாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அனைத்து முக்கிய பள்ளி பாடங்களையும் உள்ளடக்கிய கல்வி வளங்களை வழங்குவதற்காக கிளவுட் பிளாட்பார்ம் பிப்ரவரி 17 அன்று தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கிராமப்புற மாணவர்களுக்கு தொலைக் காட்சி வழி கல்வி
மேலும் மாணவர்கள் பள்ளி அறிவைத் தவிர, மாணவர்கள் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டைப் பற்றியும் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தேசபக்தி, வாழ்க்கை மற்றும் உளவியல் ஆரோக்கியம் குறித்த கல்வியைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறைந்த இணைய அணுகல் உள்ள தொலைதூர அல்லது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, ஒரு கல்வி தொலைகாட்சி சேனல் பிப்ரவரி 17ம் தேதி அவர்கள் வீட்டிலிருந்து படிக்க வகுப்புகளை ஒளிப்பரப்ப தொடங்கும் என்றும் இத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.