ஹாங்காங்: அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அலிபாபா குழுமத்தின் ஜாக் மா, தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வந்த ஜாக் மாவுக்கு, தற்போது இது மேற்கொண்டு பிரச்சனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஜாக் மா டிரம்பை சந்தித்ததாக கூறப்படும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்க் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.
சீனா தொழிலதிபர் ஜாக் மா?
சீனாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான அலிபாபா குழுமத்தின் தலைவர், ஜாக் மா, சீனாவின் ஈ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முன்னணி நிறுவனமாக இருந்தது. இதற்கிடையில் மிகப்பெரிய அளவில் கடந்த ஆண்டு 37 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கினையும் வெளியிட திட்டமிட்டு இருந்தது.
ஐபிஓ தடை
ஆனால் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், சீனா அரசு அலிபாபா குழுமத்தின் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் சீன முதலீட்டாளர்களின் உற்சாகத்தினை கட்டுப்படுத்தியது. அதிலும் ஜாக் மாவின் பேச்சினை கேட்டு அதிருப்தி அடைந்த சீன அரசு, அலிபாபாவின் ஆன்ட் குழுமத்தின் ஐபிஓவை சீன அரசு சமீபத்தில் தடை செய்தது. இதனால் இந்த நிறுவனம் பல நெருக்கடிகளை கண்டது. ஒரு காலத்தில் சீனாவின் செல்லப்பிள்ளை, வெற்றி குழந்தையாக இருந்தவர், தற்போது வில்லனாக பார்க்கப்படுகிறார்.
மோனோபாலி கொள்கை
சீனா அரசாங்கத்திடம் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஜாக் மாவின் அஸ்தஸ்தில் இழப்பு ஏற்பட தொடங்கியது. மிகப்பெரிய அளவில் பொது பங்கு வெளியீட்டை செய்ய திட்டமிட்ட இந்த நிறுவனத்தின் மீது, அலிபாபா மோனோபாலி கொள்கை விதிமுறைகளுக்கு எதிரானது என சம்மன் அனுப்பப்பட்டது. மோனோபாலி என்பது அந்த சந்தையில், அந்த நிறுவனத்தினை தவிர வேறு யாரும் போட்டியிட முடியாத சூழலை உருவாக்கும் என்பதாலே, இப்படி ஒரு தக்க நடவடிக்கையை சீன அரசு எடுத்திருக்கலாம் என கூறப்பட்டது.
சிக்கலான விதிமுறை
அதாவது நீங்கள் உங்கள் பொருளை அலிபாபா நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்றால், வேறு எந்த நிறுவனத்திற்கும் விற்க முடியாது. அப்படியே நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவேண்டுமேனில் அலிபாபாவிடம் விற்க முடியாது. இது தான் அந்த நிறுவனத்தின் சிக்கலான விதிமுறை.
மற்ற நிறுவனங்கள் பாதிக்கும்
சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அது அலிபாபாவின் கொள்கையை ஏற்றுக் கொண்டால், அலிபாபா வேகமாக வளர்ச்சி காணும். ஆனால் மற்ற நிறுவனங்கள் இதனால் வீழ்ச்சி காணலாம் என்பதும் சீன அரசின் கவலை. எனினும் அந்த சமயத்தில் அரசியல் ரீதியான ஒரு காரணமும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
சீனா அரசினை விமர்சனம்
ஏனெனில் கடந்த அக்டோபரில் ஜாக் மா, சீன வங்கியாளர்கள் இருந்த சபையில் அரசாங்கத்தின் மீதான விமர்சனத்தையும் செய்தார். அதோடு நிதித்துறையில் புதுமைகளை புகுத்தவும், வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சரியான நிர்வாக அமைப்பு இல்லை என விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாயமான ஜாக் மா
இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் மாயமானார். அடுத்த சில மாதங்களில் அலிபாபா குழுமம் பெரும் சிக்கலை சந்தித்த நிலையில் தான், அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பானது பெரும் சரிவினைக் கண்டது. இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த ஜாக் மா வெளியில் அதிகம் காணப்படாத நிலையில், சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிற் பயணம் மேற்கொண்டதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இப்படி பல விஷயங்களுக்கும் மத்தியில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.