உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், டிரம்ப்-ன் வெறுப்பு பதிவை நீக்காத காரணத்திற்காக மக்களிடம் இருந்தும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்தும் அதிகளவிலான எதிர்ப்புகள் நிலவியது.
இதன் எதிரொலியாகப் பல முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்யமாட்டோம் என வெளிப்படையாகவே அறிவித்தனர். இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த 3வது காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் கணிப்புகளை விடவும் அதிகமாக வருமானத்தைப் பெற்று முதலீட்டாளர்களுக்கும், சக போட்டி நிறுவனங்களும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
22 சதவீத வளர்ச்சி
இந்தச் செப்டம்பர் காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 22 சதவீதம் வளர்ச்சி அடைந்து 21.5 பில்லியன் டாலரை பெற்றுள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிரொக இருந்த சூழ்நிலையை வைத்து சந்தை கணிப்புகள் 19.8 பில்லியன் டாலர் மட்டுமே வருவாயாகப் பெறும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் பேஸ்புக் கணிப்புகளை உடைத்து அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
வாடிக்கையாளர்கள்
இதேபோல் செப்டம்பர் காலாண்டில் பேஸ்புக்-ன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.74 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் இதேகாலகட்டத்தில் பேஸ்புக்-ன் ஆஸ்தான தளமான அமெரிக்கா மற்றும் கனடாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை இக்காலாண்டில் அதிகளவில் குறைந்துள்ளது.
முக்கிய வருவாய் தளம்
பேஸ்புக்கிற்கு உலகிலேயே அமெரிக்கா மற்றும் கனடா சந்தையில் தான் அதிகளவிலான விளம்பரம் வருவாய் பெறும் தளமாக உள்ளது. எனவே இச்சந்தையில் ஏற்பட்டுள்ள வாடிக்கையாளர் சரிவு விளம்பர வருவாய் பெரும் அளவிலான மாற்றத்தை வரும் காலத்தில் எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகக் கருத்து நிலவுகிறது.
கொரோனா காலம்
கொரோனா லாக்டவுன் காரணத்தால் மக்கள் பேஸ்புக் பயன்பாட்டு அளவு அதிகரித்துள்ளது, இதே காலகட்டத்தில் பேஸ்புக் உலகம் முழுவதும் பல்வேறு புதிய பொருட்களை ஷாப்பிங்-கிற்காகப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இதேபோல் பல டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பேஸ்புக்-ல் அதிகளவிலான விளம்பரம் செய்துள்ள காரணத்தால் இக்காலகட்டத்தில் அமெரிக்க மற்றும் கனடா சந்தையில் வாடிக்கையாளர்கள் குறைந்தாலும் வருவாய் அதிகரித்துள்ளது.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மே 29ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்காகப் போராடிய மக்களைக் கொள்ளைக்காரர்கள் (Thugs) என்றும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் தயாராக உள்ளது என்றும், திருட்டு ஆரம்பித்தால், சுட ஆரம்பிக்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவிற்குப் பல கோடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பதிவை நீக்குவதற்காக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பேஸ்புக் நிர்வாகம். இதன் பின் பல முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக் உடனான விளம்பர வர்த்தகத்தை நிறுத்திக்கொண்டது.
மக்கள் போராட்டம்
பேஸ்புக்-இன் மெத்தனத்தை எதிர்த்து சமுக வலைத்தளத்தில் மக்கள் #StopHateforProfit என்ற போராட்டத்தை ஜூன் 19ஆம் தேதி கையில் எடுத்தனர். இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
மக்களின் இந்த #StopHateforProfit போராட்டத்தில் நியாயம் இருப்பதைப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் உணர்ந்துள்ளது. இதன் தொடக்கமாகக் கோகோ கோலா தனது விளம்பர வர்த்தகத்தை 30 நாட்கள் நிறுத்தியும், தனது விளம்பர திட்டத்தையும், பேஸ்புக்-ன் விதிகளை மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்தது.
கோகோ கோலா உடன் யூனிலீவர், தி நாத்ர் பேஸ், வெரிசோன், Hershey Co, ஹோண்டா அமெரிக்கா, Levi Strauss & Co, வெரிசோன் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக் உடனான விளம்பர வர்த்தகத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.