ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது நாளுக்கு நாள் உச்சம் எட்டி வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பல நாடுகளும் ரஷ்யாவுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன.
அதனை பிரதிபலிக்கும் விதமாக பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல தடைகளை விதித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்யா ஏற்கனவே சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் ரஷ்யா மீது புதிய சுற்று தடைகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியம் மீது அழுத்தம்
ரஷ்யாவின் மிக முக்கிய வணிகமே எரிபொருள் உற்பத்தி தான். ஆக இதில் அண்டை நாடுகள் பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே சில நாடுகள் ரஷ்ய எரிபொருள்களை தடை செய்துள்ளன. எனினும் ஐரோப்பிய ஒன்றியமே எரிபொருளுக்காக அதிகம் ரஷ்யாவினையே சார்ந்துள்ளன. ஆக மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடை செய்தாலும், ரஷ்யாவினை அது பெரிதாக பாதிக்கவில்லை. இதனால் ஐரோப்பிய ஒன்றியமும் எரிபொருள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தம் இருந்து வருகின்றது.
எரிபொருளுக்கு தடையா?
மேலும் எரிபொருள் தடை செய்ய திட்டமிட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே சில நாடுகள் அதில் ஆர்வம் காட்டவில்லை என்லாம். குறிப்பாக ஹங்கேரியும், ஸ்லோவாக்கியாவும் தடைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகின்றது. ஏனெனில் தாங்கள் எரிபொருளுக்காக ரஷ்யாவினை அதிகம் சார்ந்துள்ளதாகவும், மாற்று வழி இல்லை என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
6வது சுற்று தடையா?
எனினும் இந்த ஆண்டில் ரஷ்ய எண்ணெய்-க்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் ஹங்கேரி உள்பட சில நாடுகள் 3 - 5 ஆண்டுகள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றது. இந்த தடை விதிக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த திட்டமானது ரஷ்யா மீதான ஆறாவது சுற்று தடையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலையானது கிட்டத்தட்ட 1 சதவீதம் அதிகரித்து 108.88 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதெ பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது , 1.15% அதிகரித்து, 111.41 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
40% மேலாக ஏற்றம்
உக்ரைன் ரஷ்யா பிரச்சனை தொடங்கியதில் இருந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலையானது 40% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த விலையேற்றத்தின் மத்தியில் பல சர்வதேச நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ரஷ்யாவின் நிலக்கரி இறக்குமதி தடைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இது தவிர ஸ்விப்ட் உள்ளிட்ட சில தடைகளையும் அறிவித்துள்ளன.
எண்ணெய் விலையில் தாக்கம்
சர்வதேச அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகும். குறிப்பாக கடந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதியில் 27% ஆக இருந்தது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.இது எண்ணெய் விலையில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
உலக நாடுகளுக்கு பிரச்சனை தான்
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்தால் அது நிச்சயம் ரஷ்யாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆனால் அதனை விட எண்ணெய் விலை அதிகரிப்பானது ஐரோப்பிய ஒன்றியத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும். சொல்லப்போனால் ஏற்கனவே விலை அதிகரிப்பால் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது தடையானது விதிக்கப்பட்டால், அது மேலும் உலக நாடுகளுக்கே பிரச்சனையாக அமையும்.