கொரோனாவின் தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள நிறுவனங்கள் சீனாவை கைகழுவ நினைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் சீனாவின் மீதான கோபத்தினை காட்ட பெரும்பாலான நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர நினைக்கின்றன.
ஏப்ரல் 13 அன்று அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் மார்க் கீரின் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளங்களை சீனாவிலிருந்து மாற்ற ஊக்குவித்தனர்.
கட்டணத்தினை திரும்ப பெற வேண்டும்
கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அதனை சீனா மூடி மறைத்தது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவியது என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமெரிக்கா சீனா இடையே நிலவி வந்த வர்த்தக போரினால் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா மீது விதித்த கட்டணத்தினை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.
தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர்
கொரோனா தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை கண்டு வரும் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கு எதிராக, தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சுமத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களில் அமெரிக்கா சீனா வர்த்தகப் போரும் தொடர்ந்து தீவிர மடைந்து வருகிறது.
ஆதரவு கொடுக்கும் ஜப்பான்
இந்த நிலையில் சீனாவில் சாதகமான உள்கட்டமைப்பு இருந்த போதிலும், பெரும் நிறுவனங்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவையாக இருந்து வருகிறது. இதற்காக ஜப்பான் கடந்த மாதம் தனது நிறுவனங்களை சீனாவிலிருந்து வெளியேற்றுவதற்கு 2.2 பில்லியன் டாலரினை பொருளாதார தொகுப்பாக ஒதுக்கியது.
நிறுவனங்கள் விருப்பம்
மேலும் இவ்வாறு சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு தங்கள் நிறுவனங்களை மாற்ற நினைக்கும் நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தங்களது உற்பத்தியை மாற்ற ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் இந்தியா, தைவான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் பலன் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா வர ஆர்வம்
சீனாவின் மீது உள்ள இந்த கோபத்தினால் இந்தியா நீண்டகால பயனாளியாக மாறலாம் என்றும் இந்தியா நம்புகிறது. மேலும் இந்தியாவுக்கு தங்களது உற்பத்தி ஆலையை மாற்றுவதில் ஆர்வம் காட்டிய சில உலகளாவிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான டெலிடெய்ன் மற்றும் ஆம்பென்னோல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களாக ஜான்சன் & ஜான்சன் ஆகியோர் அடங்குவர்.
கொரோனா காரணம் இல்லை
அதோடு சில வாகன உதிரி பாகங்கள் நிறுவனமும் இந்தியாவில் அதன் உற்பத்தியை தொடங்க ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக மேற்கண்ட நிறுவனங்கள் பலவும் இந்தியாவை விருப்பமாக கருதுகின்றன. சொல்லப்போனால் சீனாவினை விட இந்தியாவில் கொரோனாவின் வழக்குகள் அதிகம். ஆக கொரோனா இங்கு இதனை தேர்வு செய்யும் காரணியாகவும் அமையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
இந்தியாவை தேர்ந்தெடுக்க காரணம் இது தான்?
சரி வேறு என்ன தான் காரணம் இந்தியாவை தேர்ந்தெடுக்க. உள்கட்டமைப்பு, நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வியாபாரம் செய்வதில் எளிமை, சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது இங்கு எளிமை. சிறந்த வணிகச் சூழல் இந்தியாவில் உள்ளது ஆக இதுபோன்ற பல காரணங்கள் இந்தியாவினை தேர்ந்தெடுக்க காரணமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகமும் ஆர்வம்
வெளிநாட்டு முதலீட்டை மட்டும் அல்லாமல், சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களை ஈர்ப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் சில அமைச்சகங்களைக் சேர்ந்த அதிகாரத்துவக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் உத்திர பிரதேசம் போன்ற ஓரிரு மாநிலங்கள் சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களை கவர்திழுக்கும் நோக்கத்தினை கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முகவரியை கொடுக்குமா?
இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவை சீனாவுக்கு பதிலாக உலகின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டுமானால், வியாபாரத்தினை எளிதாக்குவதற்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஆக சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா தனது முகவரியைக் கொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.