ஷாங்காய்: உலகம் முழுவதும் எச்சரிக்கை மணி அடித்து வரும் கொரோனா வைரஸால், இது வரை சீனாவில் 1016 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதோடு 42,638 பேரும் இந்த கொடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
சீனா மக்களை பாடாய் படுத்தி எடுக்கும் கொரோனா ஒரு புறம் எனில், மறுபுறம் சீனா பொருளாதார ரீதியாகவும் மிக பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
நிறுவனங்கள் மூடல்
பல நிறுவனங்கள், தொழிலகங்கள், உணவகங்கள், மால்கள், கடைகள் என மூடப்பட்டு காணப்படுகின்றதாம். கொரோனாவின் தொற்றுதலுக்கு பயந்து யாரையும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்த நாட்டு அரசு மக்களை எச்சரித்துள்ள நிலையில், அந்த நாட்டின் சில்லறை வியாபாரமும் 50% கீழ் குறைந்துள்ளதாம்.
ஸ்மார்ட்போன் விற்பனை குறையும்
இந்த நிலையில் முதல் காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் விற்பனை 50% வரை வீழ்ச்சியடையக் கூடும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் பல சில்லறை கடைகள் நீண்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. மேலும் இவைகள் எப்போது திறக்கப்படும் என்றும் தெரியாத நிலையில் விற்பனை பாதியாக குறையலாம் என்றும் கூறப்படுகிறது.
பாதிப்பு அதிகரிப்பு
மேலும் சீனாவில் கொரோனாவிற்கான முழுமையாக தடுப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் வெகு வேகமான பரவி வரும் கொரோனாவால் நாளுக்கு நாள் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் தாக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனால் இன்னும் பொருளாதாரம் சரியவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இறப்பும் அதிகரிப்பு
சொல்லப்போனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 90 பேருக்கு மேல் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், திங்கட்கிழமையன்று மட்டும் ஒரே நாளில் 100 பேருக்கு மேல் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சீனாவையே உலுக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் ஹூவாய் போன்ற சிறந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள், இந்த ஆண்டு 5ஜி ரோல் அவுட் திட்டங்களை தீட்டின. ஆனால் தற்போது கொரோனாவினால் இந்த திட்டங்கள் நிறுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
புதிய வெளியீடுகள் தாமதமாகலாம்
மேலும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் புதிய வெளியீடுகளை வெளியிட தயாராகி வந்த நிலையில், தற்போது சில்லறை கடைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய வெளியீடுகள் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சீனாவில் பெரிய நிகழ்வுகள் எதற்கும் அனுமதிக்கப்படாது என்றும் அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
இறக்குமதி குறையும்
இந்த நிலையில் நடப்பு காலாண்டில் சீனாவில் இருந்து மொபைல் போன் இறக்குமதி பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோல், கம்ப்யூட்டர்கள் இறக்குமதியும் பாதிக்கப்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் ஆப்பிள், பாக்ஸ்கான், ஹீவாய் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனா கிளைகளை மூடியுள்ளன.
நிறுவனங்களை திறக்க தயாராகி வருகின்றன
ஆராய்ச்சி நிறுவனமான கனாலிஸ் ஸ்மார்ட்போன் இறக்குமதி பாதியாக குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதே போல் மற்ற ஆய்வுகள் 30% குறையலாம் என்றும் மதிப்பிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனம் இது குறித்து கூறுகையில், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் தனது சில்லறை விற்பனை நிலையங்களை விரிவுபடுத்துவதாக கூறியுள்ளது. ஆனால் எப்போது என உறுதி சொல்லவில்லை. ஏனெனில் அவை முழுமையாக தொடங்க போராடி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளது.
உதிரி பாகங்கள்
சீனா எலக்ட்ரானிக் பொருட்களை பொறுத்தவரை, சீன தயாரிப்புகளின் ஆதிக்கம் தான் அதிகம். பிற வெளிநாட்டு நிறுவனங்களாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களாகத்தான் இருக்கும். ஏனெனில், பிரபல நிறுவனங்கள் கூட, சீனாவுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து, மீண்டும் அங்கிருந்து முழுமையாக வடிவமைக்கப்பட்ட பொருட்களாக மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்கின்றன.
புது பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்படலாம்
ஆனால் தற்போது சீனாவில் நிலவி வரும் நிலையை பார்த்தால், கொரோனாவின் தாக்கத்தினால் புதிய பிராண்டுகளுக்கு இதி வழி வகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவின் ஜியோமி, விவோ, வோப்போ உள்ளிட்ட சீன ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் சக்கைப்போடு போடுகின்றன. ஆனால் தற்போது சீனாவில் தற்போது நிலவி வரும் நிலையில் சீனா ஸ்மார்ட்போன்களுக்கு தட்டுப்பாடு வருமோ என்ற நிலையை கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ளது.
உற்பத்தி நிறுத்தம்
ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. உற்பத்தி நின்று விட்டது. இதே நிலை நீடித்தால் மொபைல் போன் இறக்குமதி பாதியாக குறையும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். மேலும் சீனாவின் ஜியோமி, வோப்போ மற்றும் விவோ உள்ளிட்ட சீனா மொபைல் போன் நிறுவனங்களுக்கு பெரும் அடிவாங்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
5ஜி கருவிகளும் தாமதமாகலாம்
இதுபோல் உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய 5ஜி கருவிகள் அறிமுகம் செய்வது தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உள்ளூர் உற்பத்திக்கும் சிக்கல் வரலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் சீனா மொபைல் நிறுவனங்கள் இந்தியாவிலும் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் சிக்கல்
எனினும் இதற்கான உதிரி பாகங்கள் பல சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவில் உற்பத்தி செய்தாலும், சீனாவில் இருந்து சில உதிரி பாகங்கள் வரத்து குறைவதால் உள்நாட்டு உற்பத்திக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. எப்படியோ சீனாவுக்கு பொருளாதார ரீதியான ஒரு தாக்கம் இருக்கும் என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.