மும்பை: "சாமி, அந்த Godrej பீரோலருந்து நம்ம சொத்து பத்தரத்தை கொண்டு வாங்க.." என சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம். அந்த Godrej பீரோவைத் தயாரித்தவர்கள் தான் இப்போது அண்ணன், தம்பி, தங்கச்சி மகன், அண்ணன் மகள் என சொத்தை பிரித்துக் கொள்ளப் போகிறார்கள்.
சிந்தால் சோப், சேவிங் க்ரீம், தொடங்கி கை கழுவும் ஜெல், கொசுவுக்கு கருப்பு ஹிட், கரப்பானுக்கு சிவப்பு ஹிட், தூங்கும் போது குட் நைட் கொசு வத்தி வரை Godrej கை வைக்காத பொருட்களே கிடையாது.
இதற்குள் பீரோ, ஜெர்ஸி பால், ரியல் எஸ்டேட், கால்நடைகளுக்கான உணவு, பயிர் பாதுகாக்கும் பூச்சி கொள்ளிகள், விவசாய ரசாயனங்கள், பாமாயில் என பட்டியல் தொடரி போல் தொடர்கிறது.
கம்பெனியும் லாபங்களும்
Godrej Industry, Godrej consumer, Godrej Agrovet, Godrej properties, Astec Lifesciences என ஐந்து முக்கிய Godrej நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு சிறப்பாக வர்த்தகமாகி வருக்கின்றன.
31 மார்ச் 2019 நிலவரப்படி, இந்த ஐந்து Godrej நிறுவனங்கள் ஈட்டும் வருமானம் சுமார் 32,000 கோடி ரூபாய்.
இந்த ஐந்து Godrej நிறுவனங்களின் நிகர லாபம் மட்டும் சுமார் 3,500 கோடி ரூபாய்க்கு மேல்.
இந்த ஐந்து Godrej நிறுவனங்களின் பங்குகளை ஜூன் 26, 2019 அன்றைக்கான விலையில் விற்றால் சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாய் கைக்கு கிடைக்கும்.
கருத்து வேறுபாடு
இதுவரை வெளி உலகுக்கு இவர்கள் சொத்துக்காக அடித்துக் கொள்வது போலவோ அல்லது ஒருவர் மீது ஒருவர் வெறுப்பாக இருப்பது போலவோ செய்திகள் வெளியாக வில்லை. ஆனால் Godrej பரம்பரையில் இருப்பவர்கள், இனியும் ஒரு சிலர் கீழ் வாழ விரும்பாமல், தங்கள் போக்கில் தங்கள் பிசினஸ்களை எடுத்துச் செல்ல ஆசைப்படுவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சரி குடும்ப பிரச்னைக்கு வருவதற்கு முன் ஒரு சிரிய த்ரோ பேக் போவோமா..? வாங்க..!
த்ரோ பேக்
1897 - Ardeshir மற்றும் Pirojsha சேர்ந்து சில பிசினஸ் செய்து தோற்றுப் போய் கடைசியாக ஒரு பூட்டுக் கம்பெனி தொடங்குகிறார்கள். வியாபாரம் செழிக்கிறது. பிசினஸ் வளர்கிறது. Godrej பெயரும் நிலைக்கிறது. இவர்கள் தான் Godrej கம்பெனியின் நிறுவனர்கள்
1918 - உலகின் முதல் சைவ சோப் (விலங்கு கொழுப்பு இல்லாத சோப்) தயாரித்து சந்தையைல் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள்.
1923 - இந்தியப் புகழ், Godrej பீரோ தயாரிக்கத் தொடங்குகிறார்கள். சக்கை போடு போடுகிறது
சுதந்திரத்துக்குப் பிறகு
1951 - சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலுக்கு வாக்கு பெட்டியைச் செய்து கொடுக்க டெண்டர் கொடுக்கப்படுகிறது.
1952 - சிந்தால் சோப் தனி பிராண்டாக ஃப்ரெஷ்ஷாக தொடங்கப்படுகிறது.
1958 - குளிர்சாதனப் பெட்டி தயாரித்த முதல் இந்திய நிறுவனம் எனும் புகழை அடைகிறார்கள்.
1974 - திரவ ஹேர் கலர் கொண்டு வருகிறார்கள்
1990 - ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கால் வைக்கிறார்கள்.
உலகமயமாக்களுக்குப் பிறகு
1991 - விவசாயம் சார்ந்த வியாபாரத்தில் கால் வைக்கிறார்கள்.
1994 - கொசுவத்தி மேட் (Good Night Mat) தயாரிக்கத் தொடங்குகிறார்கள். இன்று வரை நல்ல லாபம் பார்க்கிறார்கள்.
