உலகின் சக்தி வாய்ந்த நாடு எது என்றால் 5-ம் வகுப்பு மாணவன் கூட அமெரிக்கா என்பான். ஆயுத பலம், பண பலம், அரசியல் செல்வாக்கு, அறிவியல்... என எதை எடுத்தாலும் அமெரிக்காவை ஒதுக்கிவிட்டு உலகம் இயங்காது.
அந்த அளவுக்கு அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள், உலகோடு இணைந்து இருக்கிறது.
ஆனால் கண்ணுக்கே தெரியாத கொரோனா, அமெரிக்காவை கண்ட மேனிக்கு அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா கொரோனாவை எதிர் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது. அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் லே ஆஃப்.
வேலை வாய்ப்புகள்
ஒரு நாட்டில் வேலை வாய்ப்புகளும் தொழில் வளமும் சீராக இயங்கினால் தான் பொருளாதாரம் சீராக இயங்கும்.
1. வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்களால் வரும் வருமானத்தை மக்கள் செல்வழிப்பார்கள்.
2. அது வியபாரிகளுக்கு வருமானமாகும். 3. வியாபாரிகளும் தங்கள் தொழிலை விரிவாக்கி இன்னும் பலருக்கு வேலை கொடுப்பார்கள். இந்த சுழற்சி தொடரும்.
வேலை போச்சு
ஆனால் மக்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளை இழந்து வந்தால்..? மக்கள் கையில் பணம் இருக்காது. எனவே நுகர்வு வீழ்ச்சி காணும். நுகர்வு இல்லாததால், உற்பத்தி சரியும். இதனால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் அப்படியே தேங்கி நிற்கும். இப்போது அது தான் அமெரிக்காவிலும் நடந்து கொண்டு இருக்கிறது.
பயங்கரமான லே ஆஃப்
கொரோனா வைரஸால் பல்வேறு வியாபாரிகள், தங்கள் வியாபாரத்தைச் செய்ய முடியாமல், தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த அளவுக்கு என்றால், கடந்த 6 வாரங்களில் சுமாராக 3 கோடி பேர் அமெரிக்காவில் (30 மில்லியன்) வேலையை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
லே ஆஃப் வேகம்
கடந்த மார்ச் மாதத்தில் ஒரே வாரத்தில் சுமாராக 69 லட்சம் பேர் வேலையை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தார்கள். இது தான் ஒரே வாரத்தில் Unemployment Benefit-க்கு அதிகபட்சமாக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை. இப்போது, இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தில் சுமாராக 38 லட்சம் பேராக குறைந்து இருக்கிறது என்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதலான செய்தி.
வேலை இல்லா திண்டாட்டம்
1929 - 30 காலகட்டத்தில் Great Depression வந்தது. அப்போது தான் அமெரிக்க பொருளாதாரம் வரலாறு காணாத வேலை இல்லா திண்டாட்டங்களைக் கண்டது. அதன் பிறகு இந்த மே 2020-ல், அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம் 16.4 %-மாக உயர வாய்ப்பு இருப்பதாக USA Today பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.
பெரிய அடி
இந்த 16.4 % வேலை இல்லா திண்டாட்டம் என்பது, 1929 - 30 க்ரேட் டிப்ரஷனுக்குப் பிறகு, அமெரிக்க வரலாறு காணாத மிகப் பெரிய வேலை இல்லா திண்டாட்டம் என்கிறது மார்கன் ஸ்டான்லி கம்பெனி. கடந்த பல ஆண்டுகளாக உருவான வேலை வாய்ப்புகள் எல்லாம், கடந்த சில நாட்களில் காலியாகிக் கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையிலேயே அமெரிக்காவுக்கு இது மரண அடி தான்.
பொருளாதாரம் அடி
இப்படி மக்கள் சகட்டு மேனிக்கு Unemployment Benefit-க்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்க, மறு பக்கம் பொருளாதாரம் நேரடியாக அடி வாங்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 2020-ல் அமெரிக்காவில் மக்களின் நுகர்வு சுமாராக 7.5 % சரிந்து இருக்கிறதாம். இது கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்கா பார்க்காத நுகர்வுச் சரிவு என்கிறது யு எஸ் ஏ டுடே. அப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்கள் என்ன ஆகும்..? இதை விட நுகர்வுச் சரிவு இன்னும் அதிகரிக்கத் தானே செய்யும்?
