சவுதியின் எண்ணெய் ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்டதையடுத்து, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென ஒரே நாளில் 15% ஏற்றம் கண்டது.
அதிலும் இந்த தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் சவுதி, தான் இந்திய சுத்திகரிப்பாளர்களிடம் கவலைபடாதீர்கள் எண்ணெய் சப்ளை செய்வோம் என்று கூறியிருந்தாலும், எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது, இந்திய சுத்திகரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது.
சவுதி அராம்கோ மீது தாக்குதல்
சவுதி அராம்கோவின், புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் என்ற மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், இது தவிர குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் எண்ணெய் வயலையும் குறி வைத்து கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில், 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த எண்ணெய் வயலில் நாள் ஒன்றுக்கு 1.45 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யகூடிய திறன் உடையது. இதே அப்காய்க்கில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில் தினசரி 7 மில்லியன் பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய முடியும் என்றும் முன்னதாக யு.எஸ் எனர்ஜி இன்ஃபர்மேஷன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி பாதிப்பு
இந்த மோசமான தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பால் கச்சா எண்ணெய் உற்பத்தியானது பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது என்றும், எனினும் விரைவில் இந்த உற்பத்தியானது சரி செய்யப்படும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதிலும் கடந்த ஆகஸ்ட் மாத அறிக்கையின் படி இந்த ஆலையில் நாள் ஒன்று 9.8 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தினசரி 5.7 மில்லியன் பேரல்களாக உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இழப்பு பெரியது
இந்த தாக்குதலினால் ஏற்பட்ட இழப்பானது 1979ல் ஏற்பட்ட ஈரானிய புரட்சியின் போதும், 1990ல் குவைத் மீது ஏற்பட்ட தாக்குதலின் போதும், 1973ல் அரபு எண்ணெய் தடைகளின் போதும் ஏற்பட்ட இழப்பை விட, தற்போது மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த திங்கட்கிழமையன்று வர்த்தகத்தில் ஒரே நாளில் 11 டாலர் வரை அதிகரித்தது. இது கடந்த 1988லிருந்தது போல, அதாவது 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு எப்பொழுது குறையும்
உலக அளவில் 10 சதவிகிதம் எண்ணெய் வழங்கும் தகுதியுடைய உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை சரி செய்வதற்கு இன்னும் 5 நாட்கள் ஆகும் என்றும், இதனால் உற்பத்தி சீரடைய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்றும் இந்த அறிக்கையில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. இது வரை டாலரில் 70க்கு கீழ் வர்த்தகமாகும் கச்சா எண்ணெய் விலை, இதனால் 70 டாலருக்கும் மேல் சென்றாலும் சொல்வதற்கில்லை என்றும் கூறப்படுகிறது... ஆக இந்தியாவை பொறுத்த வரை பெட்ரோல் டீசல் விலையில் கண்டிப்பாக இதன் எதிரொலி காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.