Recommended Video
2004-ம் ஆண்டில் இருந்து இன்று வரை ஃபேஸ்புக் எப்போதுமே அதிரடிகளைக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இப்போது அந்த அதிரடிகள் வரிசையில் ஒரு புதிய மைல் கல் எனச் சொல்லும் அளவுக்கு, ஒரு புதிய திட்டத்தில் களம் இறங்கி இருக்கிறது.
இனி ஸ்மார்ட்ஃபோன், டிவி, லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லட், ஐபாட் போன்ற எண்ணில் அடங்காத எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இனி ரிமோட் வழியாகவோ அல்லது டச் ஸ்கிரீன் வழியாகவோ தொடவோ வேண்டாம். அவ்வளவு ஏன் இனி பேச கூட வேண்டாம்.
அப்படி என்றால் எப்படித் தான் சாதனங்களை இயக்குவது..? எனக் கேட்கிறீர்களா..? நீங்கள் நினைத்தால் போதும். நீங்கள் நினைப்பது அப்படியே நடக்கும். அதாங்க மைண்ட் கன்ட்ரோல் என்று சொல்லிக் கேள்விப்பட்டது இல்லையா. நினைத்தாலே எல்லாம் நடப்பது. அதைத் தான் தற்போது ஃபேஸ்புக்கும் செய்யப் போகிறதாம்.
இதற்காக CTRL-labs என்கிற அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் விலை கொடுத்து வாங்க இருக்கிறார்களாம். இந்த CTRL-labs என்கிற நிறுவனம் தான் மூளை வழியாக எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இயக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறார்களாம்.
இதை ஃபேஸ்புக் நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மெண்டட் ரியாலிட்டி பிரிவின் தலைவர் ஆண்ட்ரூவ் போஸ்வொர்த் (Andrew Bosworth) உறுதி செய்து இருக்கிறார். CTRL-labs நிறுவனத்தை சுமார் 1 பில்லியன் வரை கொடுத்து வாங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதே போலத் தான் 2012-ம் ஆண்டு வாக்கில் புகைப்படங்களை அப்லோட் செய்து லைக்ஸைகளை அள்ளும் இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் வாங்கி இன்று இணையத்தையே கிரங்கடித்துக் கொண்டு இருக்கிறது என்பது நினைவுபடுத்திப் பார்த்துக் கொள்ளத்தக்கது.
சரி அதெப்படி..? மூளையால் மின்சார சாதனங்களை கட்டுப்படுத்த முடியும்..? எனக் கேட்கிறீர்களா... நம் கையில் ஒரே ஒரு ஃபிட்னெஸ் பேண்ட் அல்லது ஸ்மார்ட் வாட்ச் போல இவர்கள் கொடுக்கும் சாதனத்தை கட்டிக் கொண்டால் போதும். இந்த கையில் கட்டி இருக்கும் ஃபிட்னெஸ் பேண்ட் அல்லது ஸ்மார்ட் வாட்ச், நம் மூளையில் இருந்து வரும் எலெக்ட்ரிக் சிக்னல்களை, டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றி சம்பந்தப்பட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு சமிக்ஞையாக கொடுத்து இயக்க வைக்கும்.
இதைத் தான் நீங்கள் நினைத்தாலே நடக்கும் அளவுக்கு உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதற்கு எந்த ஒரு அறுவை சிகிச்சையும் தேவை இல்லையாம்.