எத்தனை பேருக்கு பணம்
தங்கள் வேலையை இழந்த அல்லது லே ஆஃப் செய்யப்பட்ட மக்கள், அமெரிக்காவின் மாநில அரசின் Unemployment Benefit-க்காக லட்சக் கணக்கானவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு முறையாக பணம் கிடைக்கிறது என ஒரு முக்கியமான கேள்வியை முன் வைத்து இருக்கிறார் The Century Foundation அமைப்பின் ஆண்ட்ரூ ஸ்டெட்னர் (Andrew Stettner).
29 % பேருக்கு மட்டுமே
இதற்கு விடை கொடுக்கும் விதத்தில், சமீபத்தில் Vox பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. அமெரிக்காவில் Pew Research Center என்கிற அமைப்பு எடுத்த பகுப்பாய்வில், வேலை இழந்து Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் 29 சதவிகித அமெரிக்கர்களுக்கு மட்டுமே கடந்த மார்ச் 2020-ல் வேலை இல்லாதவர்களுக்கான சலுகைப் பணத்தை பெற்று இருப்பதாகச் சொல்லி நமக்கு ஷாக் கொடுக்கிறது. அப்படி என்றால் மீதி 71 % பேரின் நிலை?
கிடைக்கவில்லை
Unemployment Benefit-க்கு விண்ணப்பித்த, மீதமுள்ள 71 சதவிகிதம் பேர், கடந்த மார்ச் 2020-ல், தங்களுக்கான சலுகை பணத்தைப் பெறவில்லையாம். அதே போல ஒவ்வொரு மாகாணத்திலும், Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு பணத்தை பெற்றவர்கள் எண்ணிக்கை விகிதமும் மாறுபட்டுக் இருக்கிறதாம். அதாவது எல்லா அமெரிக்க மாகாணங்கலிலும் ஒரே போல எண்ணிக்கையில் சலுகைப் பணத்தைக் கொடுக்கவில்லை.
மாகாணம்
உதாரணமாக மாசாசூட்ஸ் (Massachusetts) மாகாணத்தில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் 66 சதவிகிதம் பேருக்கு, வேலை இழந்தவர்களுக்கான பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம். ஆனால், ஃப்ளோரிடா (Florida)-வில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களில் வெறும் 7.6 சதவிகிதம் பேருக்கு தான் சலுகைப் பணத்தைக் கொடுத்து இருக்கிறார்களாம்.
சமம் இல்லை
அமெரிக்க மத்திய அரசு CARES Act வழியாக, 2.2 ட்ரில்லியன் டாலரை கொரோனா உதவித் தொகையாக ஒதுக்கி இருக்கிறது. ஆனால் அதை கொடுக்கும் வேலையை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட்டது. மாநில அரசுகளோ சொதப்பித் தள்ளிக் கொண்டு இருக்கிறது. அதற்கு இன்னொரு உதாரணம். கொடுக்கும் சலுகைப் பண அளவில் வேறுபாடு.
வேறுபாடு
மிசசிப்பி (Mississippi) மாகாணத்தில் வசிப்பவருக்கு Unemployment Benefit-ஆக வாரத்துக்கு 235 டாலர் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். ஆனால் மாசாசூட்ஸ் (Massachusetts) மாகாணத்தில் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்தவர்களுக்கு வாரத்துக்கு 823 டாலர் கொடுக்கிறார்களாம். இன்னும் சில மாகாணங்களில், சார்ந்து இருப்பவர்களையும் (Dependent) கணக்கில் எடுத்துக் கொண்டு கூடுதலாக பணம் கொடுக்கிறார்களாம். சில மாகாணங்கள் கொடுப்பதில்லையாம்.
அதிபர் தேர்தல்
இந்த நவம்பர் 2020-ல் அதிபர் தேர்தலை சந்திக்க இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த நேரத்தில், ஒரு பக்கம் அமெரிக்க மக்களின் உயிரை எடுக்கும் கொரோனாவை நேரடியாக எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. மறு பக்கம் கொரோனா கிளப்பி விட்ட லே ஆஃப் பூதத்தை மேய்க்க வேண்டி இருக்கிறது.
கடுமையான சவால்
லே ஆஃப் செய்யப்பட்டு Unemployment Benefit-க்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இன்னொரு பக்கம் மக்கள் வேலை இழந்ததால், அமெரிக்க பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணும் நுகர்வை சமாளிக்க போராடிக் கொண்டு இருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். உண்மையாகவே ட்ரம்ப் கடுமையான சவால்களைத் தான் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.