கொரோனா வைரஸ் படு பயங்கரமாக பாதித்துக் கொண்டு இருக்கும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது அமெர்க்கா.
சுமார் 8.18 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 45,300 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
இதற்கு மத்தியிலும் சீனாவை வெளிப்படையாக மிரட்டிக் கொண்டு இருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
என்ன பிரச்சனை
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றி படித்து இருப்பீர்கள். கடந்த 2018-ம் ஆண்டு சீன பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது அமெரிக்கா. அதற்கு சீனாவும் தன் தரப்பில் அமெரிக்க பொருட்கள் மீது பில்லியன் டாலர் கணக்கில் வரி விதித்தது.
சமாதானம்
இந்த போரைத் தான் வர்த்தகப் போர் என்கிறோம். உலகின் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் இப்படி குழாய் அடிச் சண்டை போல அடித்துக் கொண்டதால் உலக பங்குச் சந்தைகள் சரியத் தொடங்கின. ஒட்டு மொத்த உலக ஏற்றுமதி இறக்குமதி கூட பாதிப்புக்கு உள்ளானது. இதை தீர்த்துக் கொள்ள, இரு தரப்பும் சேர்ந்து ஒரு டிரேட் டீல் கொண்டு வந்தார்கள்.
டீல்
கடந்த ஜனவரி மாதத்தில் தான் சீனா மற்றும் அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவின் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது டீலின் மிக முக்கிய அம்சம்.
தளர்வு
ஆனால், இயற்கை பேரிடர்கள் அல்லது எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்தால், சீனா, புதிய வர்த்தக ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கலாம் எனவும் டிரேட் டீலில் சொல்லி இருப்பதாக US - China Economic and Security Review Commission ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறதாம்.
ட்ரம்ப் எச்சரிக்கை
இப்படி சீனா, டிரேட் டீலில் சொல்லப்பட்டு இருக்கும் விதியை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளவில்லை என்றால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்துவிடுவேன். மேற்கொண்டு என்னால், என்ன எல்லாம் எய்ய முடியுமோ அவைகளை எல்லாம் செய்வேன் என வெளிப்படையாக மிரட்டல் விடுத்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
கேள்விக்கு பதில்
பத்திரிகையாளர் சந்திப்பில் "சீனர்கள் டிரேட் டீலில் சொல்லப்பட்டு இருக்கும் தளர்வு விதியை பயன்படுத்தமாட்டார்கள் என எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?" என கேள்வி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு "என்னைப் போல யாருமே சீனா மீது இத்தனை கடுமையாக இருந்ததில்லை"என பதில் கொடுத்தார் ட்ரம்ப்.
கடுமையான பதில்
மேலும் "நான் பதவிக்கு வந்த காலம் வரை, சீனா பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது" என மிகக் கடுமையான தொனியிலேயே பதில் கொடுத்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இன்னும் கொரோனா பஞ்சாயத்தே முடிந்த பாடில்லை அதற்குள், இவர் வர்த்தக போருக்கு போய்விட்டாரே..!
உலக சந்தைகள்
கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து, கொரோனா வைரஸால், உலக பங்குச் சந்தைகள் எல்லாம் படு பயங்கரமாக சரிவைக் கண்டன. இப்போது தான் கொஞ்சம் நிலைமை தேறி ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றன. அதற்குள் மீண்டும் வர்த்தகப் போரைக் கிளப்பினால் உலக சந்தைகள் எல்லாம் செம அடி வாங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் உஷாராக இருக்கவும்.