சீனாவில் மின் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுவதால், நிறுவனங்களின் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது நிறுவனங்களின் உற்பத்தியினை பாதித்துள்ளதோடு சீன மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
டிராகன் தேசமான சீனா தனது மின்சார தேவைக்கு நிலக்கரியையே பெரிதும் சார்ந்துள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை
தற்போது நிலக்கரியின் தேவை அதிகம் உள்ள நிலையில், சப்ளை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நிலக்கரி விலையும் பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கிடையில் நிலக்கரி பற்றாக்குறையினால் மின் உற்பத்தியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார சப்ளையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மோசமாக பாதிப்பு
அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், சீனா நிறுவனங்களின் உற்பத்தி விகிதமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் உள்ள லியானிங், ஜிலின், ஹெயிலோங்ஜியாங் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது.
கடுமையான மின்வெட்டு
குறிப்பாக லியானிங் மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மின்வெட்டு காரணமாக, கார்பன் மோனாக்ஸைடு வெளியேறியதால், அங்குள்ள 23 பணியாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சீனா செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதற்கிடையில் சீனாவின் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சப்ளை சங்கிலி பாதிக்கலாம்
இதன் காரணமாக உலகம் முழுவதுமான சப்ளை சங்கிலியில், இது எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச நாடுகள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவை அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்த சமயத்தில் சீனா உற்பத்தியினை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சியின் திட்டமா இது?
ஒருபுறம் கடும் கட்டுப்பாட்டினால் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது என்றாலும், சீனாவின் பரந்த உற்பத்தி தொழிற் சாலைகளின் பரப்பரப்பான காலங்களில் ஏற்படும் இடையூறு காரணமாக வளர்ச்சியில் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாதார வளர்ச்சியை சம நிலைப்படுத்துவதற்கான போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் சீனா அரசு மாசுபாட்டை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. ஆக இந்த மின்வெட்டு இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
வளர்ச்சி சரியலாம்
இதற்கிடையில் தற்போதைய காலாண்டில் 5.1%ல் இருந்து 4.7% ஆக குறையலாம் என சீனாவின் பொருளாதாரம் குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதே வருடாந்திர வளர்ச்சிகான தங்கள் கண்ணோட்டத்தை 8.2%ல் இருந்து, 7.7% ஆக குறைத்துள்ளனர். இது மேலும் சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த பிரச்சனைகள்
மேலும் உற்பத்தியாளர்கள் சிப்களின் பற்றாக்குறை, கப்பலில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், போக்குவரத்து மற்றும் கொரோனா தாக்கத்தினால் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.
ஏற்கனவே சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே, திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்த போராடி வருகின்றது.
இந்தியாவும் பாதிக்கலாம்
இப்படி சவாலான நிலைக்கு மத்தியில் தான் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இது மேலும் சீனாவின் பொருளாதாரத்தில் மேற்கொண்டு பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்பதோடு, சர்வதேச அளவில் விலைவாசியினை அதிகரிக்கலாம். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.