உலக முழுவதும் நகரமயமாகிக் கொண்டு வருகின்றன. மக்களின் இடப்பெயர்வு, தொழில்வளம் மற்றும் செல்வவளம் ஆகியவற்றின் காரணமாகக் கிராமங்கள் நகரமாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும், பெரும் நகரங்கள் மிகப்பெரும் நகரங்களாகவும் விரிவடைகின்றன.
வளர்ந்த நகரங்களைச் சுற்றியே ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மையம் கொண்டிருக்கும். 2025 ஆம் ஆண்டில் உலகை ஆளக்கூடிய பெருநகரங்கள் குறித்த தகவல்களை மெக்கன்சி & கம்பெனி என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டில் உலகத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் திறன் படைத்த நகரங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
லண்டன் மாநகரம்
இங்கிலாந்தின் தலைநகரான இலண்டனில் நிலம், வீடு, நிறுவனங்கள் போன்ற சொத்துக்களின் மதிப்பு பன்மடங்கு கூடிவருகின்றது. வெளிநாட்டினர் ஆர்வத்துடன் இலண்டனில் சொத்துக்களை வாங்க முன்வருவது இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, இலண்டனை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளான Waltham Forest, Lewisham மற்றும் Havering போன்ற நகரங்களின் வளர்ச்சியும் அபரிமிதமாக உள்ளது. இலண்டன் மாநகரின் மக்கள் தொகை 14.8 மில்லியனில் இருந்து 2025 ஆண்டளவில் 16 மில்லியனாக உயரும் என மெக்கன்சி & கம்பெனியின் ஆய்வறிக்கை கூறுகின்றது. இங்கிலாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலண்டன் பெருநகரின் பங்கு ஏறக்குறையப் பாதி அளவாகும். இலண்டன் பெருநகரின் உள்நாட்டு உற்பத்தி 752 பில்லியன் டாலரிலிருந்து (535 பில்லியன் பவுண்ட்) 973 பில்லியன் டாலராக (693 பில்லியன் பவுண்ட்) உயரும் என இந்நிறுவனம் கணித்துள்ளது.
பாரிஸ் பெருநகரம்
காதல் நகரமாக அறியப்படும் பாரிஸ் நகரத்தின் மக்கள் தொகை 2025 ஆம் ஆண்டுக்குள், 11.8 மில்லியனிலிருந்து 12.8 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 754 பில்லியன் டாலரிலிருந்து 971 பில்லியன் டாலராக ராக்கெட் வேகத்தில் உயரும் என நம்பப்படுகிறது. சமீபகாலமாகப் பாரிஸ் நகரில் நிலவி வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் சர்வதேச முதலீட்டாளர்கள் பாரிஸ் நகரில் சொத்துக்கள் மற்றும் தொழில்களில் முதலீடு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, பாரிஸ் நகரின் புறநகர்ப்பகுதிகளின் வளர்ச்சியும் மதிப்பும் கூடியுள்ளது.
ரான்ட்ஸ்டேட், நெதர்லாந்து
ஆம்ஸ்டர்டாம், ராட்டர்டாம், டெகன்ஹாக், உட்ரெச் ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்கு இணையாக வளர்ந்து வரும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மற்றொரு நகரம் ரான்ட்ஸ்டேட் ஆகும். 7 மில்லியனுக்கும் குறைவான இந்நகரத்தின் மக்கள் தொகை 2025ஆம் ஆண்டுக்குள் 7.2 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரத்தின் மொத்த உற்பத்தி 364 பில்லியன் டாலரிலிருந்து 462 பில்லியன் டாலராக உயரும். ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் அடையக் கூடிய தொலைவில் உள்ளது ரான்ட்ஸ்டேட் நகரம். துறைமுக நகரமான ரான்ட்ஸ்டேட் சர்வதேச வணிகத்தின் மையமாகத் திகழ்கிறது. பல சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய ஐரோப்பிய நாடுகளுக்கான அலுவலகங்களை இங்குதான் அமைத்துள்ளன.
