வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மறுபுறம் பொருளாதாரம் குறித்த கவலைகளும் மேலோங்கி வருகிறது எனலாம்.
இது குறித்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கெவின் ஹசட், கொரோனாவால் அமெரிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் மட்டும் இதுவரையில் 13,85,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொடிய கொரோனா என்னும் அரக்கனால் 81,795 பேர் பலியாகியுள்ளனர்.
பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது
அமெரிக்கா பொருளாதாரத்தினை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரும் நிலையில், அமெரிக்கா பொருளாதாரம் ஜூலை மாதம் எழுச்சி பெரும் என்றும் அந்த நாட்டின் நிதியமைச்சர் கூறியுள்ளார். மேலும் தற்போது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையிலும் கூட, பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்ப்பு
இது ஒரு புறம் இப்படி எனில் மறுபுறம், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த திங்கட்கிழமையன்று அமெரிக்கா சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்தான முதல் ஒப்பந்ததினை மறுபரிசீலனை செய்வதை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இதற்கிடையில் சீனா இறக்குமதியாளர்கள் திங்களன்று 2,40,000 டன் அமெரிக்க சோயாபீன்களை வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
மேலும் இதுமட்டும் அல்ல, இன்னும் கூடுதலாக விற்பனை செய்யப்படலாம் என்றும் இதனை அறிந்த வர்த்தகர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் மறுபுறம் அமெரிக்கா அறிவுசார் சொத்து பாதுகாப்பு தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தின் பிற பகுதிகளையும் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் கட்ட ஒப்பந்தம் விவரம் என்ன?
ஜனவரி மாதம் கையெழுத்திட்ட முதல் கட்ட ஒப்பந்தத்தின் கீழ் பெய்ஜிங் இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கா பொருட்களை வாங்குவதாக உறுதியளித்தது. அதே நேரம் சீனப் பொருட்கள் மீது விதித்த கட்டணங்களை திரும்ப பெறுவதாக வாஷிங்டன் ஒப்புக் கொண்டது.
ஒப்பந்தம் வேண்டாம்
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் மற்றும் மில்லியன் கணக்கான வேலை இழப்புகளுக்கு காரணம் சீனா என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் டிரம்ப். மேலும் வர்த்தகத்தினை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி "very torn" என்றும் கூறியிருந்தார். இந்த இரு நாடுகளின் உயர் வர்த்தக அதிகாரிகள் ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோக்கி செல்வதாக உறுதியளித்த சில மணி நேரங்களிலேயே இந்த கருத்துகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
என்னிடம் ஆதாரம் உள்ளது?
அதிகரித்து வரும் இந்த பதற்றங்களால் அமெரிக்கா சீனா வர்த்தக 2 வது கட்ட ஒப்பந்தம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலை சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். தன்னிடம் சீனா தான் பரப்பியது என்பதற்காக ஆதாரம் உள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல்களை ஹேக்கர்கள் மூலம் திருட முயற்சி
மேலும் சீனா அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து கருத்துகளை ஹேக்கர் மூலம் திருட முயற்சிக்கிறார்கள் என்று புதியதாக தற்போது, ஒரு குற்றச்சாட்டினை கூறியுள்ளது. இது இன்னும் எந்த அளவுக்கு சீனா அமெரிக்கா இடையே பதற்றத்தினை அதிகரிக்கும் என்று தெரியவில்லை. எனினும் நிச்சயம் சீனாவுக்கு மேற்கொண்டு பிரச்சனைகள் மட்டும் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.