2008 - சந்திராயன் 1 -க்கு லாஞ்ச் வெஹிகல் மற்றும் லூனார் ஆர்பிட்டர் தயாரித்து இன்று வரை தங்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் Godrej குடும்பத்தினர்கள்.
வாரிசுகள் பட்டியல்
Ardeshir - Pirojsha என இரண்டு பேர் சேர்ந்து Godrej நிறுவனத்தை 1897-ல் தொடங்குகிறார்கள். இதில் Ardeshir-க்கு குழந்தைகள் இல்லாததால் முழு வியாபாரமும் கம்பெனியும் Pirojsha-க்கு வருகிறது.
Pirojsha-க்கு 4 குழந்தைகள். சொரப், தோஷா, புர்ஜட், நவால். இதில் புர்ஜரின் மகன் தான் ஆதி கோத்ரெஜ். இப்போதைய Godrej நிறுவனத்தின் தலைவர். மேர்படி குடும்ப வாரிசுகள் விவரத்தை மேலே படத்தில் பார்க்கலாம்.
(படம்: Godrej)
இரு துருவம்
பங்காளிகளில், Godrej குழுமத்தின் தலைவராக இருக்கும் ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரின் உடன் பிறந்த சொந்த தம்பி நாதிர் கோத்ரெஜ் இருவரும் ஒரு குழுவாக பிரிகிறார்கள். இவர்கள் Burjour-ன் மகன்கள்.
ஜம்சைத் மற்றும் ஸ்மிதா ஒரு குழுவாகப் பிரிகிறார்கள். இவர்கள் Naval-ன் பிள்ளைகள்.
சுருக்கமாக Burjor-ன் வரிசுகள் தனியாகவும், Naval-ன் வாரிசுகள் தனியாகவும் பிரிகிறார்கள். ஆதி குரூப், ஜம்சைத் குரூப் என பிரித்துக் கொள்வோம்.
ஆதி குரூப் தயாரிப்பு
ஆதி கோத்ரெஜ் கொஞ்சம் ஜாலி டைப். அவ்வப் போது நல்ல உலக சுற்றுலா போவது, சர்வதேச சமூகத்துடன் உறவாடுவது, சமூகத்துக்காக வாழ்வது (Social Life) என ஒரு மாதிரியான டைப். ஆனால் பிசினஸில் படு ஷார்ப். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கமாடிட்டி சந்தையை கசக்கி கம்கட்டில் வைத்திருப்பவராம். சகோதரர் நாதிர் கோத்ரெஜ், ஆதியோடு இணக்கமாக பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆதி கோத்ரெஜ்-ன் அனைத்து வாரிசுகளும் (1 மகன் மற்றும் 2 மகள்கள்) எல்லோருமே பிசினஸில் ஒரு கை போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதி கோத்ரெஜ்ஜின் மகன் பிரோஜ்ஷாவின் தலைமையில் Godrej ப்ராபர்டீஸ் நிறுவனம் நன்றாக வளர்ந்து வருகிறதாம். அதற்கு அந்த நிறுவன பங்கு விலையே சாட்சி.
ஜம்சைத் குரூப்
நவாலின் மகன் ஜம்சைத், ஆதிக்கு நேர் எதிராம். கடின உழைப்பாளி, வெளியில் அதிகம் தன்னை காட்டிக் கொள்ளாதவர். சமூகத்துக்காக (Social Life) எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. தான் உண்டு தன் வேலை உண்டு டைப்பாம். கடல் பயணம் பிடிக்கும் அவ்வளவு தான். ஜம்சைத்தின் பிள்ளைகள் யாரும் பிசினஸில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்களாம். ஆகையால் ஜம்சைத் தன் சகோதரி ஸ்மிதாவின் மகள் நைரிகாவை பிசினஸுக்கு தயார் செய்து வருவதாக சில செய்திகள் கசிகின்றன. நைரிகா ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஒரு கம்பெனி
தற்போது ஏறத்தாழ அனைத்து Godrej குடும்ப உறுப்பினர்களும், அனைத்து கோத்ரெஜ் குழும நிறுவனங்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குகளை வைத்திருக்கிறார்கள். அதோடு இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்கள். ஆக இங்கு பிரச்னை இல்லை. Godrej & Boyce என்கிற நிறுவனத்தில் தான் பிரச்னை தொடங்குகிறது. ஆதி, நாதிர், ஜம்சைத், ஸ்மிதா ஆகியோர்கள் இந்த நிறுவனத்தில் தலா 9 சதவிகிதம் என 36 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
ரிஷத் இந்த Godrej & Boyce நிறுவனத்தில் 10 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்.
27 சதவிகித பங்குகளை Godrej இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வைத்திருக்கிறது.