ரினே-ரூா் (RHIN -RHUR), ஜொ்மனி
மக்கள் தொகை வளர்ச்சி கண்டு வரும் மற்ற பெருநகரங்களைப் போல் அல்லாமல், ஜொ்மனியில் உள்ள ரினே-ரூா் நகரத்தின் மக்கள்தொகை, 11.2 மில்லியனில் இருந்து 11.1 மில்லியனாகக் குறையவிருக்கிறது. இந்நகரில், டஸ்ஸல்டார்ஃப், டார்ட்மன்ட், எஸ்ஸன், டியூஸ்பா்க், வுப்பர்டல் போன்ற பல சிறு நகரங்களும் அடக்கம். இந்நகரின் மொத்த உற்பத்தி 485 பில்லியன் டாலரிலிருந்து 625 பில்லியன் டாலராக உயர வாய்ப்புள்ளது. ஜெர்மனியின் மிகச் சிறந்த நகரங்களுள் ஒன்றாகத் திகழும் ரினே-ரூா் நாட்டின் பல தொழிற்சாலைகளுக்கான சக்தி மையமாவும், வணிக நிறுவனங்களுக்கான பொருளாதார மையமாகவும் விளங்குகிறது. இவற்றுள் பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள 12 நிறுவனங்களும் அடங்கும்.
இஸ்தான்புல் பெருநகரம், துருக்கி
துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகரின் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 10.9 மில்லியன் என்கின்ற தற்போதைய நிலையிலிருந்து, 2025 ஆம் ஆண்டில், 14.8 மில்லியன் அளவாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் இந்நகரின் மொத்த உற்பத்தியும், 188 பில்லியன் டாலரிலிருந்து 480 பில்லியன் டாலராக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நடுத்தரமான வருமானம் உடையவர்களின் எண்ணிக்கை பெருகுவதும், புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இந்நகரின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
மாஸ்கோ பெருநகர், ரஷ்யா
கடந்த ஆண்டுகளில் இந்நகரின் மக்கள் தொகை வளர்ச்சியில் சிறு அளவில் வீழ்ச்சி ஏற்பட்டது. இருந்தபோதும், மெக்கன்சி & கம்பெனியின் கணிப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 2025 ஆம் ஆண்டுக்குள், 11.5 மில்லியனில் இருந்து 12.6 மில்லியனாக உயரும் எனத் தெரிகிறது. மாஸ்கோ நகரின் பொருளாதார வளர்ச்சியில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும் எனப் பல நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நகரின் மொத்த உற்பத்தி தற்போதைய நிலையிலிருந்து இரண்டு மடங்காக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. அதாவது 326 பில்லியன் டாலர் என்னும் தற்போதைய நிலையிலிருந்து 2025 ஆம் ஆண்டுக்குள் 689 பில்லியன் டாலராக உயரும்.
ஷாங்கிங் மற்றும் செங்டு (CHONGQING AND CHENGDU), சீனா
2025 ஆம் ஆண்டுக்குள், ஷாங்கிங் நகரின் மக்கள் தொகை 22.3 மில்லியனிருந்து 30.9 மில்லியனாக உயரும். அதேசமயத்தில் இந்நகரின் மொத்த உற்பத்தி மிகப்பெரும் பாய்ச்சலை சந்திக்கும். அதாவது, வெறும் 89 பில்லியன் டாலர் என்னும் தற்போதைய நிலையிலிருந்து 459 பில்லியன் டாலராக உயரவிருக்கிறது. இப்பெருநகரில் இருந்து பிற நாடுகளைச் சேர்ந்த முக்கிய நகரங்கள் பலவற்றுக்கு நேரடியாக அதிவேக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதும், ஐரோப்பிய நாடுகளுடனான ஏற்றுமதியும் இந்நகரின் பொருளாதாரப் பலத்தை அதிகரிக்கிறது.
