துபாய் : அமெரிக்கா சீனா பிரச்சனையால் உலகின் பொருளாதார நிலை மந்த நிலையை நோக்கி செல்கின்றது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஓயத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீப்பிடித்து எரிவது அந்த நாட்டில் மட்டும் அல்ல, அதை சுற்றியுள்ள உலக நாடுகளிலும் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் அந்த நாட்டு அரசு, சவுதி அராம்கோ என்ற அரசு மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறது, இந்த நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும், எண்ணெய் வயல்களையும் நடத்தி வருகிறது. இது தவிர உலக நாடுகளின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையரும் கூட. இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் தாக்குதல் நடந்திருப்பது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் ஆலை தாக்குதல்
சவுதி அராம்கோ நிறுவனம், சவுதியின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் என்ற மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையே உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும், குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறி வைத்து கடந்த சனிக்கிழமையன்று அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
அதிகாலையில் தாக்குதல்
ஆளில்லா விமான தாக்குதலால் சவுதி அராம்கோவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் கொழுந்துவிட்டு தீப்பிடித்து எரிந்தன. இதனால் பெருத்த சேதம் அடைந்ததாகவும், இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் பெருத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 4 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இதைத் தொடர்ந்து, அராம்கோவின் தொழில்துறை பாதுகாப்பு குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் ஈடுபட்டன என்றும் கூறியுள்ளது.
தொடர்ந்து விசாரணை
இந்த அதிரடியான தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த நாட்டு அரசு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்தும் எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகளோ, வேறு என்னென்ன பாதிப்புகள் என்பது குறித்தான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த தாக்குதலால் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம்
இந்த தாக்குதலை ஏமன் நாட்டைச்சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இது தொடர்பாக அந்த கிளர்ச்சியாளர்களின் அல் மசிராஹ் டெலிவிஷனில் வெளியிட்ட செய்தியில், அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் ஆகியவற்றில் கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் பிரச்சனை
ஏமனில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடந்த 2015-ம் ஆண்டு முதலே பிரச்சனை நிலவி வருவதாகவும், இந்த நிலையில் தான் சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரே இப்பிரசனையால் பல்லாயிரகனக்காக மக்கள் உயிரிழந்ததோடு, அந்த சமயத்தில் எண்ணெய் உற்பத்தியும் பெரிதும் பதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தி பாதிப்பு
ஏற்கனவே சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த அதிரடியான தாக்குதலால் மேலும் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிட்டதட்ட பாதி உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் மற்ற நிறுவனங்களிலும் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை?
ஒரு புறம் இந்த எண்ணெய் கிணறுகள் தாக்குதலால் உற்பத்தி வெகுவாக பாதிகப்பட்டுள்ளது என்ற நிலையில், எண்ணெய்க்காக சவுதியை நம்பியுள்ள நாடுகள் பதற்றத்தில் உள்ளன. ஏனெனில் இறக்குமதி குறையும் போது விலை அதிகரிக்கும் என்றும், மேலும் இந்த தாக்குதலால் சர்வதேச அளவிலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் தான் அமெரிக்காவின் பேச்சை கேட்டு, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்து, சவுதியிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் எதிரொலி இந்தியாவிலும் காணப்படலாம் என்றும் கருதப்படுகிறது.