பெய்ஜிங்: சீனாவின் கடந்த சில வாரங்களாகவே மிக அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. பல முக்கிய நகரங்களும் லாக்டவுன் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது.
குறிப்பாக முக்கிய தொழில் நகரங்களாக ஹாங்காய், குன்ஷான் உள்ளிட்ட நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தான் உலகின் முன்னணி பொருளாதார நாடு பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ளது.
பணி நீக்கம்
குறிப்பாக சீனாவின் ஜீரோ கோவிட் பாலிசியானது பொருளாதாரத்தில் மிக மோசமான பாதிப்பினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனாவின் டெக் நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எத்தனை பேர் வெளியேற்றம்
இது குறித்து Al Jazeera-ல் வெளியான செய்தியொன்றில், பெய்ஜிங்கில் கடந்த ஆண்டுகளாக நிறுவனங்கள் மீது கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் பரந்த அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜூலை - ஏப்ரல் காலகட்டத்தில் கிட்டதட்ட 73,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
அது மட்டும் அல்ல, இந்த சவாலான காலகட்டத்தில் அதிகரித்து வரும் நஷ்டத்தினை குறைத்து, லாபம் காண நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நிறுவனத்தின் ஒவ்வொரு துறையிலும் அதிகப்படியான ஆட்கள், இண்டர்ன்ஷிப் நடவடிக்கைகள் நிறுத்தம், லாபமற்ற வணிகங்கள் இடை நிறுத்தம், புதிய பணியமர்த்தல் குறைப்பு என பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்புகளும் சரிவு
தற்போது புதிய வேலை வாய்ப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன. அதிலும் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள ஊழியர்கள் புதிய வேலைகளை தேடிக் கொள்வதிலும் கடினமான ஒன்றாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆக பலரும் வேலையிழந்து தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தொழில்நுட்ப மாற்றம்
முன்னதாக சீனாவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் கேமிங், ஈகாமர்ஸ், மற்ற பாரம்பரிய இணைய வணிகத்தில் கவனம் செலுத்தின. அவை மூன்று முதல் 5 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய வளர்சியினை கண்டன. ஆனால் இன்று அப்படியில்லை. தற்போது அரசு வளர்ச்சி கண்டு வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறி வருகின்றது. குறிப்பாக ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், பயோடெக் மற்றும் பிற கட்டமைப்புகளுக்கு சாதகமாக உள்ளன. இதனால் டெக் நிறுவனங்கள் பெரியளவில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. எனினும் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி காண மிக தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
கற்றுக் கொள்ளுங்கள்
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து புதிய புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இது டெக் துறையில் மட்டும் அல்ல, எந்த துறையானாலும், அதில் புதியவற்றை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஆக எப்போதும் கற்றுக் கொண்டே இருங்கள். அதுவே உங்களை துறையில் சிறந்து விளங்க வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.