சீனாவின் மிகப்பெரிய டெக் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அலிபாபா மீது சில மாதங்களுக்கு முன்பு மோனோபோலி வழக்குத் தொடுத்தது. இதன் எதிரொலியாக மொத்த அலிபாபா நிறுவனமும் வர்த்தகமும் சீன அரசு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் பல கட்ட விசாரணை, ஆய்வுகளுக்குப் பின்பு அலிபாபா சந்தையில் முறையற்ற வகையில் வர்த்தகம் செய்துள்ளது கண்டுபிடித்துள்ளது.
இதன் வாயிலாகச் சீனாவின் மோனோபோலி கட்டுப்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால் அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனத்தின் மீது சீன அரசு சுமார் 18 பில்லியன் யூவான் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது கிட்டதட்ட 2.75 பில்லியன் டாலராகும்.
சீனாவின் டிஜிட்டல் மற்றும் மார்டன் வர்த்தகத்தைச் சந்தையைக் கட்டமைத்த நிறுவனமாக விளங்கும் அலிபாபா மீது சீன அரசு கடந்த சில மாதங்களாகக் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இவை அனைத்திற்கும் முதலும் முக்கியக் காரணமாக விளங்குவது அலிபாபா குழுமத்தின் நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் மா சீனா நிதியியல் அமைப்பையும், சீன அரசையும் விமர்சனம் செய்து பேசினார். ஜாக் மா பேசி அடுத்த நாள் முதல் சீன அரசு மற்றும் அரசு துறைகள் அலிபாபா மீது தொடர்ந்து வழக்குகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜாக் மா-வின் பேச்சால் அலிபாபாவின் நிதியியல் சேவை நிறுவனமான ஆன்ட் குரூப்-ன் உலகின் மிகப்பெரிய ஐபிஓ திட்டத்தைச் சீன அரசு திட்டமிட்டு முடங்கியது. இதனால் சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ தடைப்பெற்றது.