டெல்லி: உலக நாடுகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் தொடர்ந்து வரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் சீனாவின் முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனங்களான ஜியோமி, மோட்டோரோலா ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் தங்களது உற்பத்தியைத் துவங்கிய நிலையில், தற்போது சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜியோனி நிறுவனம் 50 மில்லியன் டாலர் முதலீட்டுடன் தனது மொபைல் போன் உற்பத்தியைத் துவங்க உள்ளது.
முதலீடு
இந்தியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பணிகளைத் துவங்க தனியார் நிறுவனங்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது ஜியோனி. இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் 50 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய ஜியோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உற்பத்தி நிறுவனம்
ஜியோனி நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் படி இந்தியாவில் தனது மொபைல் உற்பத்தியைச் செயல்படுத்த பாக்ஸ்கான் மற்றும் டிக்சன் நிறுவனத்தை நியமிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜியோனி - பாக்ஸ்கான்
பாக்ஸ்கான் நிறுவனம், ஜியோனி நிறுவனத்தின் எப் சீரியஸ் மற்றும் பி சீரியஸ் மாடல் போன்களைத் தயாரிக்க உள்ளது, அதேபோல் டிக்சன் நிறுவனம் பியூச்சர் போன் மற்றும் பிற ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ள நிலையில், வெகு குறைவான மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்பாடு உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வளர்ச்சி மிகுந்த இந்திய சந்தையைக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
கடந்த 3 வருடத்தில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மென்பொருள்
ஜியோனி இந்திய சந்தையில் தனது நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மென்பொருள் வடிவமைப்பு ஆகிய முக்கியப் பிரிவுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.