ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய பரப்பளவினைக் கொண்ட பிரெஞ்சு குடியரசானது, ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது மிகப்பெரிய நாடாகும்.
அப்படிப்பட்ட பிரான்ஸின் பொருளாதாரம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூன்று வரலாற்று நிகழ்வுகளை சந்தித்துள்ளது. ஒன்று நெப்போலியன் சகாப்தம், இரண்டாவது பிரிட்டன் உடனான போட்டி, அதன் பிறகு அண்டை நாடுகளுடனான போட்டி இப்படி கடினமான காலகட்டத்தினை கடந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் அதன் பொருளாதாரம் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது நான்காவது முக்கிய அம்சமாக வரலாற்றில் இடம் பெறலாம். ஏன் நமக்கு அடுத்த சந்ததிகளில் இதை படிக்கக்கூடும்.
வளர்ச்சி முடக்கம்
இது குறித்து லைவ் மிண்டில் வெளியான செய்தியில், 1945 ஆம் ஆண்டில் இருந்து, பிரான்ஸின் பொருளாதாரம், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் 6% குறைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளததாக பேங்க் ஆப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து புள்ளி விவரங்களில் முன்னர் 2019ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 0.1% சுருங்கியிருந்ததாகவும், தற்போது அது 6% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மார்ச் கடைசி இரண்டு வாரத்தில் படு வீழ்ச்சி
ஆக பிரான்ஸின் பொருளாதாரம் தொடர்ச்சியாக, தற்போது இரண்டாவது காலாண்டிலும் எதிர்மறையான வளர்ச்சியுடன் மந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடி ஆழமடைந்து வருவதால், மார்ச் கடைசி இரண்டு வாரங்களில் பொரூளாதார நடவடிக்கைகளில் 32% சரிந்தன என்றும் பிரான்ஸின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
படு வீழ்ச்சி
இதே போன்ற செயல்பாட்டை கடந்த 1968ம் ஆண்டில் மே மாதத்தில் அரசியல் பதற்றம் காரணமாக காண முடிந்தது. எனினும் அந்த ஆண்டில் கூட சரிவு 5.3% ஆகத் தான் இருந்தது. ஆனால் தற்போதைய வீழ்ச்சி அதைவிட அதிகம் என்றும் அந்த நாட்டு மத்திய வங்கியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இவ்வளவு குறையுமா?
மேலும் பிரான்ஸ் கொரோனாவினால் பூட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும், பொருளாதார வளர்ச்சி 1.5% சரியும் என்று பிரான்ஸின் மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. அதோடு நிலைமை நாளுக்கு நாள் மோசமாக வீழ்ச்சி கண்டு கொண்டே செல்வதால், தாக்கம் இன்னும் கூட அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
லாக்டவுன் நீட்டிக்கப்படலாம்
இந்த நிலையில் தற்போதைய லாக்டவுன் மார்ச் 17 தொடங்கி ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவோ இன்று வரை குறைந்ததாக தெரிய வில்லை. ஆக கொரோனா தனது தாக்கத்தினை குறைக்காவிடில் இந்த லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.
இதெல்லாம் மோசமாக பாதிப்பு
ஏற்கனவே பிரான்ஸில் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவினால் போக்குவரத்து, கட்டுமானம், உணவகங்கள், உறைவிடம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வங்கி பட்டியலிட்டுள்ளது. இன்றைய நிலையில் 1,09,069 பேர் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ளனர். மேலும் 10,328 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ இந்த கொரோனா..