இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் ஐடி மற்றும் டெக் நிறுவன ஊழியர்கள் கொரோனா தொற்று, லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாகக் கடந்த 1.5 வருடமாக வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் பலர் செலவுகளைக் குறைக்கவும், குறிப்பாக வீட்டு வாடகையைக் குறைக்கவும் பெரு நகரங்களில் இருக்கும் தங்களது வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.
கொரோனா காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றினாலும் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் இல்லாத காரணத்தால் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பலருக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்த இரண்டையும் கணக்கில் கொண்டு தற்போது அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள், பேடிஎம், ட்விட்டர், ரெட்டிட், ஜில்லோ ஆகியவை தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க (தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து குறைப்பு) முடிவு செய்துள்ளது.
கொரோனா காலத்தில் ஊழியர்களின் முடிவு
அமெரிக்காவில் இந்தக் கொரோனா காலத்தில் பல ஊழியர்கள் பெரு நகரங்களில் இருந்து அருகில் இருக்கும் சிறிய நகரங்களுக்கு நிரந்தரமாகச் சென்றுள்ளனர். இதுகுறித்து தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே விளக்கமான செய்தியை வெளியிட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காகவும், நகர நெரிசல்களில் இருந்து வெளியேறி அமைதியான வாழ்க்கையை வாழ இந்த முடிவுகளை எடுத்துள்ளனர்.
சிறிய நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி
அமெரிக்காவில் பெரு நகரங்களை விட்டு ஊழியர்கள் சிறிய நகரங்களுக்குச் சென்ற காரணத்தால், கடந்த 1.5 வருடத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சிறிய நகரங்களில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இதனால் கட்டுமானம் முதல் நுகர்வோர் சந்தை வரை அனைத்து தரப்பினரும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றனர்.
கூகுள் எடுத்த முடிவு
இந்தச் சூழ்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக விளங்கும் கூகுள் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் நிரந்தரமாக Work From Home செய்ய அனுமதி வாங்கியவர்கள், நகரங்களை விட்டு வெளியேறி தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி
இந்த அறிவிப்பு கூகுள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் கூகுள் நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்கள் அதில் அதிகம் பாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த அமெரிக்கச் சிலிக்கான் வேலி நிறுவனங்களும் இந்த முறையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் நிறுவன ஊழியர்கள்
பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவன ஊழியர்களும் செலவுகள் மிகவும் குறைவாக இருக்கும் நகரங்களுக்குச் சென்றுள்ளனர். எனவே கூகுள் நிறுவனத்தைப் போலவே பேடிஎம், ட்விட்டர், ரெட்டிட், ஜில்லோ ஆகிய நிறுவனங்களும் ஊழியர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் Work from Home ஸ்டேடஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சம்பளத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
நிறுவனங்களுக்கு லாபம்
இது ஊழியர்களுக்குப் பெரும் இழப்பாக இருந்தாலும், நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் ஓரே மாதிரியான பார்வை முன்வைக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையைப் பூர்த்தி செய்கிறது. இதனால் அனைத்துத் தரப்பு ஊழியர்களின் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யப்படுவது மட்டும் அல்லாமல் பணத்தை நியாயமாகப் பயன்படுத்தவும் முடியும் என நிறுவனங்கள் கூறுகிறது.
புதிய சம்பள கணக்கீடு முறை
இப்புதிய சம்பள கணக்கீடு முறையை ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகக் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஒரு கால்குலேட்டரை உருவாக்கியுள்ளது. இதில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தங்கியிருக்கும் இடம், தொலைவு ஆகியவற்றை வைத்துக் கணக்கிட முடியும்.
10 சதவீதம் வரை சம்பள குறைப்பு
இதன் அடிப்படையில் கூகுள் ஊழியர் நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றினால் தற்போது வாங்கும் சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. இது தினசரி நீண்ட தூரம் பயணித்து வரும் ஊழியர்களுக்குத் தூரத்தின் அடிப்படையில் குறைக்கப்படுகிறது.
Location அடிப்படையில் சம்பளம்
கூகுள் மட்டும் அல்லாமல் அனைத்து நிறுவனங்களும் பெரும்பாலும் Location அடிப்படையில் தான் சம்பளத்தை அறிவிக்கும். உதாரணமாக இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் இருக்கும் சம்பள வித்தியாசம் தான் அமெரிக்காவிலும்.
சம்பளத்தில் இருக்கும் வித்தியாசம்
பெருநகரங்களில் செலவுகள், வாடகை என அனைத்துமே அதிகம், இதனால் பெரு நகரங்களில் இருக்கும் ஊழியர்களுக்குக் குறைவான சம்பளத்தை அளிக்கும். இதுவே சிறிய நகரங்களில் செலவுகள் குறைவு என்பதால் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் குறைவான சம்பளத்தை அளிக்கும்.
சிறிய நகரங்களுக்கு விரிவாக்கம்
இதை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள் சிறிய நகரங்களில் தனது அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டு வருகிறது. ஹெச்சிஎல் ஏற்கனவே மதுரையில் அலுவலகத்தைத் துவங்கி இயங்கி வரும் நிலையில் பிற நிறுவனங்களும் தற்போது இந்த மாடலை பின்பற்றத் துவங்கியுள்ளது.
ஊழியர்களால் மறுக்க முடியாது
கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்களால் மறுக்க முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கச் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களும் இதே முடிவை எடுக்கும் காரணத்தால் அனைவரும் இந்தப் பாதிப்பு எதிர்கொள்ள வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இந்தியாவில் என்ன நிலை
இந்தியாவிலும் கொரோனாவுக்குப் பின்பு பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் சலுகையைக் கொடுப்பதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் சம்பளம் குறைக்கப்படுமா..?