பல தசாப்தங்களாகவே, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. தற்போது தொழில் துறையிலும் இரு நாடுகளுக்கு மத்தியிலான போட்டி அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
உலகிலேயே அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில், இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தன.
ஆனால் இப்போது கொரோனா வைரஸ், உலகின் ஒட்டு மொத்த வர்த்தகத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கிறது. சீனாவில் இருந்து கம்பெனிகள் வெளியேறத் தொடங்கி இருக்கின்றன. ஏன் வெளியேறத் தொடங்கி இருக்கின்றன?
சீனாவில் இருது வெளியேறும் கம்பெனிகள்
உலக அளவில், எல்லா நாடுகளும், தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள், எந்த சூழலிலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இப்போதைக்கு, பல முன்னணி நாடுகள் மற்றும் கம்பெனிகளின் கணிசமான சப்ளை, சீனாவில் இருந்து தான் வந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜப்பானும் ஒன்று.
கொரோனா பிரச்சனை
சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது, பல நாடுகள் மற்றும் கம்பெனிகளுக்குத் தேவையான சப்ளைகள் சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, பல கம்பெனிகள் & நாடுகள், இனி சீனாவை மட்டும் அதிகம் சார்ந்து இருக்கக் கூடாது என்கிற நோக்கில், தங்கள் சப்ளைகளை பல்வேறு நாடுகளுக்கு பரவலாக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
பரவலாக்கல் நடவடிக்கை
அப்படித் தான் ஜப்பான் நாடும், தன் சப்ளை செயினை பரவலாக்கம் செய்ய விரும்புகிறது. தன் சப்ளைகளுக்கு, சீனாவை மட்டும் சார்ந்து இருப்பதைக் குறைக்க விரும்புகிறது. இது சீனாவுக்கு நிச்சயம் ஒரு வருத்தமான செய்தியாகத் தான் இருக்கும். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஜப்பான், இந்தியாவுக்கு சாதகமாக ஒரு முடிவு எடுத்து இருப்பது தான்.
ரீலொகேஷன் பட்டியலில் இந்தியா
சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய கம்பெனிகள், இந்தியா & வங்கதேசத்துக்கு இடமாற்றம் செய்து கொண்டால், ஜப்பானிய அரசு, கம்பெனிகளுக்கு மானியம் வழங்க இருப்பதாக ஜீ நியூஸ் வலைதளம் சொல்கிறது. சீனாவில் இருந்து ஜப்பானிய கம்பெனிகள் வெளியேறுவதே சீனாவுக்கு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும். அதிலும் இந்தியாவுக்கு இடமாற்றம் ஆகிறது, அதற்கு ஜப்பான் அரசு மானியம் வேறு கொடுக்கிறது என்றால், இது கிட்டத்தட்ட சீனாவுக்கு செக் வைப்பது போலத் தானே இருக்கும்.
பட்ஜெட்டில் ஒதுக்கீடு
ஜப்பானின் பொருளாதார, வர்த்தகம் & தொழில் துறை அமைச்சகம், ஜப்பானிய கம்பெனிகள், சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியா வங்கதேசம் தவிர, ASEAN நாடுகளுக்கு இட மாற்றம் செய்து கொண்டாலும் மானியம் கொடுக்கிறார்களாம். ஜப்பான் அரசு 2020-ம் ஆண்டுக்கான கூடுதல் பட்ஜெட்டில் 23.5 பில்லியன் யென்னை, இந்த இடமாற்ற மானியத்து ஒதுக்கி இருப்பதாகவும் ஜி நியூஸ் தன் வலைதளத்தில் சொல்லி இருக்கிறது.
30 கம்பெனிகள்
கடந்த ஜூன் மாதத்தில் தான், இந்த இடமாற்ற மானியத்துக்கு 30 கம்பெனிகளின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. இதில் HOYA கம்பெனியின் எலெக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம் வியட்நாம் & லாவோஸ் நாட்டுக்குச் செல்வதும் அடக்கம். இதுவரை 10 பில்லியன் யென்னை, ஜப்பானிய அரசு, கம்பெனிகளுக்கு மானியமாக கொடுத்து இருக்கிறதாம்.
இந்தியா ஜப்பான் உறவு
சமீபத்தில், Invest India Exclusive Investment Forum - Japan Edition கூட்டத்தில் பேசிய, இந்தியாவின் மத்திய வணிக அமைச்சர் பியுஷ் கோயல், இந்தியாவும் ஜப்பானும் தன் வர்த்தக மற்றும் வியாபார உறவுகளை விரிவாக்கிக் கொளவது அவசியம் என்றார். இந்தியா & ஜப்பானுக்கு இடையிலான வணிக உறவை மேம்படுத்த, அஸ்ஸாமில் 13-வது ஜப்பானிய தொழில் நகரத்தை (industrial township) அமைக்க இருப்பதாக DPIIT-யின் செயலர் குருபிரசாத் சமீபத்தில் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.