கொரோனாவுக்கு பிறகு வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. இதனால் பல நாடுகளும் உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளன.
கொரோனாவினால் சரிந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில், உலக நாடுகளின் வளர்ச்சியினை குறைக்கும் விதமாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது உள்ளது.
இதனால் உலகளவில் பல நாடுகளில் பணவீக்கம் என்பது தலை விரித்தாடி வருகின்றது.
பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்
இதனால் இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை காட்ட ஆரம்பித்துள்ளன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகளும் பல்வேறு முக்கிய துறைகளில் குறையத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே டெக் நிறுவனங்கள் பணியமர்த்தலை குறைத்துள்ளன. பல நிறுவனங்கள் தற்காலிகமாக பணியமர்த்தலையே நிறுத்தி வைத்துள்ளன. அது மட்டுமல்ல தங்கள் சொந்த நாட்டு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
சவுதியின் முடிவு
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சவுதி அரேபியா கன்சல்டன்ஸி என்ற துறை சார் ஆலோசகர்கள் பணிகளில் 40% உள்ளுர் மக்களையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த விகிதத்தினை 2023 ஏப்ரல் 6ம் தேதிக்குள் 35% ஆகவும், 2024, மார்ச் 25க்குள் 40% ஆகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியது.
சவுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கலாம்
சவுதியின் இந்த முடிவால் பெரும் பிரச்சனை இல்லை என்றாலும், இது மேற்கொண்டு அனைத்து துறைகளுக்கும் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சவுதி அரேபியாவில் அண்டை நாட்டினருக்கான வேலை வாய்ப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சவுதி அரசின் இந்த முடிவானது உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் என சவுதி அரசு தீர்க்கமாக நம்புகிறது.
எந்தெந்த துறை
சவுதியின் இந்த முடிவால் நிதித்துறை நிபுணர்கள், நிதி ஆலோசகர், வணிக ஆலோசனை தரும் நிபுணர்கள், சைபர் பாதுகாப்பு ஆலோசகர்கள், திட்ட மேலாண்மை பொறியாளர், திட்ட மேலாண்மை மேலாளர், திட்ட மேலாண்மை நிபுணர் என பல துறையிலும் வெளி நாட்டினருக்கு வாய்ப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால அழுத்தம்?
சவுதி அரேபியாவின் இந்த போக்கானது மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இந்த முடிவு உள்ளூர் மக்களுக்கு அரசு வேலைகளில் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த திட்டம் உடனடியாக பலனை தராது என்றும் கூறப்படுகிறது.
எனினும் சவுதி அரசின் வேலையின்மை விகித குறைப்பு இலக்கு 2030-க்குள் 7% ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையானது வந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு பாதிப்பா?
சவுதியின் இந்த முடிவால் இந்திய ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையுமா? என்ற கருத்தும் இருந்து வருகின்றது. ஆனால் சவுதி அரேபியாவின் இந்த முடிவானது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த நடவடிக்கையானது மற்ற துறைகளுக்கும் பரவினால் அதனால் தாக்கம் எதிர்காலத்தில் இருக்கலாம். தேவை என்பது அதிகரிக்கும்போதும், மக்கள் சக்தி என்பதும் அதிகரிக்கலாம்.
தற்போதைக்கு பிரச்சனை இல்லை
ஆக உலகளாவிய மந்த நிலையானது மேம்படும்போது இப்பிரச்சனை குறைய ஆரம்பிக்கும். ஆக அதுவரையில் இது போன்ற போக்குகள் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனினும் சவுதி மக்கள் செய்ய விரும்பாத வேலைகள், செய்ய முடியாத வேலைகளைத் தான் இந்திய ஊழியர்கள் உள்பட பல வெளிநாட்டு ஊழியர்களும் செய்து வருகின்றனர். ஆக தற்போதைக்கு தாக்கம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.