சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் கடன் நெருக்கடியில் தத்தளிக்கும் நாடுகளுக்கு கடன் வழங்குவதில் எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் முதலில் பேசுமாறு பாகிஸ்தானை, சீனா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.
நாங்கள் சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர்கள் அனைவரும் பணம் கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் முதலில் ஐஎம்எஃப்-பினை நாடுமாறு கூறுகிறார்கள் என்று இஸ்மாயில் கூறியதை செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் மேற்கோளிட்டுள்ளது.
ஐஎம்எஃப் கொடுத்த நாங்களும் தர்றோம்
மேற்கூறிய ஒவ்வொரு நாடுகளும் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவுகளை பொறுத்தவரை இது ஒரு புதிய வளர்ச்சி. ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி 2018ம் ஆண்டில் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து, பாகிஸ்தான் கடனை பெற்றது. ஆனால் இந்த முறை அப்படி அல்ல ஐஎம்எஃப் கடன் கொடுத்தால் நாங்களும் தருவோம் என மேற்கண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ரூபாய் ஆசியாவிலேயே மோசம்
பாகிஸ்தானின் பொருளாதார நிலை குறித்தான ஸ்கோர், 2009ம் ஆண்டில் இருந்து மிக குறைவாக உள்ளதை வெளிப்படுத்துகிறது. கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தானின் அன்னிய செலவாணி கையிருப்பு என்பது மிக பாதியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மே மாதத்தில் பாகிஸ்தானின் ரூபாய் கிட்டதட்ட 8% குறைந்துள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, ஆசியாவிலேயே பாகிஸ்தான் ரூபாய் மிக மோசமாக உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஐஎம்எஃப்-ஐ தொடரும் சீன வங்கி
சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு வங்கியும், ஐஎம்எஃப்-க்கு ஆதரவாக உள்ளது. ஆக ஐஎம் எஃப் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டால் சீன வங்கியும் இதனை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸ்மாயில் உலகளாவிய பத்திர சந்தை மற்றும் வணிக வங்கிகளில் இருந்து நாடு மூடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது நடக்குமா?
சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டால், மற்ற நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கலாம். இது நடந்தால் அடுத்த நிதியாண்டில் பாகிஸ்தானில் அன்னிய கையிருப்பு 10 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக அதிகரிக்கலாம். பாகிஸ்தான் நடப்பு ஆண்டில் 3.2 பில்லியன் டாலர் கடனை எதிர்கொள்ள இருக்கிறது.
எரிபொருள் விலையேற்றம்
இதற்கிடையில் பாகிஸ்தான் அரசாங்கம் எரிப்பொருள் விலையினை அதிகரித்த நிலையில், அதன் டாலர் பத்திரங்கள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. கடன் கிடைக்க ஐஎம்எஃப் முன்னிலைப்படுத்திய நிலையில் எரிப்பொருள் விலை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் டாலர் பத்திரங்கள் மே மாதத்தில் வரலாறு காணாத வீழ்ச்சியினை எட்டியுள்ளது.
பாகிஸ்தானின் தேவை
ஜூன் மாதம் தொடங்கும் நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு 36 பில்லியன் டாலர் நிதியுதவி தேவை என்பது மற்றொரு பிரச்சனை.
ஆனால் இப்படி பல இக்கட்டான நிலைகளுக்கு மத்தியில் ஐஎம் எஃப் பாகிஸ்தானுக்கு உதவுமா? பாகிஸ்தான் இன்னொரு இலங்கையாக மாறுகிறதா? பாகிஸ்தானுக்கு கடனுதவி கிடைக்குமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.