ஷாங்கைய் (SHANGHAI), சீனா
2025 ஆம் ஆண்டில், ஷாங்கைய் பெருநகரின் மக்கள் தொகை 22.3 மில்லியனிலிருந்து 30.9 மில்லியனாக உயரும். இந்நகரின் மொத்த உற்பத்தி உலகில் உள்ள மற்ற பெருநகரங்களுக்குச் சவால்விடும் வகையில் உயரவிருக்கிறது. ஆம் தற்போதைய 251 பில்லியன் டாலரிலிருந்து 1.1 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்ப்பு உள்ளது. அயல்நாடுகளின் பெருமளவிலான முதலீடு மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞர்களின் மனிதவள ஆற்றல் ஆகியவைதான் இந்நகரின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என மெக்கன்சி & கம்பெனி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஷாங்கைய் பெருநகரின் வளர்ச்சியால் அதனைச் சுற்றியுள்ள Nanjing, Hangzhou போன்ற நகரங்களும் வளர்ச்சியடைகின்றன.
போகைய் (BOHAI) பொருளாதார மண்டலம், சீனா
பீஜிங் மற்றும் டியான்ஜின் ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள சீனாவின் பொருளாதார மண்டலமாகப் போகைய் நகரம் திகழ்கிறது. பீஜிங் நகரின் மக்கள் தொகை 18.8 மில்லியனிலிருந்து 29.6 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நகரின் மொத்த உற்பத்தி 206 பில்லியன் டாலரிலிருந்து 1 டிரில்லியன் டாலருக்கும் மேலாக உயரும் எனத் தெரிகிறது. அருகில் உள்ள டியான்ஜின் நகரின் மக்கள் தொகை, 11 மில்லியனிலிருந்து 15.1 மில்லியனாக உயரும். இந்நகரின் மொத்த உற்பத்தி 129 பில்லியன் டாலரிலிருந்து 624 பில்லியன் டாலராக உயரும். இப்பொருளாதாதர வளையத்திற்கு அருகில் உள்ள டாலியன், டாங்சான், கியூங்டா போன்ற நகரங்களும் பொருளாதார மையங்களாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பியர்ல் ரிவர் டெல்டா, சீனா
சீனாவின் உற்பத்தி தொழிற்சாலைகளின் மையமான நகரங்ளை உள்ளடக்கியதாக இந்தப் பெருநகரம் விளங்குகிறது. இப்பெருநகரின் பரப்பில் ஷென்ஜென், குவாங்ஜோ, ஃபோஷான், டாங்குவான் போன்ற நகரங்களும் உள்ளடங்கும். 11 மில்லியன் மக்கள்தொகையிலிருந்து 14.9 மில்லியனாக உயரக்காத்திருக்கும் ஷென்ஜென் நகரத்தின் மொத்த உற்பத்தித்திறன் 146 பில்லியன் டாலரிலிருந்து 573 பில்லியன் டாலராக உயரும். குவான்ஜோ நகரத்தின் மக்கள் தொகை 10.3 மில்லியனிலிருந்து 13.7 மில்லியனாக உயரும். இந்நகரத்தின் மொத்த உற்பத்தி, 142 பில்லியன் டாலரிலிருந்து 524 பில்லியன் டாலராக உயரும். வேளாண்மை துறைசார்ந்த தொழில்களில் இருந்து உற்பத்தி மற்றும் சேவைத் துறைசார்ந்த தொழில்களுக்கு இந்நகரம் மாறியதன் காரணமாக இத்தகைய பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
தாய்ஹியோ மண்டலம், ஜப்பான்
டோக்கியோ, நாகோயா, ஒசாகோ ஆகிய மூன்று நகரங்களைச் சுற்றி அமைந்துள்ளது தாய்ஹியோ மண்டலம். இம்மூன்று நகரங்களின் மொத்த உற்பத்தித் திறன் வேகமாக வளர்ந்து வருகிறது. டோக்கியோ நகரத்தின் உற்பத்தி 1.8 டிரில்லியன் டாலரிலிருந்து 2.2 டிரில்லியன் டாலராகவும், நாகோயா நகரின் உற்பத்தித் திறன், 444 பில்லியன் டாலரிலிருந்து 524 பில்லியன் டாலராகவும், ஒசாகோ நகரின் மொத்த உற்பத்தி 818 பில்லியன் டாலரிலிருந்து 914 பில்லியன் டாலராகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்நகரங்களின் தற்போதைய மக்கள் தொகை 2025 ஆண்டுவரை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஒசாகோ நகர மக்கள் தொகையில் மட்டும் சற்று வீழ்ச்சி காணப்படும்.
