சீனாவின் டிக் டாக் செயலியை பற்றி அறியாதவர் இருப்பது சற்று குறைவாகத் தான் இருக்க முடியும். ஏனெனில் பட்டிதொட்டியெல்லாம் பரவி வந்த இந்த டிக் டாக்கில் செயலியில், சிறு குழந்தைகள் முதல் கொண்டு வயதான பாட்டி வரை பெர்பார்மர்களாக இருந்து வந்தனர்.
இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரையிலும் இந்த செயலியானது பரவி இருந்தது. ஆனால் இந்த செயலியால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் மற்றும் வீசாட் செயலிகளை தடை செய்யப்பட்டன.
அமெரிக்காவிலும் தடை
டிக் டாக் மற்றும் வீ சாட் செயலிகளை பாதுகாப்பு கருதி, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவிலும் தடை செய்தார். ஆனால் டிக்டாக் செயலிக்கு ஒரு நல்ல வாய்ப்பினையும் கொடுத்தார். அது டிக் டாக்கின் அமெரிக்கா வணிகத்தினை அமெரிக்க நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் அதனை தடை செய்ய மாட்டோம் என்றும் கூறினார்.
அமெரிக்கா குற்றம்
ஆரம்பத்தில் அமெரிக்கர்களின் 100 மில்லியன் பயனர்களின் தரவினை, சீனா அரசுக்கு கொடுப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் பைட் டான்ஸ் நிறுவனமோ இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் தான் டிக்டாக்கினை தடை செய்யப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதன் பின்னார் ஆரக்கிள்+ வால்மார்ட்+ டிக்டாக் நிறுவனங்களின் இணைப்புக்கு தனது ஆசிர்வாதம் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிறுவனம்
அதோடு டொனால்டு டிரம்ப் டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட்டான்ஸ், ஆரக்கிள், வால்மார்ட் இவை மூன்றும் இணைந்து செயல்படலாம். இவை மூன்றும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தினை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்டாக் நிறுவனம், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.
டிக்டாக் குளோபல்
அதோடு இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து, டிக்டாக் குளோபல் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும் என ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியது. மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பெரும்பாலும் அமெரிக்கர்கள் இருப்பர். அதோடு அமெரிக்கா பாதுகாப்பு நிபுணரும் அந்த குழுவில் இருப்பர் எனவும் அந்த அறிக்கை கூறியது.
ஒரே கல்லில் மூன்று மாங்காய்
இந்த ஒப்பந்தத்தின் படி, புதிய நிறுவனத்தின் 53% பங்குகளை அமெரிக்கா நிறுவனங்களும், 36% பங்குகளை சீனா நிறுவனமும் வைத்திருக்கும். அதோடு முக்கிய தொழில் நுட்பங்களுக்கும், அமெரிக்கர்களின் தகவல் பாதுகாப்புக்கும், ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்கும் என்றும் கூறப்பட்டது. இந்த இணைப்பினால், அமெரிக்கா கருவூலத்திற்கு 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய வரி கிடைக்கும். அதோடு இந்த நிறுவனம் குழந்தைகளுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது, இது இன்னும் திருப்தி அளிப்பதாக உள்ளது எனவும் டிரம்ப் அப்போது கூறியிருந்தார்.
பெரிய முதலீடுகள்
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த கூட்டணி அமெரிக்காவில் மிகப்பெரிய நிதியினை முதலீடு செய்யலாம். இதனைத் தான் நான் கேட்டது. இது மிகப்பெரும் வெற்றி, இந்த புதிய நிறுவனத்தின் தலைமையகம் டெக்சாஸ் ஆக இருக்கும் என்றும், இதன் மூலம் 25,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த நிறுவனம் உறுதியளித்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
WTO-விடம் முறையீடு
இதே இந்தியா தடை செய்யப்பட்டதோடு சரி, இதுவரை இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை குறித்தும் வெளியிடப்படவில்லை. ஆக டிக் டாக் மற்றும் வீ சாட்டின் மிகப்பெரிய இரு சந்தைகளான இந்தியா அமெரிக்காவில் தோல்வியை கண்டுள்ள சீனா, தற்போது உலக வர்த்தக அமைப்பில் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகளை மீறுகின்றன
அதோடு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும், சீனா உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்தான கருத்துக்களை அமெரிக்கா தரப்பிலோ அல்லது இந்தியா தரப்பிலோ கருத்து தெரிவிக்கவில்லை.