வல்லரசு நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா-வை கீழே இறக்கிவிட்டு முன்னேற வேண்டுமெனக் கடுமையாகப் போராடி வரும் சீனா-விற்குக் கொரோனா பெரும் தடையாக இருந்த நிலையில், தற்போது அடுத்த பிரச்சனை உருவாகியுள்ளது.
ஆம், உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனாவின் தொழிற்துறை பணவீக்கம் அதாவது பேக்ட்ரி கேட் பணவீக்கம் 26 வருட உச்சத்தை அடைந்துள்ளது.
நிலக்கரி
உலகளவில் நிலக்கரிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் நிலக்கரியின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதைக் கடந்த சில வாரத்தில் பார்த்தோம், இதில் இந்தியாவும் முக்கியமானது.
மின்சார உற்பத்தி
மின்சார உற்பத்திக்கு நிலக்கரியை அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றான சீனாவில் பல்வேறு காரணத்தால் மின்சாரத் தேவை அதிகரித்தது. சீனாவில் இந்தத் தேவையைப் பூர்த்த செய்யப் போதுமான மின்சார உற்பத்தி தளம் இல்லாத காரணத்தால் கடும் தட்டுப்பாடு நிலவியது.
சீனா
இதைச் சரி செய்ய நிலக்கரியை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான நிலக்கரியை உற்பத்தி செய்தது சீனா. இதனால் மின்சார உற்பத்தி செலவுகள் தாறுமாறாக உயர்ந்து பணவீக்கத்தை அதிகரித்துள்ளது.
தொழிற்துறை பணவீக்கம்
சீனாவின் தொழிற்துறை பணவீக்கம் அதிகரித்தது மூலம் அந்நாட்டு உற்பத்தியாளர்களின் லாப அளவீடுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர் விலைக் குறியீடு (producer price index - PPI) 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது எனச் சீனவின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
1995க்குப் பின்
1995ல் இந்த உற்பத்தியாளர் விலை குறியீடு 12.4 சதவீதமாக இருந்தது, அதன் பின்பு சுமார் 26 வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக இந்த அளவீட்டைக் கடந்து 13.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடும் செப்டம்பர் மாத 0.7 சதவீதத்தில் இருந்து அக்டோபர் மாதம் 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளுக்குப் பாதிப்பு
சீனாவில் உற்பத்தி விலை அதிகரித்துள்ள காரணத்தால் உற்பத்தியாளர்களின் லாபம் குறைந்துள்ளது. இதைச் சரி செய்ய ஏற்றுமதி பொருட்களின் விலை அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் இருப்பதால் சீன பொருட்களை இறக்குமதி செய்யப்படும் நாடுகள் அதிகத் தொகையைக் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.