சண்டிகர்: அதிர்ஷ்ட தேவதை எல்லாரையும் தேடி வருவதில்லை. தேடி வரும் போது அந்த தேவதையை உதாசீனப்படுத்தாமல் அரவனைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா என்கிற மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எலெக்ட்ரீஷியனுக்கு சண்டிகரில் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 2.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்து இருக்கிறது.
யார் இவர்..? இவர் பின் புலம் என்ன..? எலெக்ட்ரீஷியன் என்கிறார்கள், பெயிண்டர் என்கிறார்கள் , பெயிண்டர் என்றால் கலை இலக்கியம் எல்லாம் தெரிந்த பெரிய பெயிண்டரா..? வாருங்கள் பார்ப்போம்.
எலெக்ட்ரீஷியன் பெயிண்டர்
இவர் பெயர் சஞ்ஜீவ் குமார், இவருக்கு மனைவி, ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள். ஒரு நல்ல தகப்பனுக்கு இருக்கும் வாழ்க்கைப் பிரச்னைகள் எல்லாமே இவருக்கும் உண்டு. வழக்கம் போல பணக் கஷ்டம், நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை பார்த்தாலும் கிடைக்கும் சொற்பக் கூலி.
வசிப்பிடம்
இவர் ஹிமாச்சலப் பிரதேசத்தில். உனா என்கிற மாவட்டத்தில், சுரூரு (Chururu) என்கிற கிராமத்தில் வசித்து வருகிறார். அக்மார்க் ஏழை வீடு தான். பிழைப்புக்காக பெயிண்டிங், பிளம்பிங் மற்றும் எலெக்ட்ரிக்கல் வேலைகளைச் செய்து வருகிறார். கைக்கு கிடைப்பது, வாய்க்கே சரியாகி விடும் நிலை தான்.
லாட்டரி
இவர் சில வாரங்களுக்கு முன், தன் மகனின் உடல் நலம் சார்ந்த பிரச்னைக்காக சண்டிகரில் PGIMER மருத்துவமனையில் இருந்து வரும் போது, நங்கள் (Nangal) பேருந்து நிலையத்தில் இருந்து, பஞ்சாப் மாநிலத்தின் மா லட்சுமி தீபாவளி பூஜை லாட்டரி டிக்கெட்டுகளை, 1,000 ரூபாய் கொடுத்து இரண்டை வாங்கி இருக்கிறார்.
அதில் ஒன்று
நம் எலெக்ட்ரீஷியன் சஞ்ஜீவ் குமார் வாங்கிய இரண்டு லாட்டரியில், ஒரு லாட்டரிக்கு தான் 2.5 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்து இருக்கிறது. இந்த பரிசை வைத்து, தன் நிதி சார்ந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அடுத்து இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்..?
படிப்பு
நம் சஞ்ஜீவ் குமாரிடம், இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது "என் குழந்தைகளின் படிப்புக்கு இந்த பணத்தை செலவழிக்கப் போகிறேன்" என உள்ளத்தைத் தொட்டு இருக்கிறார். நம் நாட்டின் சாதாரண பாமரனுக்கு கூட கல்வியின் முக்கியத்துவம் தெரிந்து இருப்பது, நம் இந்தியா செய்த புண்ணியம்.
அரசு நடவடிக்கை
பஞ்சாப் மாநில அரசின், லாட்டரி துறையிடம், முறையாக, லாட்டரி பரிசை பெறுவதற்கான ஆதாரங்கள் மற்றும் டிக்கெட்டுகளை, நம் சஞ்ஜீவ் குமார் சமர்ப்பித்து இருக்கிறாராம். கூடிய விரைவில் அரசு நடவடிக்கைகளை எல்லாம் முடித்து, பரிசுத் தொகையை, சஞ்ஜீவ் குமாருக்கு கொடுப்போம் என பஞ்சாப் மாநில அரசும் தெரிவித்து இருக்கிறது. வாழ்த்துக்கள் பணக்காரரே.