சீனாவுக்கு சாதகமாக அமையுமா? முதல் கட்ட ஒப்பந்தம் பற்றி ஆகஸ்ட் 15ல் இருநாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்யப்படவுள்ள நிலையில், இனி என்னவாகுமோ? ஏனெனில் அடுத்தடுத்த பிரச்சனைகள் முளைத்துக் கொண்டே வருகின்றதே. இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
இப்படி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் மற்றும் சீனா மூத்த அதிகாரிகள் முதல் கட்ட ஒப்பந்தத்தினை பற்றி ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வானது ஆகஸ்ட் 15 அன்று வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் நடக்கும் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா சீனா இடையே பேச்சு வார்த்தை
அமெரிக்கா சீனா இடையே புகைந்து கொண்டு இருக்கும் பிரச்சனைக்கு மத்தியில், இந்த கூட்டமானது மேற்கொண்டு இந்த உறவில் சமாதான போக்கினை ஏற்படுத்துமா? அல்லது விரிசலை அதிகப்படுத்துமா? என்று எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. ஆக உலகின் மிகப்பெரிய முதல் இரண்டு பொருளாதார நாடுகளிடையேயான இந்த பேச்சு வார்த்தையானது, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சீன கொள்முதல் அதிகரித்து வருகிறது
இதற்கிடையில் வர்த்தக ஒப்பந்தமானது நன்றாகத் தான் போய்க் கொண்டு இருக்கிறது. ஏனெனில் சீனா அமெரிக்கா பொருட்களின் கொள்முதலை கணிசமாக அதிகரித்து வருவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆலோசனை குழுவில் உள்ள உயர் மட்ட பொருளாதார ஆலோசகரான லாரி குட்லோ கூறியுள்ளார்.
இலக்கினை விட குறைவு தான்
அமெரிக்கா சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றங்களானது நாளுக்கு நாள் அதித்து வரும் நிலையில், ஒப்பந்தம் பாதிக்கப்படலாம் என்றெல்லாம் கூறப்பட்டது. சொல்லப்போனால் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தான இந்த முதல் கட்ட ஒப்பந்தமானது, விவசாயம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், எரிசக்தி மற்றும் சேவைகள் உள்ளிட்ட பலவற்றை 2017ஐ விட, அமெரிக்க பொருட்கள் கொள்முதலை 200 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க சீனா உறுதியளித்தது.
கொரோனா தான் காரணம்
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் படி சீனா, உலகளாவிய அளவில் பரவி வரும் கொரோனா வைரஸினால், அதன் முதல் ஆண்டு இலக்கை எட்டவில்லை என்றே கூறப்படுகிறது. சொல்லப்போனால் விவசாய பொருட்களின் இறக்குமதியானது, 2017ம் ஆண்டினை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ஒப்பந்தத்தின் படி அடைய வேண்டிய இலக்கிற்கு 50% பின் தங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் எச்சரிக்கை
கொரோனா வைரஸினை தோற்றுவித்தது சீனா தான். எனவே வர்த்தக ஒப்பந்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்பு ஏற்கனவே அச்சுறுத்தியிருந்தார். அதோடு ஹாங்காங்கில் அதிகரித்து வரும் சீனாவின் ஒடுக்குமுறை தொடர்பான பிரச்சனையும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் சீனாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கினை வாங்குவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஒப்பந்தம் நன்றாகத் தான் போய் கொண்டுள்ளது
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிரம்பின் பொருளாதார ஆலோசகர் குட்லோ, ஒப்பந்தம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருக்கிறது. வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் வர்த்தக பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பதையும் நிராகரித்து சீனாவின் வயிற்றில் பாலை வார்த்தார் எனலாம்.
பலமான ஆயுதமாக மாறலாம்
டிரம்ப் நிர்வாகமானது கடந்த சில வாரங்களாகவே சீனாவுக்கு எதிரான பிரச்சனைகளை முடுக்கி விட்டுள்ளது எனலாம். இதனால் இந்த முதல் கட்ட ஒப்பந்தமும் சீனாவினை தாக்க பலமான ஆயுதமாக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் உண்மையல்ல என்று பச்சை சிக்னலை கொடுக்கும் விதமாக இந்த அறிக்கையானது வந்துள்ளது.
இது ஒரு நல்ல அறிகுறி
ஆக இந்த அறிக்கையானது வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இணைந்து செயல்படுவதற்கான ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் இது நம்பிக்கையையும் கொடுக்கிறது எனலாம். நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் வரையில் சீனா ஒப்பந்த இலக்கில் 23% அடைந்துள்ள நிலையில், 170 பில்லியன் டாலருக்கும் அதிகமான அமெரிக்க பொருட்களை வாங்கியுள்ளது.