நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால் மிகவும் துரதிஷ்டவசமானவர். ஏனெனில் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையில் நீங்களும் ஒருவர் என கூறி, ஒரே ஜும் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர் தான் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஷால் கார்க். இவரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
இவ்வாறு ஜும் கால் மூலம் பணி நீக்கம் செய்த வீடியோ பதிவு ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையையும் அந்த சமயத்தில் ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் விஷால் கார்க்கினை விமர்ச்சித்தனர்.
அநாகரிகமான பணி நீக்கத்திற்காக பெயர் பெற்றவர் தான் விஷால் கார்க். ஏனெனில் முன்னதாக இவர் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மெயில் இதே போன்ற சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரே காலில் 900 பேர் பணி நீக்கம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க், சந்தையின் செயல் திறன், ஊழியர்களின் செயல் திறன், உற்பத்தி திறன் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம், ஒரே ஜும் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தார். இது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பணி நீக்கத்துக்கு விருப்பமில்லை
பணி நீக்க அறிவிப்பினை கொடுத்த விஷால், இது என் கேரியரில் செய்யும் இரண்டாவது பணி நீக்கமாகும். இதனை நான் மீண்டும் செய்ய விரும்பவில்லை. இனி இதுபோன்று செய்யக் கூடாது. இது தான் கடைசி முறை. கடந்த முறை இதுபோன்று செய்யும்போது நான் அழுதேன். ஆனால் இந்த முறை நான் வலிமையாக உள்ளேன்.
மெயில் சர்ச்சை
இதே போன்று முன்னதாக ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மெயிலில், நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டால்பின்கள் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்குகிறீர்கள். உங்களது பணியினை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். இது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
மன்னித்து விடுங்கள்
விஷால் கார்க்கின் இந்த பணி நீக்க நடவடிக்கை குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்த நிலையில் தான் பணி நீக்கம் குறித்து கையாண்ட விதத்திற்காக மன்னிப்பும் கேட்டார் விஷால் கார்க். மேலும் பணி நீக்கம் செய்ததில் நான் தவறு செய்து விட்டேன். பாதிக்கப்பட்ட ஊழியர்களின் பங்களிப்பிற்காக தகுந்த மரியாதை அளிக்க தவறி விட்டேன். ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்க தவறிவிட்டேன். அவ்வாறு செய்ததன் காரணமாக நான் உங்களை கஷ்டப்படுத்தி விட்டேன். இதன் மூலம் நான் உங்களை மேலும் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்ற உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இவர் CEO ஆக இருக்க முடியுமா?
மேற்கொண்ட செய்திகள் வெளியான பிறகும், இவர் CEO ஆக இருக்க முடியுமா? இவருக்கு இரண்டாவது வாய்ப்பினை அனுமதிப்பது நியாயமா? இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ட்விட்டரில் சுட்டிக் காட்டி மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியிருந்தார்.
பரபரப்புக்கு பிறகு ஓய்வு
இவ்வாறு பற்பல சர்ச்சைகளுக்கு மத்தியில், ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு விஷால் கார்க் உடனடியாக ஓய்வில் சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் பணிக்கு திரும்பினார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விஷால் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்று கூறபட்ட நிலையில், அவரின் வருகையை ஊழியர்கள் பெரும்பாலும் விரும்பவில்லை. விஷால் கார்க் திரும்ப வந்தால், பல ஊழியர்கள் அலுவலகத்தினை விட்டு வெளியேறவும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வெளியேற்றம்
இதற்கிடையில் தான் ஊழியர்கள் பலரும் விஷால் கார்கின் வருகைக்கு பிறகு ராஜினாமா செய்து வருகின்றனராம்.விஷால் கார்க்கின் நடவடிக்கையானது ஊழியர்களின் மத்தியில் பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விஷாலின் வருகைக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது,எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், நிறுவனத்தின் எந்த கூட்டத்திலும் போன்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஊழியர்கள் யாரையும் நம்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.