"வுஹான் மாகாணத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது" என அமெரிக்கா போன்ற பல நாடுகளும் சீனா மீது புகார் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
Recommended Video
கொரோனா எங்கிருந்து வந்ததாக இருந்தாலும் சரி... சீனாவையும் செம அடி அடித்துக் கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.
சீன அரசு, கொரோனாவால் ஏற்பட்ட வேலை இல்லா திண்டாட்டம் சிக்கலைத் தீர்க்க முடியாமல் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டம்
இப்போது உலகம் முழுக்க, இந்த கொரோனா வைரஸ் லாக் டவுனாலும், கொரோனாவினால் எதிர்காலத்தில் வியாபாரம் கணிசமாக தேங்கும் என்பதாலும், ஆட்களை புதிதாக வேலைக்கு எடுப்பது பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. அதோடு லே ஆஃப் வேலைகளும் தடபுடலாக நடந்து கொண்டு இருக்கின்றன.
சீனா
கம்யூனிஸ்ட் தேசமான சீனாவில் சரியாக வேலை இல்லா திண்டாட்டத்தைக் கணிப்பது சிக்கலான விஷயம். சீனா எப்போதும் தரவுகளில் வெளிப்படையாக இல்லை என்கிறது சி என் என் பத்திரிக்கை. அதே போல சீனாவின் வேலை இல்லா திண்டாட்ட விவரங்கள் மிகவும் குறைந்து மதிப்பிடப்பட்டு இருக்கிறது என்கிறார் Chinese University of Hong Kong-ன் பேராசிரியர் வில்லி லம் (Willy Lam).
தரவுகள்
சீன அரசின் வேலை இல்லா திண்டாட்ட தரவுகள் 4 - 5 சதவிகிதத்துக்கு உள்ளேயே தான் பல ஆண்டுகளாக இருந்தது. மார்ச் 2020-ல் வேலை இல்லா திண்டாட்டம் சீன அரசின் கணக்குப் படி 5.9 %-மாக அதிகரித்து இருக்கிறது. இது சுமாராக 27 மில்லியன் (2.7 கோடி பேர்) வரலாம் என்கிறது சி என் என் பத்திரிகை.
கிராம புறம்
இந்த 2.7 கோடி பேர் போக, சுமாராக 290 மில்லியன் (29 கோடி பேர்) தங்கள் சொந்த ஊரை விட்டு வந்து, கட்டுமானம், உற்பத்தி... போன்ற குறைந்த சம்பளம் கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மார்ச் மாதத்தில், மொத்தம் சுமார் 80 மில்லியன் (8 கோடி பேர்) வேலையை இழந்து இருப்பார்கள் என்கிறார் பொருளாதார வல்லுநர் சங் பின் (Zhang Bin).
பொருளாதார தேக்கம்
கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே, சீனவின் பொருளாதார வளர்ச்சி, சுமாராக 1976-க்குப் பிறகு காணாத சரிவைக் கண்டது. இப்போது கொரோனா வேறு சேர்ந்து சீனாவை தொலைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறது. தற்போது சீனாவின் பிரச்சனை ஜிடிபி வளர்ச்சி அல்ல, வேலை இல்லா திண்டாட்டம் தான் என்கிறார் பேராசிரியர் லம்.
பொலிட் பீரோ
மக்களுக்கு வேலை பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லி இருக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ. சீனா போல அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அடி வாங்கினால், சமூகத்தில் ஒரு அமைதி இல்லாத சூழல் உருவாகும். அது அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை உருவாக்கும் என்கிறார் பேராசிரியர் வில்லி லம். ஆக சீனா இந்த வேலை இல்லா திண்டாட்டத்தை எப்படியாவது சமாளிக்க அல்லாடிக் கொண்டு இருப்பது தெளிவாக புரிகிறது.