இன்று உலகமே ஒரே விஷயத்திற்காக அல்லாடி வருகின்றது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான். அந்த பெருமையெல்லாம் சீனாவினையே சென்று சேரும். அது கொரோனா வைரஸ் பரவல் தான் .
முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவியதாக கூறப்பட்ட கொரோனாவால், இன்று சீனா மட்டும் அல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிகப்பட்டுள்ளன.
இதற்கு உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தான் முதல் பலிக்கிடா என்று கூட கூறலாம். ஏனெனில் கொரோனாவின் தாக்கத்திலும் சரி பலி எண்ணிக்கையிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா தான்.
சீனா வளர்ச்சி
இப்படி கொரோனாவால் முடங்கிபோயுள்ள நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம், மைனஸுக்கு சென்று கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கன் முதன் முதலாக தோன்றியதாக கூறப்படும் சீனா வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.
உற்பத்தி குறித்தான பிஎம்ஐ விகிதம்
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக சீனாவின் உற்பத்தி குறித்தான பிஎம்ஐ விகிதம் ஜூன் மாதத்தில் 50.9 ஆக அதிகரித்துள்ளது. இதே உற்பத்தி அல்லாத பிஎம்ஐ விகிதமான 54.4 ஆகவும் அதிகரித்துள்ளதாக சீன அறிக்கைகள் கூறுகின்றன. இது குறித்து வெளியான செய்தியில், ஜூன் மாதத்தில் சீனாவின் பொருளாதாரம் சீரான நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
லாக்டவுனுக்கு பிறகு வளர்ச்சி
கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு உற்பத்தி மற்றும் சேவை துறை சார்ந்த இரு துறைகளும் சற்று சீராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உற்பத்தி குறித்தான கொள்முதல் குறியீடானது கடந்த ஜூன் மாதத்தில் 50.9ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட சிறந்த வளர்ச்சியாகும்.
மே மாதத்தில் பரவாயில்லை
இந்த விகிதமானது கடந்த மே மாதத்தில் 50.6 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொழிற்சாலைகளின் வாங்கும் திறனை பொறுத்து வெளியிடப்படும் ஒரு குறியீடாகும். ஆக இது கடந்த மே மாதத்தினை விட, ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது என்று தானே கூற வேண்டும்.
சர்வே மதிப்பீடுகள்
இதே உற்பத்தி அல்லாத பி எம் ஐ விகிதமானது கடந்த மே மாதத்தில் 53.6 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 54.4 ஆக அதிகரித்துள்ளது. இது நவம்பர் 2019 முதல் மிக விரைவான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இந்த சர்வேயானது சேவைகள் மற்றும் கட்டுமானத் துறைகளின் மன நிலையை குறிக்கிறது.
இனி வரும் மாதங்களில் வலுவான வளர்ச்சி
அதுமட்டும் அல்ல வரும் மாதங்களில் சீனாவின் வளர்ச்சி இன்னும் அபரிமிதமானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் வலுவான உள்கட்டமைப்பு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக இது இனி வரும் மாதங்களில் இன்னும் வலுவான வளர்ச்சி காண உதவும் என்றும் கூறப்படுகிறது. சீனா மற்ற விஷயங்களில் எப்படி இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் குறியாகத் தான் உள்ளது. இந்த விஷயத்தில் சீனாவினை விஞ்ச முடியுமா? தற்போதிருக்கும் காலகட்டத்தில் அது கஷ்டம் தான்.