ஹாங்காங்: கொரோனாவால் இன்று உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில், கொரோனா முதன் முதலாக தோன்றிய சீனா தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இன்று வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளும் தொழிற்சாலைகளும், கடந்த ஜனவரியில் சீனாவின் நிலையினை நம் கண் முன்னே கொண்டு வருகிறது.
இப்படி ஒரு நிலையில் சீனாவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி போனது எனலாம். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம் முடங்கி போன நிலையில், உலகப் பொருளாதாரமே சற்று முடங்கியது என்று தான் கூற வேண்டும்.
எதிர்பார்த்த வளர்ச்சி இருக்காது
எனினும் சர்வதேச ஜிடிபியில் கணிசமான அளவினை கொண்டுள்ள சீனா பொருளாதாரம் கொரோனாவினால் பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். தற்போது தான் சற்று மீண்டு வந்து கொண்டு இருக்கிறது என்றாலும், 2020ல் எதிர்பார்த்த அளவு பொருளாதார வளர்ச்சி இருக்காது என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
மில்லியன் வேலைகள் ஆபத்தில் உள்ளன
இதனால் இது மில்லியன் கணக்காக வேலைகள் ஆபத்தினை நோக்கி கொண்டு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சீனாவின் ஜிடிபி விகிதம் 2020 1 அல்லது 2% குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2019ல் 6.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கி எச்சரிக்கை
உலக வங்கியும் 14 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரம் எதிர்பார்க்கும் அளவுக்கு வளராது என்றும் இதனை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலவீனமான செயல்திறன் ஆகும். மேலும் இது 2008 - 2009ம் ஆண்டு நெருக்கடியைப் போல உலகளாவிய மந்த நிலையை உருவாக்கியுள்ளது.
வளர்ச்சி குறையும்
கடந்த 1990ல் தியனன்மென் படுகொலைக்கு பின்னர் மேற்கு நாடுகள் சீனா மீது பொருளாதார தடையை விதித்தபோது ஏற்பட்ட மோசமான நிலையைப் போல் தற்போது மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் யுபிஎஸ் மற்றூம் கோல்டு மேன் சாச்சஸ் அண்மையில் மதிப்பிட்டுள்ள அறிக்கையின் படி , முறையே சீனாவின் பொருளாதாரம் 1.5% மற்றும் 3% வீழ்ச்சி காணலாம் என்றும் மதிப்பிட்டுள்ளன.
வளர்ச்சியை கணிப்பது கஷ்டம்
இதே 1985ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலக்குகளை நிர்ணயித்த சீனா அதிகாரிகள் கூட, தற்போது கணிப்புகளை செய்வதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஏனெனில் சீனாவின் வளர்ச்சியை கணிப்பது கஷ்டம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனினும் பலரும் சீனாவின் வளர்ச்சியை குறைத்தே கணித்துள்ளனராம்.
பல நிதியுதவி
சீனாவின் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நிலையில், சீனாவின் உற்பத்தி கடந்த மாதம் கூட பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் சீன பெரும் தூண்டுதல் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை எனலாம். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று 423 பில்லியன் டாலர் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஊக்குவிப்பு நடவடிக்கை
இதே சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு People's Bank of China கூடுதலாக 141 பில்லியன் டாலரை அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் கூடுதலாக கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக அந்த நாட்டின் மத்திய வங்கி 232 பில்லியன் டாலரினை பணப்புழக்கத்திற்காக செலுத்தியது. இவ்வாறு பல பில்லியன் டாலர்களை கொரோனாவினால் நிலைகுலைந்து போன பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும், தொழில் துறையை மேம்படுத்தவும் பலவேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
சங்கிலி பாதிக்கப்படக்கூடும்
எனினும் இந்த நடவடிக்கை கைகொடுக்குமா? அரசு எதிர்பார்ப்பதை போல வளர்ச்சி இருக்குமா என்பது தான் தெரியவில்லை. ஏனெனில் சீனாவில் தற்போது உற்பத்தியை அதிகரிக்க முடிந்தாலும் அதன் வினியோக சங்கிலி பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதன் பொருளாதாரம் நிச்சயம் தாக்கதினை காணும்.
வளர்ச்சி குறையும்
சீனாவின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 16% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே 2020ல் மொத்தத்தில் 2020ல் 3% குறையலாம் என்றும் கூறப்படுகிறது. சீனா தற்போது தனது வளர்ச்சிக்கு திரும்பும் இந்த நேரத்தில் இரண்டு வகையாக பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சீனாவுக்கு காத்திருக்கும் பிரச்சனை
ஒன்று கொரோனாவால் உலகளாவிய தேவை குறையலாம். மற்றொன்று தற்போது உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனாவால் இரண்டாவது பெரிய கொரோனா அலையை எதிர்கொள்ளலாம். எப்படியோ இதிலிருந்து மீண்டு சீனாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு வளர்ச்சி கண்டால் அது மிகப்பெரிய சாதனை தானே. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே கொடிய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பித்த சீனாவுக்கு இது மட்டும் பெரிய விஷயமா என்ன?