டெல்லி: சீனாவின் ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான அலிபாபா குருப் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் அலிபே (ALIPAY) நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனமான ஒன்97 கம்யூநிகேஷன்ஸ் நிறுவனத்தில் 550 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
உலகின் மிகப்பெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் இந்த முதலீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதக் கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆன்லைன் சில்லறை வணிகத்தில் அலிபாபாவின் முக்கியமான முதலீடாக இது பார்க்கப்படுகிறது.
40% பங்குகள்
இத்திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தால் அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவர் ஜாக் மா-வின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலிபே நிறுவனம், ஒன்97 நிறுவனத்தில் 30 முதல் 40 சதவிகித பங்குகளை இந்த முதலீட்டின் மூலம் கொண்டிருக்கும்.
இணைய வர்த்தக சேவை
ஒன்97 நிறுவனம் பே-டி.எம் எனப்படும் வாடிக்கையாளர்கள் இணையம் மூலம் பண பரிமாற்ற சேவைகளைப் பெறும் இணைய வர்த்தக சேவையை நடத்திவருகிறது.
பங்கு இணைப்பு
ஒன்97 நிறுவனம் அலிபாபா மற்றும் அலிபே நிறுவனங்களுக்கு புதிய பங்குகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே உள்ள அந்த நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா உள்ளிட்ட பங்குதாரர்களின் முதலீடுகளுடன் கலக்கப்படும் என ரியுடர்ஸ் நிறுவனத்திற்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்கள்
ஒன்97 நிறுவனத்தின் பிற முதலீட்டாளர்களில் SAIF பார்ட்னர்ஸ், இண்டெல் கேபிடல் மற்றும் எஸ்.ஏ.பி உள்ளிட்டோர் அடங்குவர் என அந்நிறுவன இணையதளம் தெரிவிக்கிறது. பேடிஎம் நிறுவனம் சுமார் 2 கோடி பேருக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைகொண்டுள்ளது.
பேடிஎம் (PAYTM)
இந்த முதலீடு அடுத்து வரும் ஆண்டுகளில் அதிவேகத்தில் இந்தியாவில் வளரவுள்ள இணைய பணப்பரிவர்த்தனை வர்த்தகத்தில் பே-டி.எம் நிறுவனம் தனி இடத்தைப் பெறவும், சேவைகளை விரிவு படுத்தவும் பயன்படுத்தப்படும்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.