உலகமே இன்று கொரோனாவால் அரண்டுபோய் கிடக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு சரியான ஆதாரம் இல்லாவிட்டாலும், சீனா நினைத்திருந்தால், இந்த கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத அரக்கனை சீனாவோடு அழித்திருக்கலாம் என்பது உண்மையே.
கொரோனா சீனாவில் பரவிய ஆரம்ப காலத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டது.
தொழில் சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சி கண்டன. உலகம் முழுக்க விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நாடாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னடைவை சந்தித்த சீனா
ஆனால் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தொழில் துறைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் அங்கு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், விநியோக சங்கிலி பாதிப்பால் சீனா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது எனலாம்.
உற்பத்தி அதிகரிப்பு
இதனை நீருபிக்கும் விதமாக கடந்த மே மாதத்தில், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு மத்தியில் சீனா மட்டும் உற்பத்தியினை அதிகரித்துள்ளது. இந்த தரவானது உலகின் இரண்டாவது பெரிய பொருளதாரமான சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது.
செலவும் அதிகரிப்பு
அதே நேரம் நுகர்வோரின் செலவிடலும் சீனாவில் அதிகரித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடைவை சந்தித்த வாகன விற்பனையானது, தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே போல வேலையின்மை விகிதமும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனால் சர்வதேச அளவில் இது எதிர்மாறாக உள்ளது.
அதிகரித்து வரும் வேலை
கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது நாட்டில் வேலை வாய்ப்புகள் சிறிது பெருகி வருவதையே காட்டுகிறது. ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் ஞாயிற்றுகிழமையன்று 57 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இரண்டாவது கட்டமாக பரவி வரும் கொரோனாவால் இன்னும் எந்த மாதிரியாக பிரச்சனைகள் வரப்போகிறதோ என்று தெரியவில்லை.
முதலீட்டாளர்கள் மத்தியில் பய உணர்வு
எனினும் இரண்டாவது பரவல் காரணமாக அங்கு இன்னும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு நிலவி வருகிறது எனலாம், ஏனெனில் அங்கு உற்பத்தி துறையில் முதலீடுகள் 14.8 சதவீதம் முதல் ஐந்து மாதங்களில் குறைந்துள்ளது. இதே உள்கட்டமைப்பு, சொத்து முதலீடு 6.3 சதவீதம் குறைந்துள்ளது. எப்படி எனினும் 0.3 சதவீத வீழ்ச்சியுடன் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றது.
தேவை குறைவு
சில தரவுகளின் படி, சீனாவில் நுகர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், தொழில்துறை பொருளாதாரமானது படிப்படியாக துளிர்விடத் தொடங்கியுள்ளது. எனினும் சீனாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் தேவை சற்று குறைவாகவே உள்ளது. இது ஏற்றுமதியினை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் மற்ற நாடுகள் இறக்குமதி மற்றும் சில்லறை வர்த்தகத்தில் சற்று தாக்கத்தினை கண்டுள்ளன.
பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம்
சீனாவில் பரவி வரும் இரண்டாவது கட்ட கொரோனா அலை, சீனாவை அவ்வளவாக தாக்கவில்லை. எனினும் உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வருகின்றன. இதற்கிடையில் சர்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் சீனா பல அபாயங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருவதாகவும் ஒரு அறிக்கை கூறுகின்றது.
இதில் கவனம்
நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 6.2 சதவீதம் சுருங்கிய பின்னர், 2020ம் ஆண்டிற்காக பொருளாதார வளர்ச்சி இலக்கை சீனா கைவிட்டு விட்டது. அதற்கு பதிலாக வேலை வாய்ப்பு மற்றும் தேவையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
லாக்டவுன் தளர்வு
புலம் பெயர் தொழிலாளர்கள், தொழில்சாலைகள் மூடல்களால் வேலை இழந்தோர் மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக வேலையிழந்தோர் என பலருக்கும் தற்போது ஆறுதல் கொடுக்கும் விதமாக லாக்டவுன் தளர்வுகள் அமைந்துள்ளன.
ஆக இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தற்போது மீண்டும் துளிர்விடத் தொடங்கி விட்டது என்று தான் கூறவேண்டும். ஆனால் அதேசமயம் இந்தியா போன்ற மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடு என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை. ஏனெனில் கொரோனாவின் தாக்கமும் சரி, பலி எண்ணிக்கையும் சீனாவினையே மிஞ்சியுள்ளது.