வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், மனிதர்களை பெரும் அளவில் பலி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பலவும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளன.
வேலை இழப்பு
அதிலும் கொரோனாவின் உக்கிரத்துக்கு அதிகளவு பலியானதும், தாக்கத்திற்கு உள்ளானதும் அமெரிக்காவே. இதற்கிடையே அமெரிக்காவில் தொடர்ந்து லாக்டவுன் நீடித்து வரும் நிலையில், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இது கடுமையான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதோடு, பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழக்கவும் வழி வகுத்துள்ளது.
வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள்
மேலும் நீடிக்கும் லாக்டவுனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் முடிந்த பிறகு, இதனை சரிசெய்து வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது ஒவ்வொரு நாட்டுக்கும் மிகப்பெரிய சவாலான விஷயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
இதனையடுத்து கொடிய கொரோனா என்னும் அரக்கனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தற்போதே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கண்ணுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து பாதுகாப்பு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், நம் கிரேட் அமெரிக்க மக்களின் வேலையை பாதுகாக்கும் விதமாகவும், குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உத்தரவில் கையெழுத்திட உள்ளதாகவும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பாதிப்பு
அமெரிக்காவில் 7,92,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42,514 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக கொரோனா தாக்கத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், பணி நீக்கமும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 22 மில்லியன் அமெரிக்கர்கள் வேலையின்மை நலனுக்காக விண்ணபித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு பாதிப்பு தான்
இந்த நிலையில் H1B விசாக்களினால் அதிகம் பயன் பெறும் இந்தியர்களுக்கு இது பாதிப்பு என்றாலும், இதனால் ஒரு நல்ல விஷயம் என்றால், இது தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய அளவில் இந்தியா ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.