பெய்ஜிங்: உலக நாடுகளில், உள்நாட்டு தயாரிப்புகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் சீனா மார்ச் மாதத்தில் 15 சதவீத சரிவை தழுவியுள்ளது. இதனால் இந்நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்நாட்டின் கட்டுமானத் துறையின் வளர்ச்சி பாதித்துள்ளதால், 2014ஆம் ஆண்டின் 3வது மற்றும் 4வது காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிகளவில் குறைந்தது.
கணிப்புகள்
மார்ச் மாதத்தில் இந்நாட்டின் ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்ட போதிலும், உலக நாடுகளின் தேவைகள் குறைந்ததால் 15 சதவீதம் குறைவை சீனா சந்தித்துள்ளது.
இறக்குமதி
உள்நாட்டுத் தேவைகள் குறைந்ததால் நாட்டின் இறக்குமதி அளவும் சுமார் 12.7 சதவீதம் குறைந்துள்ளதாகச் சுங்க வரித்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏன் இந்த நிலை?
சர்வதேச சந்தையில் நிலவிய மந்த நிலை மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இந்நாட்டின் வர்த்தக நிலை அதிகளவில் பாதித்துள்ளது.
டாலரின் மதிப்பு உயர்வால் இந்நாட்டின் ஏற்றுமதி 15 சதவீதம் வரை குறைந்துள்ளதாகச் சீனாவின் வாபாவ் என்ற வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்கள்
இத்தகைய நிலையில் இந்நாட்டின் வர்த்தக நிலை மேம்படப் புதிய வர்த்தகத் திட்டங்கள் வேண்டும் எனச் சீன அரசு கூறுகிறது.
அன்னிய முதலீடு
கடந்த நிதியாண்டில் இந்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகளவில் குறைந்ததை அடுத்து, ஐஎம்எஃப், உலக வங்கி போன்ற அமைப்புகள் சீன வளர்ச்சி விகிதத்தைக் குறைத்தனர்.
இதன் எதிரோலியாகச் சீனாவில் அன்னிய முதலீட்டு அளவு குறைந்தது, இதனால் புதிய செயல் திட்டங்களை உருவாக்குவதில் சீன அரசு மும்மரமாக இறங்கியுள்ளது.