இன்னொரு 24 சதவிகிதத்தை Godrej குடும்ப ட்ரஸ்ட் பெயரில் இருக்கிறது. ஏன் இந்த நிறுவனத்துக்கு மட்டும் இத்தனை ஸ்பெஷல். எப்படி இந்த நிறுவன பங்குகளால் பிரச்னை வருகிறது.
நில மதிப்பு
மும்பை நகரத்தில் ஒரு ஏக்கர் (சுமார் 43,500 சதுர அடி) நிலத்தின் விலை மிக மிக குறைந்தபட்சமாக 30 கோடிக்காவது போகும். இந்த Godrej & Boyce நிறுவனம் தான் மும்பை நகரத்திலேயே அதிக நிலங்களை வைத்திருக்கும் நிறுவனம் என அரசாங்கப் பதிவேடுகளே சொல்கின்றன. Vikhroli, Nahur, Kurla என பல இடங்களில் இருக்கும் மொத்த நிலங்களின் அளவு சுமார் 3,400 ஏக்கர். 1 ஏக்கருக்கு 30 கோடி ரூபாய் என்றால் 3400 * 30 = 1,02,000 கோடி ரூபாயாவது தேறும். அதனால் தான் இந்த 3,400 ஏக்கர் நிலம் பிரச்னையாக இருக்கிறது. ஏறத்தாழ எல்லோருக்கும் 9 சதவிகித பங்கு இருக்கிறதே பிறகு என்ன பிரச்னை..?
உரிமை இருக்கே
தற்போது ஆதி கோத்ரேஜின் மகன் பிரோஜ்ஷா நடத்தும் Godrej properties நிறுவனம், இந்த Godrej & Boyce நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் தான் ரியல் எஸ்டேட் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். நல்ல லாபம் பார்க்கிறார்கள். இந்த இடத்தில் தான் முரண் தொடங்கி இருக்கிறது என செய்திகள் சொல்கின்றன. இதற்கு மேல் என்ன கேள்வி எழுப்பி இருப்பார்கள் என நம்மால் யூகிக்க முடிகிறது. இந்த Godrej & Boyce நிறுவனத்தில் எல்லோர் பெயரிலும் பங்குகள் இருக்கிறது. எல்லோருக்கும் அந்த 3,400 ஏக்கர் நிலத்தில் உரிமை இருக்கிறது. ஆனால் ஒரு வாரிசு மட்டும் அதில், அவர் இஷ்டத்துக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தால் எப்படி..? என கேள்வி எழுந்திருக்கலாம். சொத்தைப் பிரிக்கச் சொல்லி கேட்கிறார்கள். விக்ரோலி பகுதியில் இருக்கும் 1000 ஏக்கர் நிலத்துக்கு கோத்ரெஜ் குடும்பத்துக்குள்ளேயே மூன்றாம் நபர்களை வைத்து 2011-ல் பஞ்சாயத்து பேசி இருக்கிறார்கள். ஆனால் ஒத்துவரவில்லையாம். இப்போது மீண்டும், கோத்ரேஜ் குடும்பத்தில், சொத்துப் பிரச்னை மெலிதாக தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.
இரு தரப்பும் தயார்
இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் நிமேஷ் கம்பானி (Nimesh Kampani) மற்றும் வழக்கறிஞர் ஜியா மொதி (Zia Mody)ஆகியோர்கள் ஜம்சைத் குருப்புக்கு சாதகமாக பேச மத்தியஸ்தர்களாக களம் இறங்க இருக்கிறார்களாம்.
அதே போல் ஆதி குரூப் தரப்பில் கோட்டக் மஹிந்திரா பேங்கின் தலைவர் உதய் கோட்டக் மற்றும் வழக்கறிஞர் சிரில் ஸ்ரோஃப் (Cyril Shroff)-ம் மத்தியஸ்தர்களாக களத்தில் இறங்க இருக்கிறார்களாம்.
பிளவில் வளர்ந்தால் சரி
உலகம் எத்தனையோ பெரிய பிசினஸ் ஜாம்பவான்களை சின்ன சின்ன பங்காளி பிரச்னைகளில் இழந்திருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் அம்பானி சகோதரர்கள். அண்ணன் அம்பானி உலகின் டாப் நிறுவனங்களில் ஒன்றை நடத்தும் ஒருவராக இருக்கிறார். ஆனால் தம்பி அம்பானி கோடீஸ்வரர்கள் பட்டியலில் கூட இல்லாமல் எங்கோ தரை தட்டி தடுமாறிக் கொண்டிருக்கிறார். இன்று வரை வாங்கிய கடன்களை முழுமையாக அடைத்த பாடில்லை. அப்படி ஒரு கொடூரமான, பிளவுக்குப் பிறகான வீழ்ச்சி Godrej குழுமத்தில் நடக்காது என நம்புவோம்.