சிங்கப்பூர்
இப்பெருநகரின் மக்கள் தொகை 2025 ஆம் ஆண்டளவில் தற்போதைய நிலையான 5 மில்லியனிலிருந்து 5.8 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்கரின் மொத்த உற்பத்தித் திறன் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது 223 பில்லியன் டாலரிலிருந்து 454 பில்லியன் டாலராக உயரும். தற்போதைய நிலையில் இந்நகரம் பொருளாதார ரீதியாகச் சில சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. சிங்கப்பூர் அரசால் அமைக்கப்பட்டுள்ள, வருங்காலப் பொருளாதார வடிவமைப்புக் குழுவின் கீழ் இயங்கும் ஐந்து துணை அமைப்புகளின் வழிகாட்டுதலால் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி மீட்டெடுக்கப்படும் என்னும் நம்பிக்கை பிறந்துள்ளது.
சாவோ பௌலோ பெருநகரம், பிரேசில்
தென் அமெரிக்காவின் பொருளாதார மையமாக விளங்கும் இப்பெருநகரத்தின் மக்கள்தொகை, தற்போதைய நிலையான 19.6 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டுக்குள் 23.2 மில்லியனாக உயரும் என மெக்கன்சி & கம்பெனி கணித்துள்ளது. இந்நகரின் மொத்த உற்பத்தி, 437 பில்லியன் டாலரிலிருந்து 913 பில்லியன் டாலராக உயரும். பல்வேறு துறைகளையும் சேர்ந்த நிறுவனங்கள் இந்கரில் இயங்குகின்றன. இந்கரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது.
போஸ்டன் – நியூயார்க் – வாஷிங்டன் மண்டலம், ஐக்கிய அமெரிக்கா
மேற்கண்ட நகரங்கள் அமெரிக்காவின் அறிவுசார் மையமாகவும், நிதிசார் சுரங்கமாகவும், அரசியல் தலைநகரமாகவும் விளங்குகின்றன. சக்தி வாய்ந்த இந்நகரங்களின் வளா்ச்சி மேலும் தொடரும் என மெக்கன்சி & கம்பெனியின் ஆய்வில் தெரிய வருகிறது. நியூயார்க் நகரின் மக்கள் தொகை 2025 ஆம் ஆண்டில் தற்போதைய 18.9 மில்லியனிலிருந்து 19.6 மில்லியனாக உயரும். மொத்த உற்பத்தி 1.1 டிரில்லியன் டாலரிலிருந்து 1.5 டிரில்லியன் டாலராக உயரும். வாஷிங்டன் நகரின் மக்கள் தொகை, 5.6 மில்லியனிலிருந்து 6.5 மில்லியனாக உயரும். இந்கரின் மொத்த உற்பத்தி 392 பில்லியன் டாலரிலிருந்து 600 பில்லியன் டாலராக உயரும்.
சிகாகோ பெருநகரம், ஐக்கிய அமெரிக்கா
போக்குவரத்து இணைப்பு, குறைந்த அளவிலான செலவுகள் அதிகமான வருமான வாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் விரும்பும் பெருநகரமாகச் சிகாகோ திகழ்கிறது. இந்நகரின் மக்கள் தொகை 9.4 மில்லியனிலிருந்து 10.1 மில்லியனாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மொத்த உற்பத்தி, 496 பில்லியனிலிருந்து 661 பில்லியனாக உயரும். இந்நகரில் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருப்பதால் இந்நகரின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்பட்டதாக உள்ளது.
