டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் வரி செலுத்துவதற்காகச் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தன்னிடம் இருக்கும் மொத்த டெஸ்லா பங்கு அளவீட்டில் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளார் எலான் மஸ்க். இதன் மூலம் அவரின் சொத்து மதிப்பில் சரிவு ஏற்படும்.
டிவிட்டர்
எலான் மஸ்க் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு விற்பனை குறித்த மிகப்பெரிய முடிவை டிவிட்டரில் சாமானிய மக்களிடம் செய்யப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் எடுத்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
சரி, எலான் மஸ்க் முதல் முறையாக இப்போது தான் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்கிறாரா..?
எலான் மஸ்க்
எலான் மஸ்க் 2016ல் முதல் முறையாகத் தன்னிடம் இருக்கும் டெஸ்லா பங்குகளில் சுமார் 36 லட்சம் பங்குகளை 4 பில்லியன் டாலருக்கு விற்றார், இதன் பின்பு தான் சம்பளத்திற்குப் பதிலாகப் பெற்ற 22 லட்சம் பங்குகளில் 1 9,34,000 பங்குகளை 1.1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார்.
வெறும் 3 சதவீதம் மட்டுமே
எலான் மஸ்க் இதுவரை விற்ற 45 லட்சம் பங்குகளின் அளவு மொத்த பங்கு இருப்பு அளவில் 3 சதவீதம் மட்டுமே. எலான் மஸ்க்-ன் 281 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் பெரும் பகுதி டெஸ்லா பங்குகள் தான்.
5 பில்லியன் டாலர்
தற்போது எலான் மஸ்க் விற்பனை செய்யும் டெஸ்லா பங்குகள் மூலம் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையைப் பெற உள்ளார். இந்தத் தொகையில் குறிப்பிட்ட பகுதி மட்டுமே வரி செலுத்துவதற்காகச் செலவு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள தொகையை முக்கியமான திட்டத்திற்காக வைத்துள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்
எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து சம்பளமாக 1 டாலர் கூடப் பெறுவது இல்லை, இதற்கு மாறாக வர்த்தக இலக்கை அடையும் போது டெஸ்லா நிர்வாகம் தள்ளுபடி விலையில் டெஸ்லா பங்குகளை வழங்கும்.
ஆகஸ்ட் 2022
எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு பெரிய அளவில் அதிகரிக்க முக்கியக் காரணம் அவர் வைத்திருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் தான். இந்த நிலையில் எலான் மஸ்க்-க்குத் தற்போது 2 கோடிக்கும் அதிகமான பங்குகளை நிறுவனத்திடம் இருந்து தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு ஆகஸ்ட் 2022 உடன் முடிய உள்ளது.
சின்ன மீன், பெரிய மீன்
தற்போது டெஸ்லா பங்குகளின் விற்பனையில் கிடைக்கும் தொகையை வைத்து வரி செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை வைத்து 2 கோடி டெஸ்லா பங்குகளை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதையாகத் தான் உள்ளது.