வாஷிங்டன் : கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையுடனான சந்திப்பையும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் கூற்றையும் தொடர்பு படுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டிவிட்டர் பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், நாங்கள் கூகுளை தொடர்ந்து கண்கானித்து வருகிறோம். அதோடு தன்னை கூகுள் கண்கானித்து வருவதாகம், தன்னை 2020 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்க சதி நடப்பதாகவும் சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.
அதிலும் தன்னை தோற்கடிக்க கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விரும்புவதாக டிவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
ஏன் இந்த விபரீதம்?
கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதற்கு பின்னால் சமூக ஊடகங்கள், இணையதளங்களில் பரப்பப்பட்ட போலிச் செய்தி மற்றும் ரஷ்யா உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் 2020ல் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்பதை உறுதிசெய்வதற்கு கூகுளின் உயரதிகாரிகள் முயற்சித்து வருவதாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கூறியுள்ளது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சிக்கு பேட்டி!
அமெரிக்காவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான கெவின் செர்னிகீ (Kevin Cernekee), கூகுள் நிறுவனத்தின் உயரதிகாரிகள் அவர்களுடைய மொத்த அதிகாரம் மற்றும் பலத்தை கொண்டு, மக்கள் பார்க்கும் தகவல்களை கட்டுப்படுத்தி, அடுத்தாண்டு தேர்தலில் டிரம்ப் தோற்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
சுந்தர் பிச்சை டிரம்பிடம் விளக்கம்!
இந்த நிலையில், ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் சீனாவுடனான உறவு குறித்து கூகுள் மீது குற்றச்சாட்டு வைத்து வரும் டிரம்ப், இந்த முறை சுந்தர் பிச்சையுடனான சந்திப்பையும், இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தியுள்ளார். "கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்னை வெள்ளைமாளிகையில் சந்தித்தபோது, அவர் என்னை எவ்வளவு விரும்புகிறார், என்னுடைய நிர்வாகம் எப்படி அருமையாக செயல்படுகிறது என்பதை விவரிப்பதற்கு மிகவும் முயற்சி செய்தார்.
சட்டவிரோதமான எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை
சீனாவுடனும் எந்த தொடர்பும் இல்லை என்றும், 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் சட்டவிரோதமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடும் திட்டம் எங்களுக்கு இல்லை என்றும் சுந்தர் பிச்சை விளக்கினார் என்று, டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கவனிக்கிறோம்
எனினும் டிரம்ப் அடுத்தடுத்து வெளிடுள்ள பதிவில், கூகுளின் முன்னாள் ஊழியர் கெவினின் பேட்டியை பார்க்கும் வரை நான் எல்லாவற்றையும் நம்பினேன், ஆனால் கெவினின் குற்றச்சாட்டை குறிப்பிட்டதுடன், தற்போது நாங்கள் கூகுளை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.
நம்புங்க எல்லாம் பொய்
இது குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், நாங்க சட்ட விரோதமாக, யாருக்கும் ஆதரவாக எதையும் செய்யவில்லை. முன்னாள் ஊழியர் கூறிய அனைத்து தகவல்களும் பொய்யானவை. இவை அனைத்தும் பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில், ஆதாரமற்று கூறப்படும் பொய்கள். எங்கள் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளதால் தான் கெவின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது அவரின் முதல் குற்றச்சாட்டு அல்ல, கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது ஹிலாரி மீதான எதிர்மறையான கருத்துகளை, கூகுள் நிறுவனம் மறைத்ததாக கூறியுள்ளார்.