தல்லாஸ் – ஃஎப்டி வொர்த், ஐக்கிய அமெரிக்கா
அதிகப்படியான நகர்ப்புறங்களை உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்குப்பகுதியான இந்நகர்ப் பகுதி புதிய எழுச்சியைக் காண காத்திருக்கிறது. இந்நகரின் மக்கள் தொகை, 6.4 மில்லியனிலிருந்து 8.6 மில்லியனாக உயரும் என ஆய்வறிக்கை கூறுகிறது. நகரின் மொத்த உற்பத்தி 325 பில்லியன் டாலரிலிருந்து 541 பில்லியன் டாலராக உயரும். மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான Exxon, AT&T, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகியவை இந்நகரில்தான் அமைந்துள்ளன. இந்நகரிலிருந்து பெரும் எண்ணெய் நிறுவனங்கள் அமைந்துள்ள ஹீஸ்டன் நகருக்கு அதிவேக ரயில் போக்குவரத்துக்கான திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
ஹீஸ்டன் பெருநகரம், ஐக்கிய அமெரிக்கா
தற்போதைய நிலையில், கச்சா எண்ணெய் விலையில் விலை வீழ்ச்சி இருந்தபோதிலும் ஹீஸ்டன் நகரின் பொருளாதார வளர்ச்சி பலம் மிக்கதாகவே விளங்குகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், பொறியியல், காப்பீடு, தொழில்நுட்பம் போன்ற பல துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் மையமான இடமாக இந்நகரம் விளங்குகிறது. இந்நகரின் மக்கள் தொகை 5.9 மில்லியனிலிருந்து 7.7 மில்லியனாக உயரும் எனக் கருதப்படுகிறது. நகரின் மொத்த உற்பத்தி 341 பில்லியன் டாலரிலிருந்து 560 பில்லியன் டாலராக உயர வாய்ப்பிருக்கிறது.
மெக்சிகோ பெருநகரம், மெக்சிகோ
வணிகம் மற்றும் முதலீடுகளால் வளர்ச்சியடைந்த பெருநகரமாக விளங்கும் மெக்சிகோவின் மக்கள் தொகை 2025 ஆம் ஆண்டில் 20 மில்லியனிலிருந்து 21.6 மில்லியனாக உயரும். இந்நகரின் உற்பத்தித் திறன் 255 பில்லியன் டாலரிலிருந்து 460 பில்லின் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளின் சந்தைகளில் இருந்து குவிந்துள்ள முதலீடுகள் ரீடெய்ல் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வருகின்ற சில ஆண்டுகளில் மட்டும் புதியதாக 100 வணிக மையங்கள் இந்நகரில் அமையவிருக்கின்றன.
லாஸ் ஏஞ்செல்ஜஸ் (LA) பெருநகரம், ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இரண்டாவது நகரம் லாஸ் ஏஞ்செல்ஸ். 2025 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்செல்ஸின் மக்கள் தொகை, 12.8 மில்லியனிலிருந்து 15 மில்லியனாக உயரும். மொத்த உற்பத்தித் திறன், 732 பில்லியன் டாலரிலிருந்து 1 டிரில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறை மற்றும் திரைப்படம் போன்ற படைப்பாக்கத் துறை மட்டும் அல்லாமல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களும் இந்நகரில் பெருகி வருகின்றன. பார்ச்சூன் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களுள் 15 நிறுவனங்களின் தலைமையகம் இந்நகரில் அமைந்துள்ளன. அமெரிக்க அரசால் திட்டமிடப்பட்டுள்ள அதிவேக புல்லட் ரயில் திட்டம், லாஸ் ஏஞ்செல்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ நகரங்களுக்கு இடையே செயல்பாட்டுக்கு வரும்பொழுது தொழிலாளர்களுக்கும் தொழில் துறையினருக்கும் மிகப்பெரும் உந்து சக்தியாக அமையும்.