இந்தியாவும் சீனாவும் என்ன தான் அண்ணன் தம்பிகளாக பழகினாலும், நல்ல முறையில் நட்பு பாராட்டினாலும், சொத்துக்கு சண்டை போடும் பங்காளிகள் போலத் தான் இருக்கின்றன.
1960-களில், இந்தியா சீனாவுக்கு இடையில் நடந்த போர்களே இதற்கு ரத்த சாட்சி.
அது போக, காஷ்மீரின் அக்ஷய் சின் பிரச்சனை, டோக்லம் எல்லை பிரச்சனைகள் வேறு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகளை சூடாக வைத்துக் கொண்டிருக்கின்றன.
முதலீடுகள்
சீனா போன்ற அண்டை நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என, சில தினங்களுக்கு முன்பு இந்தியா சொன்ன விவகாரம், மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு லெவலுக்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்த நேரத்தில் சீனா ஒரு மாஸ்டர் பிளாணை சத்தம் இல்லாமல் செயல்படுத்தி வருகிறது.
எதற்கு பிளான்
தெற்கு ஆசிய பகுதியில், சொல்லப் போனால் ஆசியாவிலேயே ஒரு வலிமையான நாடாக உருவாக சீனா அப்பட்டமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.
சீனாவை, தெற்கே ஜாவா வரையிலும்,
கிழக்கே தென் சீனக் கடல் வரையிலும்,
மேற்கே ஐரோப்பியா நாடுகள் வரையிலும் நிலம் மற்றும் நீர் வழியாக இணைக்கும் பிரம்மாண்ட திட்டம் தான் சீனாவின் சில்க் ரோட் (Silk Road) திட்டம்.
இந்தியாவும் அடக்கம்
இந்த சீனாவின் பிரம்மாண்ட திட்டத்தில் நடு நாயகமாக இருக்கும் நாடு தான் இந்தியா. இந்த திட்டத்தில் எகிப்து, அரேபிய நாடுகள், பெர்ஷிய பகுதிகள் என பல நாடுகளையும் உள்ளடக்கி இருக்கிறது சில்க் ரோட் திட்டம். இதை Belt & Road Initiative என்றும் சொல்வார்கள். இந்த திட்டத்தை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சில்க் ரோட் திட்டம் ஒரு பக்கம் இருக்க, இந்திய கம்பெனிகளை வளைக்கத் தொடங்கி இருக்கிறது சீனா.
இந்திய கம்பெனிகள்
இந்தியாவின் டாப் 30 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் (1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட கம்பெனிகள்) 18 கம்பெனிகளுக்கு, ஃபண்டிங் சீனாவில் இருந்து தான் வருகிறதாம். இப்படி இந்திய கம்பெனிகளை மறைமுகமாக சீனா வளைத்துப் போட்டு, சத்தம் காட்டாமல் வேலை பார்த்து வருகிறது. அவ்வளவு ஏன் சீனா, கொரோனாவைக் கூட விட்டு வைக்கவில்லை. இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.
உதவிகள்
தெற்கு ஆசிய நாடுகளிலும், கொரோனா வைரஸ் தாறுமாறாக பரவிக் கொண்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தெற்கு ஆசிய நாடுகளுக்கு உதவுவதாகச் சொல்லி, சீனா தன் கரங்களை நீட்டத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு கரம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது.
என்ன உதவி
ஏற்கனவே கொவிட்-19 சோதனை கிட்கள், மாஸ்குகள், பாதுகாப்பு சாதனங்கள் என இந்தியாவின் அண்டை நாடுகளாக இருக்கும் நேபாளம், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மாலத் தீவுகள் என வளைத்து வளைத்து உதவி செய்து இருக்கிறது சீனா. இவை எல்லாம் இந்தியாவின் அண்டை நாடுகள் என்பதை வேறு சொல்ல வேண்டுமா என்ன?
இந்தியா தரப்பு
இந்தியாவுக்கும் இந்த டெக்னிக் எல்லாம் தெரியாதா என்ன..? இந்தியாவும் தன் அண்டை நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை எல்லாம் அனுப்பி வைத்தது. மருத்துவ குழுக்களை அனுப்பியது. அவ்வளவு ஏன் மற்ற அண்டை நாட்டு மருத்துவர்களுக்கு பெரும் தொற்று நோய் பற்றி பாடம் நடத்தினார்கள். ஆனால் சீனா இதை எல்லாம் விட இன்னொரு விஷயத்தை கையில் எடுத்து இருக்கிறது. கடன்...!
சீனக் கடன்
சீனா, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு பலமாக கடன் கொடுத்து, அண்டை நாடுகளையே வளைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்க, இலங்கைக்கு 500 மில்லியன் டாலருக்கு சலுகை கடன் வழங்கி இருக்கிறது. இப்படி வங்க தேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கி இருக்கிறதாம்.
இலங்கை
இலங்கையில் இருக்கும் Hambantota துறை முகத்தை ஒரு சீன நிறுவனம் தான் கட்டிக் கொடுத்தது. அதற்கு நிறைய கடன் வாங்கி இருக்கிறது இலங்கை. இப்போது 99 ஆண்டுகளுக்கு Hambantota துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட இருக்கிறதாம். இப்படித் தான் நாடுகளை கடனில் தள்ளி தன்னை வலுப்படுத்திக் கொண்டு இருக்கிறது சீனா.
மாலத் தீவுகள்
இதே போல, இந்தியப் பெருங்கடலில் ஒரு குட்டி தேசமான மாலத் தீவுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் கடன் கொடுத்து இருக்கிறது சீனா. கடந்த சில வருடங்களில் மாலத் தீவுகள் அரசு, சீனாவின் அரசு நிறுவனங்களுக்கு சில கட்டுமானத் திட்டங்களைக் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வட்டாரம்
நம் இந்தியா, எப்போதுமே சீனா போல பணத்தை அள்ளி இறைக்க முடியாது என டெல்லி அதிகாரிகள் வட்டத்திலேயே சொல்லி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதே போல, சீனா இப்படி இந்தியாவின் அண்டை நாடுகளை கடன் வலையில் வீழ்த்திவிட்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.